December 05, 2011

நஞ்சன்கூடு கண்டனே!

நஞ்சனகூடு (nanjangud) - மைசூரிலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் நஞ்சனகூடு என்ற தலம் உள்ளது. தினமலர்த் தளத்தில் தகவல்களையும் படங்களையும் காணலாம்:

http://temple.dinamalar.com/New.php?id=135
(Nanjangud (Kannada
ನಂಜನಗೂಡು
)

பம்பை உடுக்கை தாளமாய்ப்
...படர்தீ கானில் ஆடிடும்
நம்பன் உனது தாளினை
...நறும்பூத் தூவி சாற்றியே
செம்பொன் மேனி வண்ணனே
...தெம்பு சேர்க்கும் நாமமே
நம்பி .னாருக் கருள்செயும்
...நஞ்சன் கூடு கண்டனே...1

கோளும் தினமும் நன்றுறக்
...கூத்தன் உனையே எண்ணியும்
நீளும் பவமாம் தொடரற
...நிறைவாய்ப் பணியும் அன்புடன்
கேளும் துணையும் நீயெனும்
...கீர்த்தி மிகுதாள் சரணென
நாளும் தொழுவார்க் கருள்செயும்
...நஞ்சன் கூடு கண்டனே...2

 

பொற்றா ளமதில் ஒலியவள்
...புடையில் பங்காய் ஏற்றவ!
பெற்றார் எனிலுன் அன்பினைப்
...பெற்றார் தாமே புண்ணியர்?
மற்றா ருளரிங் குற்றவர்
...மறைகள் ஓதி இன்புறும்
நற்றாள் தொழுவார்க் கருள்செயும்
...நஞ்சங் கூடு கண்டனே!....3

குவியும் மலரில் கோத்திடும்
...கோல மாலை சூட்டியே
பவள வண்ணா என்றுனைப்
...பாடி நாளும் வணங்கினேன்
துவியென் றிரண்டாம் வினைதனை
...தூர ஓட்டிக் காவென
நவிலும் அன்பர்க் கருள்செயும்
...நஞ்சங் கூடு கண்டனே....4

 

கீதா குரவர் திருமுறை
...கேட்டு மகிழ்ந்து நடமிடு
பாதா நதியும் மதியுடன்
... பாம்பும் அணிந்த தயைநிறை
போதா ஆலின் கீழமர்
...புனிதா நீயே எம்துணை
நாதா என்பார்க் கருள்செயும்
...நஞ்சன் கூடு கண்டனே....5

விதியாய் வினையாய் வாட்டியே
....மிரள வைக்கும் துன்பறக்
கதியாய் கழலைப் பற்றியே
....கந்த மலர்கள் தூவியும்
துதியாய் இசையாய் ஆனவா
....தூயா பிறைசேர் சென்னிமேல்
நதியாய் என்பார்க் கருள்செயும்
....நஞ்சன் கூடு கண்டனே....6

 

உச்சி மீது வெண்பிறை
....உரகம் கங்கை ஏற்றவா
பச்சை யம்மை யோர்புறம்
....பாங்காய்க் கொண்டு நின்றவா
மெச்சி யோதும் பாடலை
....விரும்பும் உன்னைச் சரணென
நச்சி னாருக் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....7

வியக்க வைக்கும் ஆடலில்
....விண்ணும் மண்ணும் இன்புறப்
பயக்கும் உன்றன் கருணையை
....பாடிப் பாடி அன்பொடு
தயக்கம் இன்றி உன்னடி
....சரணம் ஐயா என்றுமே
நயக்கும் அடியார்க் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....8

 

ஓடி செல்வம் சேர்த்திடும்
....உள்ளம் அமைதி கொள்ளுமோ?
வாடி நோகும் வாழ்வினில்
....வரமா யினிக்கும் பேரதே
கூடி இசைந்து பத்தியால்
....கூத்த! உன் தாள் சரணென
நாடி னாருக் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....9

அவமே தருதீ வினையற
....அன்பர் நாடித் துதிசெய
தவமே உருவாய் அமர்ந்தவன்
....தயையாய் புகலை அளிப்பவன்
'புவனா தார நாதனே
....புனிதா பழமை யானவா
நவனே!' என்பார்க் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....10

November 21, 2011

திருக் கோடிகா !

"மா புளிமாங்காய் மா புளிமாங்காய்" - வாய்பாடு.
புளிமாங்காய்ச்சீர் வரும் இடத்தில் சில சமயம் கூவிளமும் வரலாம்
.


புயலென் றிடர்தன்னைப் போக்கும் பிறைசூடி
பெயலில் உலகுய்க்கும்; பேறாய் அடைநெஞ்சே
கயல்கள் குதித்தோடும் கால்வாய் வழிந்தோடும்
குயில்கள் பயில்சோலைக் கோடி காவையே...1

பெயல் = மழை.

