August 24, 2011

வானம் கூப்பிடு தூரமே!

"மா விளம் மா விளம் மா விளம் விளம்"
என்ற வாய்பாடு - எழுசீர் விருத்தம்.


கிலியி லாழ்த்திடு தீய வைகளால்
...கிலேச முறாதிரு நெஞ்சமே
ஒலிசெய் பம்பையும் துடிக்கும் தாளமாய்
...உவந்து நடமிடுக் கூத்தனும்
புலியின் தோலினைப் புனைவான் சீரினைப்
...புகழ்ந்துப் பாடியுய் யலாமதே
மலியும் வினைதடுத் தெமைகாக் குங்குடை
...வானம் கூப்பிடு தூரமே....1

மாட்டும் தூண்டிலில் மடியும் மீனெனெ
...மயலில் உழல்கிற நெஞ்சமே
கூட்டும் பத்தியில் கூடும் அடியரின்
...குழுவில் இருந்திடல் பெற்றியே
பாட்டில் ஒளிர்கிற பரமன் பேரினைப்
...பரவி மகிழ்வுற லாமதே
வாட்டும் வினைதடுத் தெமைகாக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....2

ஊணில் உயிரினில் ஊனில் நிற்பவன்
...ஓங்கும் அழலென ஆனவன்
ஆணிப் பொன்னவன் ஆடல் வல்லவன்
...ஆர்க்கும் மறைபுகழ்ப் பாதனே
வீணில் பிறப்பிதில் மெய்யன் பேர்சொல
...மேவும் சுகம்பெற லாமதே
வாணி கர்வினை அறக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....3

வாள் நிகர்=வாணிகர்
ஆர்க்கும்=ஒலிக்கும்.

நிருத்தம் பயில்பதம் நினைந்து போற்றியே
...நெகிழும் அடியரும் பாடிடும்
எருத்தம் கறையுடை இறைவன் தண்ணருள்
...ஈடில் பேற்றினைத் தந்திடும்
உருத்தி ராக்கமும் ஒளிர்வெண் நீறணி
...உமையின் பங்கனின் பேரதே
மருத்தென் றெமை வினைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....4

மருத்து= மருந்து(வலித்தல் விகாரம்)
எருத்தம்= கழுத்து.

அஞ்ச வருகிற ஆறு வெம்பகை
...அலைக்கத் துயருறு நெஞ்சமே
மஞ்சு சேர்மலை மன்னன் எம்பிரான்
...வரம்தந் தடியரைக் காப்பவன்
தஞ்ச மளிமலர் தாளன் பேரினைச்
...சாற்றி உரைத்திட லாமதே
வஞ்ச வினைவிடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....5

 

வீணா யுழன்றிட வெருதா கின்றதோ
...வேண்டும் பிறவியில் நெஞ்சமே
காணா உருவிலி காட்சி யாகவே
...காணும் உருவினன் காப்பவன்
பூணாய் எருத்தினில் பொலிவார் பாம்பினை
...பூணும் எந்தையின் பேருரை
வாணா ளதன்பய .னெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....6

நிலையாய் உறுதுணை நிமலன் தாளிணை
...நிதமும் தொழுதிடு நெஞ்சமே
கலைசேர் நிலவுடன் கங்கை சூடிடும்
...கருணைக் கடலருள் செய்பவன்
அலைமேல் எழுவிடம் அமுதாய் உண்டவன்
...அணிசேர் அஞ்செழுத் துரையதே
வலையாய் சூழ்வினை அறக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....7

கொட்டும் முழவொலி குமுறும் பம்பையின்
...கூடும் ஒலியினில் ஆடுவான்
சுட்ட நீறணி சோதி மேனியன்
...துணையென் றிருந்திடு நெஞ்சமே
மட்டுவார் குழல் மங்கை பங்கினன்
...வணங்கி அஞ்செழுத் துரையதே
மட்டில் வினைதடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....8

குமுறுதல்= அதிர்வொலிசெய்தல்.

சுற்றாய்ச் சுழல்கிற சுமைசேர் வாழ்விதில்
...சுகமே அவனருள் நெஞ்சமே
செற்றான் முப்புரம் தீயில் வெந்திடத்
...தேவர் தொழுதிடும் நம்பனே
சற்றா யினுமவன் தாளை எண்ணியே
...சாற்றும் அஞ்செழுத் தாமதே
வற்றா பவம்தடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....9

கண்டம் கறைபட கடலின் நஞ்சுணும்
...கருணை போற்றிடு நெஞ்சமே
தொண்டர் தம்பிரான் தூய அன்பினில்
...தோன்றாத் துணையெனக் காப்பவன்
துண்டு பிறையினை சூடும் எம்பிரான்
...துய்ய அஞ்செழுத் தோததே
மண்டு வினைதடுத் தெமைக்காக் கும்குடை
...வானம் கூப்பிடு தூரமே....10

August 22, 2011

இராமேச்சுரம் (ராமேஸ்வரம்)

