October 28, 2009

மதிசூடி துதிபாடி-2

ஆற்றையுன் செஞ்சடைக் கற்றையுள் வைத்தவா
நீற்றனென் றுன்னெழில் நெஞ்சினில் போற்றுவேன்
ஏற்றனுன் நாமமே என்றுமென் தாரகம்
சாற்றுகின் றேன்மலர்த் தாளினைப் பற்றியே!

October 21, 2009

மதிசூடி துதிபாடி!

பாதியன் வேதியன் பக்தரெம் நாயகன்
சோதியன் பேர்புகழ் சொல்லிடக் கூடுமோ
ஆதியென் றொன்றிலான் அந்தமென் றொன்றிலான்
நாதியென் பேனவன் நற்றுணைப் பாதமே!

நீலகண்டனை ஏத்து மனமே!-- 3.

நுரையுடன் தோன்றும் நீர்க்கு மிழியாகும் வாழ்வில்
...நுதல்மேவு கண்ணன் தொழுவாய்!
இரைதரும் பாறைக் குள்ளும் சிறுதேரை வாழ
...இயல்பாகும் ஈசன் அருளே!
விரைமலர் மாலை மார்பில் அணியாகக் கொண்டு
...வினையாவும் தீர்க்கும் பரமன்
வரைமகள் நேயப் பங்கன் ,மணிநீல கண்டன்
...மலர்த்தாளை ஏத்து மனமே!

September 14, 2009

நீலகண்டனை ஏத்து மனமே



நல்லிசை பாடல் நாளும் சிவநாமம் சொல்லும்
...நமவாதை யாவு மழியும்
தொல்வினை யாலே தோன்றும் துயரான தென்றும்
...தொலைந்தோடும் ஈச நருளால்
கல்லெனும் போதும் பூவாய் அணிந்தாளும் நம்பன்
...கதியாகி அன்பில் அணைவான்
வல்லியை வாமம் கொண்ட மணிநீல கண்டன்
...மலர்த்தாளை ஏத்து மனமே!



மடலவிழ் பூவில் கோத்த அழகான மாலை
...மணமோடு தோளில் அசைய,
சுடலையின் நீறு பூசி நமையாளும் ஐயன்
...துணயாகி நாளும் அருள்வான்!
நடமிடு கோலம் காணும் அடியாரின் அன்பன்
...நலமாகும் வாழ்வு தருவான்!
மடமயி லாளின் பங்கன் மணிநீல கண்டன்
...மலர்த்தாளை ஏத்து மனமே!