பாலன் தனக்காகப் பரிந்தே உதைசெய்து
காலன் தனைச்செற்ற காலன் அடைநெஞ்சே
காலை பொழுதாகக் கானக் குயில்பாடும்
கோலப் பொழில்சூழும் கோடி காவையே...2

 

வெளிர்தண் பொடிபூசும் விடையூர் பெருமானை
மிளிர்கண் ணுதலானை வேண்டி அடைநெஞ்சே
அளிசெம் மலர்மேவி ஆர்க்கும் பசுஞ்சோலை
குளிர்தெண் புனல்சூழும் கோடி காவையே...3

அளி = வண்டு.

இங்கார் சிவனார்போல் இரங்கும் அருளாளர்
எங்கா டனவன் தாள் இறைஞ்சி அடைநெஞ்சே
பொங்கார் சிறைவண்டு போதில் இசைபாடும்
கொங்கார் பொழில்சூழும் கோடி காவையே...4

போது = மலர்.

 

மொக்காய் மலராகி முதிர்ந்து வருமன்பில்
சிக்கா திருப்பானோ தேடி அடைநெஞ்சே
மிக்கார் அளிகூடி மிழற்றும் மலர்ச்சோலை
கொக்கார் புனல்சூழும் கோடி காவையே....5

பாதி மதியானின் பாத மலர்தன்னை
ஓதி துதிபாடி உருகி அடைநெஞ்சே
சோதி யவன்பேரைச் சொல்லி வினைதீர்ந்த
கோதில் அடியார்சேர் கோடி காவையே....6

 

நீறு திகழ்மெய்யன் நீல மணிகண்டன்
ஆறு தலையோனென் றறைந்தே அடைநெஞ்சே
ஊறும் மதுநாடி ஒலிசெய் மலர்வண்டாய்
கூறும் அடியார்சேர் கோடி காவையே...7

தலையில் சுடர்கொன்றை தண்ணார் நதியேந்தும்
மலையன் மறையோன் தாள் வணங்கி அடைநெஞ்சே
அலைசெய் மருதம்சூழ் அணியார் பசும்பொற்பூங்
குலைகள் மலி சோலைக் கோடி காவையே...8

மருதம் = மந்தமாருதம், தென்றல்

 

ஈடும் இணையென்றும் இல்லா இறையோனைப்
பாடும் இசையாலே பரவி அடைநெஞ்சே
ஆடும் நடராசன் அலர்தாள் சிரம்சூடிக்
கூடும் அடியார்சேர் கோடி காவையே...9

மத்தா யுழல்வேனை வாட்டும் வினைதீர
அத்தா எனையாளென் றணுகி அடைநெஞ்சே
முத்தா டிடுமாப்போல் முரன்றே அளிபாடும்
கொத்தார் மலர்ச்சோலைக் கோடி காவையே...10

November 09, 2011

தாயுமானவனே !

 

(அறுசீர் விருத்தம் - 'மா விளம் மா விளம் விளம் மா' - வாய்பாடு)


முந்து வெவ்வினை இடரை மோதியே பொடிபடச் செய்வான்
சிந்தை இன்புற அடியர் செந்தமிழ்ப் பாடலை விழையும்
அந்தி வண்ணனின் அன்பன் ஆளுடை யார்க்குசெம் பொன்னைத்
தந்தை யார்க்கென அன்று தந்தநம் தாயுமா னவனே...1

தேசன் வெவ்வினைத் துயரும் தீர்ந்திட மெய்யருள் புரிவான்
ஓசை தந்தநா யகியாள் உமையவள் பங்குடை யானின்
நேசர் தம்பசி தீர நிதம்படி பிள்ளையா ரோடு
தாசர் அப்பருக் கன்று தந்தநம் தாயுமா னவனே....2

பிள்ளையார் = ஆளுடை பிள்ளையார், சம்பந்தர்.

 

துண்டு வெண்மதி கங்கை சூடிடும் செஞ்சடை அண்ணல்
செண்டு நாண்மலர்த் தொடையல் திகழுறு எழில்மிகு தோளன்
பண்டு மிண்டரும் வெருவப் பார்வையை இழந்திட விழிகள்
தண்டி யாரவர்க் கன்று தந்தநம் தாயுமா னவனே....3

உண்ட வன்தயை என்றே உருகியே துதித்திடும் பத்தி
மண்டும் அன்பரின் தமிழ்ப்பா மாலைகள் சூடிடும் ஐயன்
தண்டு வீசிட வாளாய்த் தந்தையின் தாளற வீழ்த்தும்
சண்டிக் கன்றுயர் தானம் தந்தநம் தாயுமா னவனே....4

 

ஓங்கு செந்தழல் உருவன் உயிர்களுக் குற்றவன் எம்மான்
தேங்கு மன்பினில் ஊழின் தீங்கினைத் தீர்த்தருள் செய்வன்
வீங்கு தென்றலாம் குளிர்தாள் வேண்டியே பாடிடும் அப்பர்
தாங்கும் கல்லுமொர் புணையாய்த் தந்தநம் தாயுமா னவனே....5

கூடல் நன்னகர் ஆளும் குழகனின் விதவித மான
ஆடல் கண்டுளம் மகிழும் அன்பினள் அடிதொழ மாலை
போட முந்திட நெகிழும் புடைவையால் மனம்தடு மாறும்
தாட கைக்கெனச் சாய்ந்து தந்தநம் தாயுமா னவனே....6

தாடகை என்னும் பெயருடைய பெண்.

