September 25, 2010

எண்ணிய(து) எய்துவர்!

 

(அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)

சிந்தையில் பரமனின் அன்பைத்
...தேக்கிநெக் குருகிடச் செய்யும்
செந்தமிழ் வாசகத் தேனில்
...திகழ்மணி வாசகர் உய்ந்தார்!
அந்தமொன் றென்றிலா ஈசன்
...அருளினை வேண்டிடு வார்கள்
எந்தவொர் ஐயமும் இன்றி
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ....1

 

நீற்றினில் துலங்குவெண் மேனி
...நிலவுடன் சடையினில் கங்கை
ஆற்றினைக் கொண்டவன் தன்னை
...அப்பனென் றடியவர் அன்பால்
போற்றிடும் பாடலுக் கென்றே
...புரிந்திடும் ஆடலைச் செய்யும்
ஏற்றனின் அருள்திறம் கொள்வார்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….2

 

சுடலையில் நடமிடு பாதம்
...தூதென சுந்தரர்க்(கு) ஏகும்
கடலெழு விடத்தையும் ஏற்கும்
...கருணையில் அமுதெனக் கொள்வான்
குடமிடு சாம்பலும் மங்கைக்
...கோலமாம் படியருள் செய்வான்
இடபனாய் அருள்பவன் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….3

 

நிறைவினை அளித்திடும் தாளை
...நிலையெனும் அடியரின் மெய்யன்
கறையுறு கண்டமும் கொண்டான்
...கரமதில் மான்மழு ஏந்திக்
குறையினைத் தீர்த்துயிர் காக்கும்
...குணநிதி மங்கையொர் பாகன்
இறையவன் புகழ்சொலும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….4

 

பெரும்பவத் துயரினை மாய்க்கும்
...பிஞ்ஞகன் அருளினை வேண்டி
விரும்பிடும் அடியரைக் காக்கும்
...விகிர்தனின் அருமையென் சொல்ல?
சுரும்புகள் ஆர்த்தெழும் சோலை
...சூழ்தளி மேவிடும் நாதன்
இருங்கழல் பற்றிடும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….5

சுரும்பு=வண்டு

 

தெழிதரும் முழவொடு பம்பை
...திகழுறு விரிசடை யோடே
எழிலுடை நுதல்விழி யானின்
...இணையிலா நடமிடு பாதம்
அழிவினில் ஆழ்த்திடும் ஊழை
...அண்டிடா(து) அருள்தரும்;விண்ணின்
இழிநதி சடையனின் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….6

தெழி=ஒலி.

 

துன்புடன் இன்பமும் சூழ்ந்தே
...தொடரிரு வினைதரு வாழ்வில்
மன்பதை உலகினை காக்கும்
...வரமெனும் அஞ்செழுத்(து) ஓதி,
"என்பரம் என்கதி நீயே!"
...என்றிட அருளினைக் காட்டும்
இன்பனை வழிபடும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….7

 

காய்ந்திடு சினமெழக் காலன்
...கலங்கிடச் சிறுவனைக் காத்தான்
ஓய்ந்துடல் வீழ்ந்திடும் போதில்
...உறுதுணை எனவரும் ஐயன்
பாய்ந்திடு நதிசடை ஏற்றான்
...பவமதைத் தூர்த்தருள் பார்வை
ஏய்ந்தவன் தாள்தொழும் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ....8

 

விரிசடை மேவிடும் கொன்றை
...வெண்மலர் தும்பையும் சூடி
கரியதன் தோலுடை யாகக்
...கண்கவர் நீறணி கோலன்
அரிஅயன் தொழும்தழல் ஆனான்
...அளவிலா அருள்தரும் வள்ளல்
எரிசுடு கானரன் அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! ….9

 

துளியவன் நினைவுகொண் டாலும்
...தொடர்வினைத் தீர்த்திடும் ஈசன்
தளியமை அடியரின் உள்ளம்
...தங்கிடும் அரனுமை நாதன்
ஒளிவெளி நீர்புவி காற்றாய்
...உயிர்களைக் காத்திடும் பெம்மான்
எளியனின் தாள்நினை அன்பர்
...எண்ணிய(து) எய்துவர் தாமே! …10

September 08, 2010

திருஓண காந்தன் தளிசேர் நெஞ்சே!

