January 23, 2010

மதிசூடி துதிபாடி! - 4



பூலா வனத்துப் பெருமானே!
-----------------------------

சுகமும் துயரும் இருவினையாய்த்
...தொடரும் பந்தத் தளைகளறத்
திகழும் உனது நிழல்தருமே
...செறிந்த பக்தி நெறிதனையே!
இகமும் பரமும் உனைநினைக்கும்
...இதமாம் பதமே அளித்தருள்வாய்!
புகழும் புகலும் தரும்பரமா!
...பூலா வனத்துப் பெருமானே!

சுதியில் இசைந்த இசைவடிவே!
...சுயம்பு லிங்கேஸ் வரஹரனே!
மதுவின் இனிப்பில் சுவைவருமோ?
...மதுரம் தருமுன் அஞ்செழுத்தே!
எதுவும் வசமுன் அருள்நிழலில்
...இகமாய்ப் பரமாய்த் திகழ்பவனே!
பொதுவில் நடனம் புரிந்தருளும்
...பூலா வனத்துப் பெருமானே!

மதிசூடி துதிபாடி! - 3

பூலா வனத்துப் பெருமானே!
-----------------------------

சிரத்தில் கங்கை மதியணிந்து
...திகழும் மார்பில் சரமிலங்க
கரத்தில் மழுமான் அழலுடனே
...கனகச் சபையில் நடமிடுவாய்!
வரத்தை அருளும் தயையுருவே!
...மனத்துள் நிறைவைத் தருநிதியே!
புரத்துள் உயிராய் விளங்கிடுவாய்!
...பூலா வனத்துப் பெருமானே!

(புரம்=உடல் என்ற பொருளில்.)

பாவாய்ப் பண்ணாய் அடியவரும்
...பணிந்து செய்தத் திருமறையை
நாவால் சொல்ல மனமுருகி
...நலமே அளிக்கும் எனதிறைவா!
காவாய் என்றே இறைஞ்சிடுமுன்
...கருணைக் கடலாய் அருள்தருவாய்!
பூவார் பொழில்சூழ் திருத்தலமாம்
...பூலாவனத்துப் பெருமானே!

மதிசூடி துதிபாடி! - 2

பூலா வனத்துப் பெருமானே!
--------------------------

கல்லார் கற்றார் எவரிடத்தும்
...கருணை பொழியும் அருநிதியே!
இல்லா இடமென் பதுமிலையே
...ஈசா! எங்கும் நிறைந்திருப்பாய்!
சொல்லாய் ஒலியாய்த் திகழுமுனைத்
...துதித்தே கேட்பேன் உனதடிக்கீழ்ப்
புல்லாய்ப் பிறக்கும் வரமருள்வாய்!
...பூலா வனத்துப் பெருமானே!

பித்தன் நீயென் றுரைத்தவரைப்
..பேணிக் காத்த திறம்சொலவோ?
சித்தம் நிறைவாய் உனதருளில்
...சித்தித் திருக்க அருளுவையோ?
கத்தும் குயில்கள் இசைபொழியும்
...கமழும் வண்ணப் பொழிலுனக்காய்ப்
புத்தம் புதுப்பூச் சொரிந்திலங்கும்
...பூலா வனத்துப் பெருமானே!

January 17, 2010

மதிசூடி துதிபாடி! - 1

பூலா வனத்து பெருமானே!
-------------------------


ஆதி அந்தம் எதுவுமில்லை
...அரனே! அரவ மணிந்தவனே!
சோதி அழலாய் ஒளிர்பவனே!
...தூய அன்புக்(கு) உருகிடுவாய்
ஓதித் துதிக்கும் மறைகளுமே
...உன்னை முழுதாய் அறிந்ததில்லை!
பூதி யடைந்தோர் தனியிறைவா!
...பூலா வனத்து பெருமானே!

கண்ணின் மணியாய் ஒளிர்பவனாம்
...கனிவாய் அருளைத் தருபவனாம்
எண்ணித் துதிப்போர்ப் பரவசத்தில்
...இசைந்தே இருக்கும் இறைவனவன்!
மண்ணில் நிகழும் துயரனைத்தும்
...மாற்றி நலமே விளைவிக்கும்
புண்ணி யஞ்சூழ் மலர்க்கழலோன்
...பூலா வனத்துப் பெருமானே!

தெய்வத் தருவின் நிழலினிலே
...சிவனாய்த் தோன்றும் அருளுருவே!
வெய்ய வினையாம் பவமறுக்கும்
...விமலா உனையே தொழுதிடுவேன்!
ஐய! நின் தாள் அடியவரை
...அணைத்துக் காக்கும் அடைக்கலமாம்!
பொய்கை யுடன்பூம் பொழிலிலங்கும்
...பூலா வனத்துப் பெருமானே!

அன்னே! அழியா அருளமுதே!
...அன்பே சிவமாய்த் திகழுருவே!
மன்னே! மணியே! மயலழிக்கும்
...மறையே! பொருளே! புகலடைந்தேன்!
என்னே! உன்றன் எழில்நடனம்
...இறைவா! எண்ணிக் களித்திருப்பேன்!
பொன்னே! நிதியே! கவினிலங்கும்
...பூலா வனத்துப் பெருமானே!