 

துக்க மின்பமென் றிரண்டு சுழல்வினை தனிலுழல் மாந்தர்
முக்க ணன்திருப் பெயரை முன்னிட அருள்தரும் அண்ணல்
தக்க நன்விழி மலரைச் சாற்றிட இடந்திடும் அன்பில்
சக்க ரத்தினை மாற்குத் தந்தநம் தாயுமா னவனே....7

திரையும் சேர்பிணி மூப்பில் சிவன்பெயர் குழறிடச் சொலினும்
குரைசெய் செங்கழல் கூத்தன் குழைந்திட வந்தருள் செய்வான்
வரையை கெல்லுமி லங்கை மன்னனை அடர்த்திசை கேட்டு
தரையில் நாளொடு வாளும் தந்தநம் தாயுமா னவனே....8

 

கங்கை கொன்றையை அணிவான் கறைமிளிர் மிடறுடை ஈசன்
மங்கை பங்கினன் ஆடல் வல்லவன் உறுதுணை யாவான்
திங்கள் வாடிய நாளில் திருவடி தொழஅவன் என்றும்
தங்கப் பொற்சடை தன்னைத் தந்தநம் தாயுமா னவனே....9

கருவி னில்வளர் பிறவிக் கடலினைக் கடந்திடச் செய்வான்
அருவம் ஆகவும் உருவம் ஆகவும் உயிர்களைக் காத்திடும் ஈசன்
தருவின் கீழமர் குருவாய்த் தண்டமிழ்ப் புலவனு மாகித்
தருமி வேண்டிய பொன்னைத் தந்தநம் தாயுமா னவனே....10

October 29, 2011

'மனம் போன போக்கில்'

(அறுசீர் விருத்தம்-4 மா +'மா-கருவிளங்காய்/விளம்-கூவிளங்காய்'-வாய்பாடு.

சுடரும் முக்கண் தெய்வ மான சுந்தரன் தம்மடியார்
படரும் அன்பில் பண்ணார் பாடல் பைந்தமிழ் ஆரமிட்டார்
இடையில் கச்சாய் பாம்பும் வெம்மா ஈருரி மேனிதனில்
உடையும் உடைய ஒருவன் நாமம் ஓதிடில் உய்யலுண்டே....1

பெய்யும் மாரி யாக வந்தே பேரருள் செய்திடுவான்
தையல் பங்கன் தஞ்சம் வேண்டின் தன்னையே தந்திடுவான்
மெய்யி தென்றே மாய மலக்கில் வீழ்ந்திடு மாந்தரைப்போல்
தொய்ய வேண்டா முக்கட் செல்வன் துணையடி போற்றுநெஞ்சே....2

 

நஞ்சை உண்ட நீல கண்டன் நம்பன் கழலிணையை
விஞ்சும் அன்பில் தஞ்சம் என்றே வேண்டின் உதவிடுவான்
கொஞ்சு செஞ்ச தங்கை பாதம் கொண்டவன் தண்ணருளால்
எஞ்சல் இன்றி வினைகள் ஓடி இன்பம் நிலைத்திடுமே....3

உலைசெய் துன்பம் கொள்ளாய் நெஞ்சே உய்வை வேண்டுதியேல்
சிலைஎய் வேளை கோபம் தோன்ற சிரித்து விழித்தவனாம்
மலையன், கானில் ஆடும் கூத்தன் மழுவாட் படையுடையான்
கலையொன் றேந்தி கழலி ணையைக் கருது தினந்தொறுமே....4

உலை=சஞ்சலம்,சிலை=வில்.