 

எண்சீர் விருத்தம் - '8 மா' வாய்பாடு.
1
சீர்களில் மோனை
.

தலமும் புகழும் இசைக்கும் அன்பர்
...
சகல உயிரின் உய்வை எண்ணி
மலரும் புகைகொள் தூபம் கொண்டு
...
மனதும் நெகிழப் போற்றி னாரே!
விலகும் வினையும் தூசைப் போல
...
விடையோன் அருள்வான்!ஓமென் றோதும்
ஒலியில் நிறைவாய் நிற்கும் வேதன்
...
ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே! … 1

 

சுற்ற மென்றும் சொந்த மென்றும்
...
சூழும் பந்தம் காடு மட்டும்
நற்ற வன் தாள் பற்றிக் கொண்டால்
...
நன்மை என்றும் வந்து சேரும்
பெற்றம் ஏறும் பெம்மான் போற்றின்
...
பேறாம் உய்வை அருளும் அன்பில்
உற்ற புகல்தந் தாளும் ஈசன்
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே. … 2

 

மண்டை யோட்டில் பலியைத் தேரும்
...
மங்கை பங்கன் வேடம் ஏற்றிக்
கொண்ட அன்பில் கூடும் உணர்வில்
...
கும்பிட் டிறைவன் தாளை எண்ணும்
தொண்ட ரென்றும் தமிழ்த்தேன் பூவாய்த்
...
தொடுத்த பாக்கள் வரமாய்த் தோன்றி
உண்ட ருளென்னும் எம்மான் ஈசன்
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 3

 

விரியும் சடையில் கொன்றை தும்பை
...
விண்நீர் கங்கை மதியும் சூடி
கரியின் தோலை உடையாய் ஏற்கும்
...
கடவுள் தானாய் அடிமை கொண்ட
பரிவின் திறத்தை நாவ லூரர்
...
பதிகத் தாலே போற்றி செய்தே
உரிய அன்பில் கண்டு கொண்ட
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 4

 

படையாய் வருத்தும் ஊழை வெல்லும்
...
பாதை யொன்றைச் சொல்வேன்! அன்பைக்
கொடையாய் அருளும் ஐயன் பாதம்
...
குறித்தே மலர்பூ மாலைச் சாற்றி
விடையா! விமலா! என்றே போற்றின்
...
வினையைத் தீர்க்கும் மங்கை வாமம்
உடையான் நாவ லூரர் அன்பன்
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 5

 

கோதும் பழியும் கூட்டும் வாழ்வில்
...
குறியாய் பொருளென் றொன்றே கொள்வாய்
ஏதுன் இலக்கு? சொல்வேன் கேளாய்
...
ஏதம் செய்யும் துன்ப வெள்ளம்
மோதும் பவமாம் ஆழி வற்றும்
...
முக்கண் பரமன் பாதம் பற்றி,
ஓதும் நாவ லூரர் அன்பன்
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 6

கோது =குற்றம்
ஏதம்=துன்பம்

 

சுமக்கும் பார மல்ல யாக்கை
...
துணைவன் உறையும் அன்புக் கோவில்!
அமைக்கும் மேடை தன்னில் நம்மை
...
ஆட்டு விக்கும் ஆடல் மன்னன்!
இமைக்கும் கண்ணின் ஒளியாய்க் காக்கும்
...
இமயத் தலைவன் ஈடொன் றில்லான்!
உமைக்கன் பிலிடம் தந்தான் மேவும்
...
ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே! … 7

 