('மா மாங்காய் மா மாங்காய்' - என்ற வாய்பாடு)

சிம்மா தனமின்றி சிந்தை மகிழ்வாக
வெம்மா வனமேகும் மெய்யன் இராமன் தான்
அம்மா வினைதீர ஆர வழிபட்ட
எம்மான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....1

'
மெய்சேர் பொடிபூசும் வேதன் அடிபோற்றும்
வெய்தாய் இராமன் தன் மிஞ்சும் வினைதீரச்
செய்தான் புரமூன்றும் தீயா கிடஅம்பொன்
றெய்தான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....2

வேசம் பலவேற்று விந்தை விளையாடல்
நேச முடன்செய்த நிமலன் அருளென்னே
பேச இனிக்கின்ற அஞ்சக் கரத்தானாம்
ஈசன் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....3

சாந்து மணமேவும் தண்ணார் தமிழ்வேதம்
மாந்தி மகிழ்வாகும் மதியன் உமைபங்கன்
காந்தி ஒளிர்கின்ற கண்கள் அருள்தன்னை
ஏந்தி அமர்கோவில் இராமேச் சுரம்தானே....4

சாந்து = சந்தனம்.

கூற்றை உதைசெய்யும் கூத்தன் திருஞானப்
பேற்றை அருளாகப் பெய்யும் நிதியாகி
மாற்று நிறைபைம்பொன் மணியா யொளிர்கின்ற
ஏற்றன் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....5

உளிசேர் ஒலியாகி உளத்துள் வளரும்கற்
றளியே குடிலாகத் தங்கும் அருளாளன்
துளிவான் பிறைசூடும் துய்யன் அடியார்க்கே
எளியான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....6

தொடரும் வினைதீர்க்கத் துணையாய் வருமீசன்
விடமும் அமுதாக விழுங்கும் கறைக்கண்டன்
சுடரும் ஒளியாவன் தூயன் விழவூரும்
இடபன் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....7

கருப்பா லொருபூவில் கணையை யெறிவேளை
நெருப்பா யெரிசெய்யும் நெற்றி விழியோனும்
திருப்பா விசையாகச் செய்யும் துதிமாந்தி
இருப்பான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....8

கருப்பு = கரும்பு (வலித்தல் விகாரம்)

தொடுத்தான் புரமூன்றும் சுடுதீ அழலாக
விடுத்தான் வரையொன்றை வில்லாய்க் கணையோடு
மடுத்தான் இசைப்பாடல் மலர்தாள் நடமாட
எடுத்தான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....9

சிந்தை நிறைகின்ற சீரார் திருநாமம்
விந்தை நடம்செய்யும் விமலன் அடியாரின்
முந்தை வினைமாய்க்கும் முக்கண் நுதல்கொண்ட
எந்தை அமர்கோவில் இராமேச் சுரம்தானே....10

August 02, 2011

சிவனருள் நினை!

தஞ்சம டைந்தவன் தண்ணருள் வேண்டிநி னைந்திடில்
...
தளை பவ வினை உளை செயுமிடர் அகலும்,
பிஞ்சிள வெண்மதி செஞ்சடை அந்திய தன்வணன்
...
பிடி உமை இட மணி களிறென வருவான்
கொஞ்சுச தங்கையின் இன்னொலி தண்முழ வொன்றிட
...
குதி நதி குளிர் செய சிரசணி எழிலில்
அஞ்சல ருள்செயும் அன்பொடு வெண்பொடி மெய்யினில்
...
அணி பணி திகழ் தர நடம்புரி சிவனே.

சிவன்கழல் தொழுவாய்!

முந்திடு வெவ்வினை தந்திடு துன்பம தன்றெனும்
...
முடி பிறை கறை மிட றுடைமுழு.. முதலே
பந்தமும் பாசமும் மிக்குத ளைத்துவி லங்கிடும்
...
படர் இடர் தொடர் நிலை யறுகென..உனைநான்
சிந்தையில் சந்ததம் அஞ்செழுத் தோதியு ணர்கையில்
...
சித றிடும் பவ மெனு சிறுமையும்..தொலையும்
அந்தமில் ஆதியும் பாதியும் ஆனவொர் மெய்யனாம்
...
அரி அயன் அவர் தொழும் அழலொளி..சிவனே....1

பூத்திடும் கொன்றையம் பொன்மலர் இன்எழில் மார்பிடை
...
புனை சரம் புரள் கவின் திகழுற நிறைவாய்
தோத்திர மாகிய சொற்றமிழ் மாமறை வேட்பவன்
...
துடி யடி யொலி நட மிடுமரன் அவனே
பாத்திர மாயவன் பத்தியில் கூடிடும் அன்பினில்
...
பரன் அரன் பதம் சரண் புகலென அடைவார்;
சூத்திர தாரியின் சொற்படி ஆடிடும் பொம்மைநம்
...
சுழல் பழி அழி வழி செயுநம திறையே!....2

பராய்த்துறை மேவிய பரனே!