 

எருதின் மீத மர்ந்தே ஈசன் எழிலாய் வலம்வருவான்
அருவ மாக இருவர் தேட அழலாய் அருள்பவனாம்
உருவ னாக அன்பர் உளத்தில் உறையும் பரசிவனாம்
பொருது வினையைப் போக்கும் அரனைப் போற்றி மகிழ்மனமே....5

இகழும் நிலையில் வைக்கும் வினைசெய் இடரது தீர்ந்திடவே
முகிழும் அன்பில் பத்தி மலர மூலனை எண் மனமே
நிகழும் யாவும் நலமே யாக நின்மலன் தாளிணையைத்
தகழி ஏற்றி மலர்கள் தூவிச் சாற்ற வரும்திருவே....6

 

இருள ளித்து மருளில் சேர்க்கும் இழிவினை நீக்கியென்றும்
அருள ளிக்கும் பார்வை தன்னில் அபயம் தருமிறைவன்
பொருள ளிக்கும் வாழ்க்கை என்றால் பூரணன் போற்றியவன்
இரும லர்த்தாள் நாளும் எண்ணி இன்புறு வாய்மனமே...7

கனைத்த ழைக்கும் கன்றைப் பரிவாய்க் காத்திடும் தாய்ப்பசுபோல்
நினைத்த ழைக்கும் அன்பர் தமக்கு நிமலன் அருளிருக்கும்
வனத்தில் அன்று பார்த்தன் தனக்கு வரமெனப் பாசுபதம்
தனைக்கொ டுத்த ஈச .னாரைச் சார வருசுகமே...8

 

புகலற் கேலா வினைசெய் துன்பப் புயலுழல் வாய்மனமே
சகலத் திற்கும் காரண .னானத் தற்பரன் அருள்தருவான்
நகசத் தோலை உடையாய் அணிவான் நறுமலர் மாலைகள்சேர்
அகலத் தையன் அகலா திருப்பான் அகன்றிடும் ஆரிருளே...9

நகசம்=யானை.
அகலம்=மார்பு.


உருளும் சகட வாழ்வில் நிலைக்கும் உத்தி அறிமனமே
மருளில் ஆழ்த்தும் பொருளி லாத மலக்கினை நீக்குபவன்
சுருளும் சடையில் பிறையும் நதியும் சூடித் திகழ்பவனாம்
ஒருவன் அன்பின் உருவன் நாமம் ஓதில் அறுவினையே...10

October 10, 2011

என்பணிஅரன்துதி !

'மா கூவிளம் விளம் விளம் விளம் மாங்காய்' - அறுசீர் விருத்தம்;
மாச்சீர் குறில் / குறில்+ஒற்று என்று முடியும்;
(1-3-5 சீர்களில் மோனை)


கொய்த நாண்மலர் கோத்தெழில் மாலைகள் குலவியே தோள்சேரும்
பைதல் வெண்பிறை பாயலை கங்கையைப் பாந்தமாய் சடையேற்பான்
வெய்தி டர்தரு வினைச்சுழல் மீட்பவன் விண்திரி புரமூன்றை
எய்தெ ரித்திடும் இறைத்துதி என்பணி இனியிலை இன்னாவே....1

பைதல்=இளைய
குலவுதல்=விளங்குதல்.

கரவு நெஞ்சமாய் கணந்தொறும் பொய்யினைக் கழறிடும் என்னாவே
பரவு வெவ்வினை படுவழி அறிகிலை பறைதிநான் என்னாவேன்
உரவு நீர்சடை உற்றவன் ஓங்குதீ ஒளியவன் எரிகானில்
இரவு செய்நடம் ஏற்றுதல் என்பணி இனியிலை இன்னாவே!....2

உரவுநீர்=ஆறு என்னும் பொருளில்.

 

அடமும், பேதுடை அறிவிலாப் புன்மொழி அறைகுவை என்னாவே
தொடரும் வல்வினை தொலைவழி அறிகிலை சொல்லுநான் என்னாவேன்
விடமும் உண்ணுவான் விண்ணவர் துணையவன் வெண்ணிறப் போரேறாம்
இடபம் ஏறிறை ஏற்றுதல் என்பணி இனியிலை இன்னாவே....3

அடம்=பிடிவாதம்
பேது=துன்பம்.

கடுக டுப்பொடு கருணையில் லாவசை கழறிடும் என்னாவே
கொடுவி னைத்துயர் குறையவொன் றுரைத்திலை கூறுநான் என்னாவேன்
சுடுமி ருட்கடம் சூழெரி நடசிவன் தொடர்முடைக் கையேந்தி
இடுப லிக்கலை இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....4

கடம்=காடு.

 

பண்ணி யச்சுவை பலவகை உண்டெனப் பகர்ந்திடும் என்னாவே
எண்ணி டாவினை இடரற அறிகிலை இசைத்திடு என்னாவேன்
வெண்ணி லாத்துளி மின்னொளிர் செஞ்சடை விமலனை அன்போடே
எண்ணில் நாமமும் ஏற்றுதல் என்பணி இனியிலை இன்னாவே....5

பண்ணியம்=பலகாரம்,
இசை=உரை.

