December 11, 2010

ஆலவாய் அண்ணல் - 2

 

விரிவான் கங்கையன் வெண்ணீ றணிசிவன்
பொரியார் வண்டுசூழ் பூம்பொழில் தளியான்
தரியான் அன்பிலார் தம்முளம் அவர்க்கே
அரியான் ஆலவாய் மேவிய அண்ணலே....1

முன்பின் இல்லா ஆதியாம் மூலமாம்
அன்பில் ஆளும் அருள்நிறை வள்ளலாம்
துன்பில் தோன்றாத் துணையாய்த் தோன்றிடும்
என்பொன் ஆலவாய் மேவிய ஈசனே.....2

வீற்ற இன்னருள் கோலமும் வெவ்வினை
மாற்றும் ஆறுதல் தந்திடும் மாயமென்?
போற்றும் அன்பரின் பற்றெனும் பூரணன்
ஏற்றில் ஏறுமெம் ஆலவாய் ஈசனே...3

புறவும் ஆழியும் நின்னருள் போற்றிடும்
கறவைக் கன்றென உன் தாள் கருதியே
நறவு சேர்மலர் தூவினேன் நைவினை
அறவந் தேத்துமெம் ஆலவாய் அண்ணலே....4

புறவு=காடு,நறவு=தேன்,வாசனை
கறவை=பசு
.....

கல்லால் தாக்கினும் கனிந்ததைத் தாங்குவான்
ஒல்லாச் சாட்டையின் ஊறினை ஒப்புவான்
சொல்லால் கூடிடாத் தூயமெய் அன்பினால்
எல்லாம் நல்கும்நம் ஆலவாய் அண்ணலே....5

கல்லால்=கல்லினால்.(சாக்கிய நாயனார்)
ஒல்லா=பொறுக்கமுடியாத.

 

விதித்த வாழ்வும் வெருதா கிடாதுளம்
பதித்த நாமம் பரவினால் உய்யலாம்
கதித்து ஆடுவான் கழலிணைக்(கு) அன்பராய்த்
துதித்த வர்துயர் தீர் ஆல வாயரே....6.

கதித்து=விரைந்து

மாலை வண்ணனாய் மன்றதில் ஆடிடும்
நீல கண்டனாய் நெஞ்சுறைத் தெய்வமாய்ச்
சூலை நோயுறு தூயடி யார்க்கருள்
ஆல வாயுறை அங்கண் அடிகளே....7.

கல்லேன் பொன்னார் கழல்தொழு துய்வழி
வல்லான் இன்னருள் வள்ளலென்(று) ஏத்திலேன்
பொல்லாத் தீவினைப் பொடியெனச் செய்குவன்
நல்லார் போற்றும்நம் ஆலவாய் நாதனே....8.

ஆர்=அழகு என்னும் பொருளில்

கால காலனாய்க் கண்ணுதல் அண்ணலாய்க்
கோல மாகவேக் கொண்டிடும் ஆடலை
ஞால முய்ய நடித்தநம் ஐயனாம்
ஆல வாயரற் கன்புசெய் நெஞ்சமே....9.

சேவி லூர்பவன் சிந்தையில் நிற்பவன்
கூவி யன்பர் குரல்கொடுத் தாலுமே
தாவி வந்தருள் தந்திடும் மெய்யனாய்
ஆவி காப்பவன் ஆலவாய் அண்ணலே
.....10.

(
கலிவிருத்தம்)

December 02, 2010

அடியேற்கருள்வாயே அண்ணாமலையானே !

 

'மா புளிமாங்காய் மா புளிமாங்காய்' என்ற வாய்பாடு.

பண்ணார் நடமாடும் பதமே தருவாயே
கண்ணால் முடி,தாளைக் காணா அயன்மாலும்
விண்ணாய் வளர்தீயாய் மிளிரும் உனைநாடும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....1

புண்ணாம் படிநோவப் புரியும் வினையோடக்
கண்ணார் ஒளிமேவும் கருணை பொழிவாயே
மண்ணாய்ப் புனல்வானாய் வளியாய் அழலானோய்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....2

கண்ணால் உகுநீருக் கருள்வாய் மதலைக்கே
உண்ணா அமுதுண்டே உமையா ளுடைமைந்தாய்
பண்ணார் பதிகத்தால் பரவித் துதிசெய்தார்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....3

கண்ணீர் விழிமல்கக் கரையும் உணர்வாகி
எண்ணேன் உனதன்பை இரங்காய் இறையோனே
விண்ணாய் உயர்கோவில் மேவும் அருணேசா
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....4

புண்ணார் விழிசெந்நீர்ப் புனலாய் வழிந்தோடக்
கண்ணாய்த் தனதப்பும் கருணை சொலப்போமோ?
திண்ணார்த் தடந்தோளன் திண்ணன் துதிசெய்யும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....5

வண்டார் மலர்மாலை வடிவாய் இசைந்தாடக்
கண்டோர் உனைநாடும் கதியாய் வருவாயே
பண்டாய் நவமானாய் பதியே பரமேசா
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....6

எண்ணாய் எழுத்தாகி இயம்பும் பொருளாகிப்
பண்ணார் இசையாகிப் பரவும் துதியானாய்!
கண்ணோர்க் களியாகக் காணும் பெருஞ்சோதி
அண்னா மலையானே அடியேற் கருள்வாயே.... 7

எண்ணேன் இமைப்போதுன் இணைத்தாள் சிரமேற்கப்
பண்ணேன் உனைநாளும் பரவும் துதிபூசைத்
தண்ணார் தடம்சோலைத் தருசூழ் வனமோங்கும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....8

கண்ணா யிரங்கொண்ட காளி யவள்கேள்வா
விண்ணா றினையேற்கும் விரிசெஞ் சடையோனே
வெண்ணீ றணிவோனே விந்தை அழலோனே
அண்ணா மலையோனே அடியேற் கருள்வாயே....9

விண்ணோர் அமுதேஎம் வினையாம் பவம்தீர்ப்பாய்
பெண்ணோர் புறம்வைத்தாய் பிறைவார் சடையோனே
மண்ணோர் தொழும்ஞான மறையோன் ரமணர்சேர்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....10