விலையில் லாத இறையன் பேதான்

...வினையைப் போக்கும் இன்பம் சேர்க்கும்

வலையில் சிக்கும் மீனைப் போல

...வலிய மாயை தன்னில் வீழா

நிலையைத் தந்துய் விக்கும் வள்ளல்

...நினைந்து நாளும் துதித்துப் போற்றின்

உலைவை தீர்க்கும் உமையாள் பங்கன்

...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 8

 

உலைவு=சஞ்சலம்

 

பதத்தை மனத்தில் பதித்துப் பாடல்
...
படைத்து அருளை நினைக்கும் அன்பர்க்(கு)
இதத்தை அளித்துக் காக்கும் ஐயன்
...
இதயம் தன்னைக் குடிலாய்க் கொள்வான்
விதத்தில் வேட மேற்று ஆளும்
...
விகிர்தன் எமனை பக்த னுக்காய்
உதைத்துக் கருணை செய்த ஈசன்
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 9

 

மயலில் மூழ்கி இறையை எண்ணார்
...
மயர்வைப் போக்கும் குருவாய் வந்தே
துயரில் ஆழ்த்தும் ஊழை வெல்லும்
...
துணிவைத் தந்தே அருளும் தெய்வம்
நயனம் நுதலில் உடைய ஈசன்
...
நதியும் மதியும் உமையும் கொண்டான்
உயரும் தழலாய் ஓங்கி நிற்பான்
...
ஓண காந்தன்தளி சேர் நெஞ்சே! … 10

சிவனை துதி மனமே !

 

(எண்சீர்ச் சந்த விருத்தம் - "விளம் மா விளம் மா விளம் மா விளம் மா " என்ற வாய்பாட்டை ஒட்டி அமைந்ததுஅரையடிக்குள் சீர் எதுகை அமைந்த பாடல்கள்)
"
கருவிளம் தேமா கருவிளம் தேமா கருவிளம் தேமா கருவிளம் புளிமா
"

நிதியவன் நெஞ்சில் வதிபவன் என்றும்
...
நெகிழ்வுறு அன்பில் திகழ்ந்திடு மனமே!
சுதிநிறை பண்ணில் துதியிசை தன்னில்
...
சுகமுறு அன்பர் அகமதில் வருவான்!
கதியவன் என்று பதிகமும் சொல்லிக்
...
கழலிணைப் பற்றின் பழவினை தீரும்!
புதியவன், கங்கை நதி,மதி சூடி
...
புகழினை ஓது! இகமதில் நிறைவே!

 

பதவியும் பேரும் சதமென லாமோ?
...
பரமனின் அன்பே நிரந்தர மாகும்!
நுதலுடைக் கண்ணன் விதமவன் நாமம்
...
நுவலுவர் என்றும் நவையினை வெல்வார்!
இதமதைச் சேர்க்கும் பதமதை எண்ணின்
...
இயமனைச் சாடும்;பயமதைப் போக்கும்!
இதயமும் கோவில் உதயமாய்த் தோன்றும்
...
இணையடி ஆகும் புணைநவில் நெஞ்சே!

 

சிரமதில் கங்கை கரமதில் ஓடு
...
திகழ்ந்திடு சாம்பல் உகந்திடு மேனி
சரமெனக் கொன்றை உரகமும் சூடி
...
சவமெரி காட்டில் நவமுற ஆடும்
பரமனின் தாளை சரதமென் றெண்ணு!
...
பவமதில் சூழும் அவமதைப் போக்கும்!
அரனவன் நாமம் வரமென வேற்றும்
...
அடியவர் அன்பன் வடிவுறு நெஞ்சே.

 

உணர்வினில் பக்தி மணமது வீசும்
...
உயர்வுறு பாடல் மயர்வறச் செய்யும்
தணலுருக் கொண்டான் கணங்களின் ஈசன்!
...
தவவுரு மேவும் சிவகுரு போற்றி
இணைகழல் பற்றித் துணையவன் என்றால்
...
இகமதில் நாளும் புகல்தரும் வள்ளல்
இணர்மலர் மாலை கொணர்ந்தவன் மார்பில்
...
இலங்கிடச் சூட்டி நலம்பெறு நெஞ்சே
.