ஒன்று நன்றையும் ஓர்கிலை உய்வழி உரைத்திலை என்னாவே
தொன்று செய்வினை தொடரற மொழிகிலை சொல்லுநான் என்னாவேன்
அன்று தில்லையில் ஆடிய பாதமே அடியரின் பற்றாகும்
என்றும் உள்ளமெய் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....6

 

பறப்பில் தேடுவை பணந்தனை பரிவினை பகர்கிலை என்னாவே
திறப்பி தென்னவே சிவனடி நினைந்திலை செப்புநான் என்னாவேன்
பிறப்பில் லாதவன் பிணிபவந் தொலைப்பவன் பெண்ணுமை பங்கேற்றான்
இறப்பில் லாதவெம் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....7

பறப்பு=துரிதம்.
திறப்பு=திறவுகோல்.

வசையும் திட்டுமாய் வார்த்தையில் சுடுமொழி வழங்குவை என்னாவே
பசையென் றூழ்வினை பற்றறும் வழியிலை பகர்வைநான் என்னாவேன்
தசமென் றேசிரம் தாங்குமி லங்கைகோன் அழுதுமே கானம்செய்
இசையைக் கேட்டஎம் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....8

 

கொழுந்து வெற்றிலைக் கூட்டுடன் விருந்துணக் கோருவை என்னாவே
விழுந்து போம்படி வினையற அறிகிலை விளம்புநான் என்னாவேன்
விழுங்கு நஞ்சதும் விண்ணமு தாயயன் விட்டுணு தாம்தேட
எழுந்த சோதிஎம் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....9

வெற்றிலைக்கூட்டு=சுண்ணாம்பு,பாக்கு,இத்யாதி.
விளம்பு=சொல்லு.

கூழை என்னவே குறைமலி மொழியினைக் கூறிடும் என்னாவே
பாழை யாய்மயல் படரற உரைத்திலை பகர்திநான் என்னாவேன்
மாழைப் பொன்னவன் மாசிலா மணியவன் மறையவன் என்றென்றும்
ஏழை பங்கினன் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....10

படர்=துன்பம்.,கூழை=புத்திக்குறைவு,
பாழை=மாயை,மயல்=மயக்கம்.

September 24, 2011

புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)

அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' என்ற அரையடி வாய்பாடு.

நீர்க்கண் குமிழாம் வாழ்வுதனில்
...நிமலன் மலர்தாள் நற்றுணையாம்
தீர்க்கும் வினைசெய் துன்பினையே
...சிறந்த மருந்தென் றாகிடுவான்
பார்க்குள் கருணை வாரிதியாம்
...பரமன் வெம்மா தோலினையே
போர்க்கும் பெம்மான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....1

நோக்கும் பார்வை அருளாகி
...நோய்செய் வினையைத் தீர்த்திடுமே
தீக்குள் வெம்மை ஆகிடுவான்
...தீயின் ஒளியாய் ஒளிர்கின்றான்
காக்கும் ஐயன் தாளிணையைக்
...கருதும் அடியார் துன்பினையே
போக்கும் பரமன் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே.. ..2

 

நாக்கும் உரைக்கும் நாமசுவை
...ந்விலுந் தோறும் இனிதாகும்
தூக்கும் மலர்தாள் தொழுமன்பர்
...துணையாம் நீல மணிகண்டன்
ஆக்கும் அளிக்கும் அழிசெய்தே
...அருளு மீசன் அமர்கோவில்
பூக்கும் நந்த வனம்சூழும்
...புள்ளி ருக்கு வேளூரே....3

தேரே றியருள் செய்யுமரன்
...சீரேர் விழவில் உலாவருவான்
தூரே மலியும் உள்ளந்தனை
...தூய்மை யாக்கும் தாளிணையை
ஓரே .னெனையும் காத்திடுவான்
...உமையின் பங்கன் செஞ்சடையன்
போரே றேறி அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....4

 

நோவாய் வினைசெய் துன்பகலும்
...நுவலும் அஞ்சக் கரத்தாலே
நாவா யாகக் கரைசேர்க்கும்
...நம்பன் மலர்தாள் பற்றிடவே
பாவாய்ப் பண்ணாய் அடியார்கள்
...பரவும் கருணை வாரிதியாம்
பூவார் சடையன் அமர்கோவில்
... புள்ளி ருக்கு வேளூரே....5

சீத வெள்ளிப் பனியிமயச்
...செல்வன் வேண்டும் அன்பருக்கே
பாத மலரைத் தந்தருளும்
...பரமன் தயையின் வடிவாகி
ஏத மிகுவெவ் வினைத்துன்பாம்
...இன்னல் தீர்க்கும் மருந்துமவன்
பூதப் படையான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....6

 

ஏற்றும் சிறுவன் உயிர்காக்க
...இரக்கம் மிகவும் கொண்டவனாய்க்
கூற்றும் மாள உதைசெய்யும்
...கோபம் கொண்ட கூத்தனவன்
சாற்றும் வேதப் பொருளாவன்
...தஞ்ச மென்றே அடியார்கள்
போற்றும் பெருமான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....7

"தொன்மை தொடராய்த் துன்பதுவாய்ச்
...சூழும் வினைகள் தீர்ந்திடவே
நின்மெய் யருளைத் தந்திடுவாய்!
...நிமலா வேண்டித் தொழுகின்றேன்!
என்மெய் யுடைமை நீயன்றோ!"
...என்றே தஞ்ச மடைவாரின்
புன்மை தீர்ப்பான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....8

 

சோதித் தருளும் அண்ணலவன்
...துணையாய் காக்கும் சுற்றமவன்
பாதித் தன்மெய் யுமையோடும்
...பால்தந் துசிசுப் பசிதீர்ப்பான்
ஓதித் துதிசெய் வேதமறை
...உணர்த்தும் பொருளை ஆலமர்ந்தே
போதித் திருப்பான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....9

வீசு தென்றல் வெய்யிலினில்
...வெகுவாய் சுகமே தருதல்போல்
பேசும் அவன்பேர் வினைநீக்கிப்
...பேறாய் இன்பம் தந்திடுமே
மூசு வண்டார் மலர்சூடும்
...முதல்வன் மூலன் மணசாந்தம்
பூசும் மார்பன் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....10

September 07, 2011

திருவிற்கோலம்

(இக்கால ஊர்ப்பெயர் - 'கூவம்')

திருவிற்கோலம் (கூவம்) கோயில் விவரங்களுக்கு இங்கே காண்க:
http://temple.dinamalar.com/New.php?id=124

கலிவிருத்தம் - 'விளம் விளம் மா கூவிளம்' என்ற வாய்பாடு.
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று
வாரா);


அம்பல மாடிடும் ஆடல் வல்லஎம்
சம்புவின் தாள்மலர் சாற்று நெஞ்சமே!
கும்பிடும் அன்பரின் குறைகள் தீர்த்திடும்
செம்பெரு மானுறைத் திருவிற் கோலமே....1

ஆர்கலி யாம்பவம் அடையல் நெஞ்சமே!
கார்முகில் என்னவே காக்கும் எம்பிரான்
ஏர்சிலை தோளினில் இலகும் வான்பிறை
சேர்சடை யானுறை திருவிற் கோலமே....2

ஆர்கலி = கடல்
சிலை = வில்.


ஆதியாய்ப் பாதியை ஆக மேற்றவன்
ஓதிடா மோனியை உன்னு நெஞ்சமே!
சோதியாய் ஓங்கியே தோற்றும் அம்பரன்
தீதிலா தானுறை திருவிற் கோலமே....3

அம்பரன் = ஆகாயமாயிருப்பவன்....3

கவலையி லாழ்த்திடு கன்மத் தாலுறும்
அவதியும் அற்றிட அடைஎன் நெஞ்சமே
தவனமும் கொன்றையும் சடையில் சூடுமெம்
சிவபெரு மானுறை திருவிற் கோலமே....4

உரித்தவெம் மாஉரி உடுத்தி வெண்பொடி
தரித்தவன் தண்ணளி தனைஎண் நெஞ்சமே!
எரித்தவன் வேளினை எரியும் சினமிகச்
சிரித்தவன் தானுறை திருவிற் கோலமே....5

 

அகழ்ந்தரி கண்டிடா அடிஎண் நெஞ்சமே

நிகழ்பவை யாவுமே நிமலன் செய்கையே

முகிழ்விரி கொன்றைவெண் முல்லை கண்ணியாய்

திகழ்முடி யானுறை திருவிற் கோலமே....6

 

அஞ்சிட வந்திடர் அளிக்கும் வெவ்வினை

பஞ்செரி தீயெனப் படவும் செய்குவன்

தஞ்சமென் றண்டிடு தாளை நெஞ்சமே!

செஞ்சடை யானுறை திருவிற் கோலமே....7

 

கூர்த்தநன் நடசிவன் குறிஎன் நெஞ்சமே

போர்த்தவெம் புலியதள் பொலியும் எம்பிரான்

ஆர்த்தவெவ் வினையினால் அன்பர் கொள்துயர்

தீர்த்தவன் தானுறை திருவிற் கோலமே....8

 

கூர்த்தநடம் = நடனக்கலையின் நுட்பங்கள் அமைந்த நடனம்.

 

பாவடி வானவன் பற்றுக் கோடவன்

பூவடி தன்னையே பூணென் நெஞ்சமே

தாவடி அரிஅயன் சாற்றும் ஓங்குயர்

தீவடி வானவன் திருவிற் கோலமே....9

 

மெய்திகழ் வெண்பொடி மேவு மெம்பிரான்

மொய்கழல் பற்றிட முன்னு நெஞ்சமே

பெய்கிற மாரியாய்ப் பேர ருள்தனை

செய்பெரு மானுறை திருவிற் கோலமே.....10

August 24, 2011

வானம் கூப்பிடு தூரமே!