மயர்வு=அஞ்ஞானம்.
இணர்=பூ,பூங்கொத்து

 

கன்றினுக் கெனவே மன்றினில் நியாயம்
...
காத்திடு மனுவைக் காத்திடும் இறைவன்
கொன்றையம் மலரை பொன்முடி அணிந்து
...
கொண்டிடும் தயையில் தொண்டனுக் கருள்வான்
ஒன்றவன் தழலாய் நின்றவன் உமையின்
...
உற்றவன் மதனைச் செற்றவன் பதத்தை
நன்றென மனதில் என்றுமே நினைத்து
...
நஞ்சுடை மிடறன் நெஞ்சுறு மனமே!

 

சுட்டெரி ஒளிவீழ் விட்டிலின் நிலையில்
...
துக்கமாம் மயலில் சிக்கிடும் மனமே!
கட்டெனும் வினையில் பட்டுழல் வதுமேன்?
...
காத்திடு மிறைவன் பார்த்தருள் புரிவான்!
கொட்டிடு முழவில் தட்டிடும் துடியில்
...
கூத்தனின் நடனம் சேர்த்திடும் இதமே!
மொட்டவிழ் மலர்கள் இட்டவன் பதத்தை
...
முன்னிட தருவான் இன்னருள் தனையே.

முன்னுதல்=கருதுதல்

 

குந்தகம் செய்யும் பந்தமாம் கட்டில்
...
கொண்டிடு துன்பம் மண்டிடும் வேளை
இந்தினைச் சூடும் செந்தழ லோன் தாள்
...
எண்ணிடத் தீரப் பண்ணிடு வானே!
முந்திடு அன்பால் இந்தனம் விற்ற
...
ஒப்பிலாத் தேவைத் துப்பெனக் கொள்வாய்!
சுந்தரன் நஞ்சக் கந்தரன் தன்னைச்
...
சுற்றமென் றேற்றிப் பற்றிடு நெஞ்சே
!

துப்பு=பற்றுக்கோடு.
முந்திடு அன்பால் இந்தனம் விற்ற = இசைவாணன் பாணபத்திரனுக்காய் விறகு விற்பவனாய் வந்துசிவபெருமான் அருளியது
.

 

புனைசடை தன்னில் புனைமலர் சூடி
...
புடையுமை பங்கன் நடமதைச் செய்யும்
கனைகழல் வேண்டின் வினைதனை மாய்க்கும்
...
கருணைசெய் தெய்வம் குருவவன் போற்று!
தினையள வேனும் நினைபவர்க் கும்தன்
...
திருவருள் தன்னைத் தருமவன் அன்பில்
நனைபவர் தாமே தனமுடைச் செல்வர்?
...
நலம்தரும் நாமம் வலம்தரும் நெஞ்சே.

புனைமலர்=புன்னைமலர்(இடைக்குறை)

 

தரிசென வாழ்ந்து மரித்திட லாமோ?
...
சகமிதில் வாழும் தகவினைக் கேளாய்;
எரிதவழ் கானில் புரிநட மேற்றும்
...
இறையடி யார்கள் மறையெனப் பாக்கள்
வரிசையில் தேனார் பரிசினில் தந்த
...
வகையினை ஓர்ந்தே அகமகிழ் வோடு
சொரியருள் தேவைப் பரிவுடன் எண்ணி
...
துதிபுகழ்ப் பாடி கதிநினை நெஞ்சே.

தரிசு= உபயோகமில்லாத நிலம்

 

வெய்யவல் வினையில் நைவதென் நிதமும்
...
வென்றிடும் வழியை நன்கறிந் திடுவாய்;
துய்மலர் அலங்கல் கைதொழு (து)இடவே
...
துன்பமும் விலகும் இன்பமும் மலரும்
பெய்கழல் பணிந்தால் எய்ப்பது மறையும்
...
பிஞ்ஞக னவனின் அஞ்செழுத் தைநினை
மெய்தனில் இடங்கொள் மைவிழி உமையின்
...
வெண்மதி சடையன் நண்ணிடு மனமே.