"மா விளம் மா விளம் மா விளம் விளம்"
என்ற வாய்பாடு - எழுசீர் விருத்தம்.


கிலியி லாழ்த்திடு தீய வைகளால்
...கிலேச முறாதிரு நெஞ்சமே
ஒலிசெய் பம்பையும் துடிக்கும் தாளமாய்
...உவந்து நடமிடுக் கூத்தனும்
புலியின் தோலினைப் புனைவான் சீரினைப்
...புகழ்ந்துப் பாடியுய் யலாமதே
மலியும் வினைதடுத் தெமைகாக் குங்குடை
...வானம் கூப்பிடு தூரமே....1

மாட்டும் தூண்டிலில் மடியும் மீனெனெ
...மயலில் உழல்கிற நெஞ்சமே
கூட்டும் பத்தியில் கூடும் அடியரின்
...குழுவில் இருந்திடல் பெற்றியே
பாட்டில் ஒளிர்கிற பரமன் பேரினைப்
...பரவி மகிழ்வுற லாமதே
வாட்டும் வினைதடுத் தெமைகாக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....2

ஊணில் உயிரினில் ஊனில் நிற்பவன்
...ஓங்கும் அழலென ஆனவன்
ஆணிப் பொன்னவன் ஆடல் வல்லவன்
...ஆர்க்கும் மறைபுகழ்ப் பாதனே
வீணில் பிறப்பிதில் மெய்யன் பேர்சொல
...மேவும் சுகம்பெற லாமதே
வாணி கர்வினை அறக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....3

வாள் நிகர்=வாணிகர்
ஆர்க்கும்=ஒலிக்கும்.

நிருத்தம் பயில்பதம் நினைந்து போற்றியே
...நெகிழும் அடியரும் பாடிடும்
எருத்தம் கறையுடை இறைவன் தண்ணருள்
...ஈடில் பேற்றினைத் தந்திடும்
உருத்தி ராக்கமும் ஒளிர்வெண் நீறணி
...உமையின் பங்கனின் பேரதே
மருத்தென் றெமை வினைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....4

மருத்து= மருந்து(வலித்தல் விகாரம்)
எருத்தம்= கழுத்து.

அஞ்ச வருகிற ஆறு வெம்பகை
...அலைக்கத் துயருறு நெஞ்சமே
மஞ்சு சேர்மலை மன்னன் எம்பிரான்
...வரம்தந் தடியரைக் காப்பவன்
தஞ்ச மளிமலர் தாளன் பேரினைச்
...சாற்றி உரைத்திட லாமதே
வஞ்ச வினைவிடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....5

 

வீணா யுழன்றிட வெருதா கின்றதோ
...வேண்டும் பிறவியில் நெஞ்சமே
காணா உருவிலி காட்சி யாகவே
...காணும் உருவினன் காப்பவன்
பூணாய் எருத்தினில் பொலிவார் பாம்பினை
...பூணும் எந்தையின் பேருரை
வாணா ளதன்பய .னெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....6

நிலையாய் உறுதுணை நிமலன் தாளிணை
...நிதமும் தொழுதிடு நெஞ்சமே
கலைசேர் நிலவுடன் கங்கை சூடிடும்
...கருணைக் கடலருள் செய்பவன்
அலைமேல் எழுவிடம் அமுதாய் உண்டவன்
...அணிசேர் அஞ்செழுத் துரையதே
வலையாய் சூழ்வினை அறக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....7

கொட்டும் முழவொலி குமுறும் பம்பையின்
...கூடும் ஒலியினில் ஆடுவான்
சுட்ட நீறணி சோதி மேனியன்
...துணையென் றிருந்திடு நெஞ்சமே
மட்டுவார் குழல் மங்கை பங்கினன்
...வணங்கி அஞ்செழுத் துரையதே
மட்டில் வினைதடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....8

குமுறுதல்= அதிர்வொலிசெய்தல்.

சுற்றாய்ச் சுழல்கிற சுமைசேர் வாழ்விதில்
...சுகமே அவனருள் நெஞ்சமே
செற்றான் முப்புரம் தீயில் வெந்திடத்
...தேவர் தொழுதிடும் நம்பனே
சற்றா யினுமவன் தாளை எண்ணியே
...சாற்றும் அஞ்செழுத் தாமதே
வற்றா பவம்தடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....9

கண்டம் கறைபட கடலின் நஞ்சுணும்
...கருணை போற்றிடு நெஞ்சமே
தொண்டர் தம்பிரான் தூய அன்பினில்
...தோன்றாத் துணையெனக் காப்பவன்
துண்டு பிறையினை சூடும் எம்பிரான்
...துய்ய அஞ்செழுத் தோததே
மண்டு வினைதடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....10

August 22, 2011

இராமேச்சுரம் (ராமேஸ்வரம்)

('மா மாங்காய் மா மாங்காய்' - என்ற வாய்பாடு)

சிம்மா தனமின்றி சிந்தை மகிழ்வாக
வெம்மா வனமேகும் மெய்யன் இராமன் தான்
அம்மா வினைதீர ஆர வழிபட்ட
எம்மான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....1

'
மெய்சேர் பொடிபூசும் வேதன் அடிபோற்றும்
வெய்தாய் இராமன் தன் மிஞ்சும் வினைதீரச்
செய்தான் புரமூன்றும் தீயா கிடஅம்பொன்
றெய்தான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....2

வேசம் பலவேற்று விந்தை விளையாடல்
நேச முடன்செய்த நிமலன் அருளென்னே
பேச இனிக்கின்ற அஞ்சக் கரத்தானாம்
ஈசன் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....3

சாந்து மணமேவும் தண்ணார் தமிழ்வேதம்
மாந்தி மகிழ்வாகும் மதியன் உமைபங்கன்
காந்தி ஒளிர்கின்ற கண்கள் அருள்தன்னை
ஏந்தி அமர்கோவில் இராமேச் சுரம்தானே....4

சாந்து = சந்தனம்.

கூற்றை உதைசெய்யும் கூத்தன் திருஞானப்
பேற்றை அருளாகப் பெய்யும் நிதியாகி
மாற்று நிறைபைம்பொன் மணியா யொளிர்கின்ற
ஏற்றன் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....5

உளிசேர் ஒலியாகி உளத்துள் வளரும்கற்
றளியே குடிலாகத் தங்கும் அருளாளன்
துளிவான் பிறைசூடும் துய்யன் அடியார்க்கே
எளியான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....6

தொடரும் வினைதீர்க்கத் துணையாய் வருமீசன்
விடமும் அமுதாக விழுங்கும் கறைக்கண்டன்
சுடரும் ஒளியாவன் தூயன் விழவூரும்
இடபன் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....7

கருப்பா லொருபூவில் கணையை யெறிவேளை
நெருப்பா யெரிசெய்யும் நெற்றி விழியோனும்
திருப்பா விசையாகச் செய்யும் துதிமாந்தி
இருப்பான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....8

கருப்பு = கரும்பு (வலித்தல் விகாரம்)

தொடுத்தான் புரமூன்றும் சுடுதீ அழலாக
விடுத்தான் வரையொன்றை வில்லாய்க் கணையோடு
மடுத்தான் இசைப்பாடல் மலர்தாள் நடமாட
எடுத்தான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....9

சிந்தை நிறைகின்ற சீரார் திருநாமம்
விந்தை நடம்செய்யும் விமலன் அடியாரின்
முந்தை வினைமாய்க்கும் முக்கண் நுதல்கொண்ட
எந்தை அமர்கோவில் இராமேச் சுரம்தானே....10

August 02, 2011

சிவனருள் நினை!

தஞ்சம டைந்தவன் தண்ணருள் வேண்டிநி னைந்திடில்
...
தளை பவ வினை உளை செயுமிடர் அகலும்,
பிஞ்சிள வெண்மதி செஞ்சடை அந்திய தன்வணன்
...
பிடி உமை இட மணி களிறென வருவான்
கொஞ்சுச தங்கையின் இன்னொலி தண்முழ வொன்றிட
...
குதி நதி குளிர் செய சிரசணி எழிலில்
அஞ்சல ருள்செயும் அன்பொடு வெண்பொடி மெய்யினில்
...
அணி பணி திகழ் தர நடம்புரி சிவனே.

சிவன்கழல் தொழுவாய்!

முந்திடு வெவ்வினை தந்திடு துன்பம தன்றெனும்
...
முடி பிறை கறை மிட றுடைமுழு.. முதலே
பந்தமும் பாசமும் மிக்குத ளைத்துவி லங்கிடும்
...
படர் இடர் தொடர் நிலை யறுகென..உனைநான்
சிந்தையில் சந்ததம் அஞ்செழுத் தோதியு ணர்கையில்
...
சித றிடும் பவ மெனு சிறுமையும்..தொலையும்
அந்தமில் ஆதியும் பாதியும் ஆனவொர் மெய்யனாம்
...
அரி அயன் அவர் தொழும் அழலொளி..சிவனே....1

பூத்திடும் கொன்றையம் பொன்மலர் இன்எழில் மார்பிடை
...
புனை சரம் புரள் கவின் திகழுற நிறைவாய்
தோத்திர மாகிய சொற்றமிழ் மாமறை வேட்பவன்
...
துடி யடி யொலி நட மிடுமரன் அவனே
பாத்திர மாயவன் பத்தியில் கூடிடும் அன்பினில்
...
பரன் அரன் பதம் சரண் புகலென அடைவார்;
சூத்திர தாரியின் சொற்படி ஆடிடும் பொம்மைநம்
...
சுழல் பழி அழி வழி செயுநம திறையே!....2