எய்ப்பு=தளர்வு

திருப்பாதிரிப்புலியூர்

 

 

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

சரமாகப் பாய்கின்ற சகலவினைத் தொடரறுக்கும்
வரமாகத் திகழ்கின்ற வல்லவனின் அஞ்செழுத்தைத்
திரமாகும் கதியாகச் சிந்தைகொளும் நாவரசர்
பரனேற்றிக் கரையேறு பாதிரிப் புலியூரே....1



வாடியுளம் வெம்பவரும் வல்வினைகள் பொடியாகத்
தேடிவரும் அருளாளன் சீருரைக்கும் நாமமதைச்
சூடிமகிழ் சிந்தைகொளும் துய்யடியார் நாவரசர்
பாடியுய்ந்து கரையேறு பாதிரிப் புலியூரே....2

 


வான்பிறையும் கங்கையையும் வார்சடையில் அணிந்தவனாம்
மீன்விழியாள் உமைமகிழும் வெண்ணீற்றன் ஈமயெரி
கான்வெளியில் நடமிடுவான் கருணையினால் கல்நாவாய்
போன்மிதந்து அப்பரடைப் பாதிரிப் புலியூரே....3



தொடர்வினைகள் தருதுயரைத் தொலைந்தோடச் செய்திடுவான்
சுடரொளிரும் நுதல்விழியன் சோதியெனும் அருள்பெருக்கில்
அடைவிக்கும் அரன்பேர்சொல் அப்பர்க்குக் கல்லுமொரு
படகாகி அவரடைந்த பாதிரிப் புலியூரே....4


துணியாகும் பிறைதன்னை சுடர்மேவும் சடைசூடும்
மணிநீல மிடறுடையான் மனத்திருத்தும் ஆயிரமாம்
அணியான நாமமதற்(கு) அன்புடைய நாவரசர்
பணியக்கல் மிதந்தடைந்த பாதிரிப் புலியூரே....5



கணைவீசு மதனைத்தன் கண்ணுதலால் செற்றவர்க்கு
அணையாத அன்புகொண்டால் அருள்கின்ற ஈசனவன்
அணைகின்ற இறையன்பால் ஆழ்கல்லும் அப்பர்க்குப்
புணையாகிக் கரைசேர்க்கும் பாதிரிப் புலியூரே....6

 

பனிபடரும் வெள்ளிமலை பணியவரும் தெய்வமவன்
நனிசுடுவெவ் வினையகல நலமருளும் துணைவனவன்
இனிதறியா அமண்தீயர் எறிதிரையிட் டாலுமப்பர்
புனிதனடி போற்றியடை பாதிரிப் புலியூரே....7.



புகைகொண்ட எரிகானில் பொற்கழலன் நடனமதில்
அகலாத அன்புகொள்ளும் அடியவரின் அருளாளன்
பகைகொண்டார் நாவரசைப் பாழியிட்டும் அஞ்செழுத்தைப்

புகலென்றே கரையேறு பாதிரிப் புலியூரே....8.

பாழி=கடல்.

 


மின்னலெனும் வாழ்வுதனில் வினைவிளைக்கும் தீங்கழிப்பான்
உன்னவருள் புரிந்தடியார் உள்ளமுறை சோதியவன்
துன்னலர்தாம் நாவரசைத் துள்ளுதிரை இட்டாலும்
பொன்னடியைப் போற்றியடை பாதிரிப் புலியூரே ...9

வேதத்துள் ஒளிர்பவனாம் வினைதன்னைத் தீர்ப்பவனாம்
நாதத்தின் உருவுடையோன் நலம்தருதாள் நினைவிலப்பர்
ஏதத்தை புரிஅமணர் எறிதிரையிட் டாலுமரன்
பாதத்தைப் போற்றியடை பாதிரிப் புலியூரே ...10