 

எழுசீர் விருத்தம் - 'விளம் மா விளம் மா விளம் விளம் மா' என்ற வாய்பாடு

மறலியை அன்று சினமிக எற்றி
...
வழிபடும் சிறுவனைக் காத்தாய்
பிறவிசெய் நோயால் பிணியுறு வேனைப்
...
பெருகுமுன் கருணையில் காப்பாய்
கறவையின் அன்பில் களித்திடும் கன்றாய்க்
...
கண்ணுதல் உனருளில் உய்வேன்
பறவைகள் நாடிப் பைம்பொழில் கூடும்
...
பராய்த்துறை மேவிய பரனே....1

சகடென உருளும் சகமுறு வாழ்வில்
...
தளைவினை விடவருள் எந்தாய்
சகலமும் உன்றன் சரணிணை என்றே
...
தண்மலர் தூவினேன் காப்பாய்
பகடதில் ஊரும் பரமனுன் நாமம்
...
பரவிடும் பேறினைத் தாராய்
பகலவன் ஒளியில் பூமலர் தடம்சூழ்
...
பராய்த்துறை மேவிய பரனே....2

 

சொலவரு மின்பம் சுவைமிகு நாமம்
...
துதிசெயு மடியரின் தேவே
அலமரு வேனென் அடைக்கல மாகி
...
அருள்கிற துணையென வாராய்
நிலவணி சடையில் நிர்மல கங்கை
...
நிலவிடு மெழிலினில் ஒளிர்வாய்
பலநிற மலரின் மணமிகு பொழில்சூழ்
...
பராய்த்துறை மேவிய பரனே....3

நசிவறு மேன்மை நலமிகக் காட்டி
...
நலிவுறு எளியரைக் காப்பாய்
பசியினில் ஊணாய் பரிவினில் தாயாய்ப்
...
பரவிடும் அன்பதும் நீயே
மசியிருள் மாய மலக்கினில் வீழா
...
வழியினைக் காணவும் அருள்வாய்
பசியநல் இலைசேர் மணமலர் பொழில்சூழ்
...
பராய்த்துறை மேவிய பரனே....4

 

சுடர்கிற விடியல் சுதியொலி பாடல்
...
சொலுமுன தருளதன் திறமே
தொடர்கிற அன்பில் துணையெனக் கொண்டேன்
...
துன்பினில் ஆதரம் தருவாய்
குடர்படு கருக்கொள் கொடிதெனும் பவமே
...
குலைவினை அடைவழி அருளாய்
படர்கிற மருதம் கமழ்வுறு பொழில்சூழ்
...
பராய்த்துறை மேவிய பரனே....5

விண்ணிழி கங்கை வெண்மதி சூடி
...
வெண்பொடி மெய்யணி ஈசா
கண்ணிய துன்றன் கருணையை யன்றோ
...
கயல்விழி பங்குடை யோனே
எண்ணிய எய்தல் இறையரு ளாலே
...
எனைஇடர் செய்வினைத் தீராய்
பண்ணிய வண்டும் பாடிடும் பொழில்சூழ்
...
பராய்த்துறை மேவிய பரனே....6

 

கண்ணியது = கருதியது
பண்ணிய = சுதிலய

 

திரணமிவ் வாழ்வில் தெளிமதி தந்தே
...
திகழுறச் செய்தருள் ஈசா
சரணென உன்றன் தாளிணை வீழும்
...
தமியனைக் காத்திட வேண்டும்
கிரணமென் றொளிசேர் கீர்த்தியில் நிற்பாய்
...
கெடுவினை யொழியவும் அருளாய்
பரவிய பொன்னி பாய்கிற பொழில்சூழ்
...
பராய்த்துறை மேவிய பரனே....7

அரிஅயன் தேடும் அடிமுடி காணா
...
அழலுரு வாய்நெடி துயர்ந்தாய்
வரியதள் உடையாய் மான்மழு தீயும்
...
மகிழ்வுடன் கரமதில் கொண்டாய்
வரிசையில் துயர்செய் வருவினை தாங்கும்
...
மனதையும் தந்தருள் செய்வாய்
பரிமளக் கொடிப்பூ படர்ந்திடும் பொழில்சூழ்
...
பராய்த்துறை மேவிய பரனே....8

 

மழவிடை ஏறி வலம்வரு வாயே
...
மறைதொழு தேத்திடும் ஈசா
முழவுடன் துடியின் முந்துறு ஒலியில்
...
முடிவிலி யுன்நடம் பேறே
கழலினை அணைத்துக் கதறிடு வோனைக்
...
காத்தருள் செய்தவன் நீயே
பழமலி சுவைதேர் பைங்கிளி பொழில்சூழ்
...
பராய்த்துறை மேவிய பரனே!....9

சின்மய உருவில் திகழ்குரு வானாய்
...
தெளிவுறு சிந்தையை தாராய்
பொன்மன அடியார் பொழிதமிழ்ப் பாடல்
...
புகழ்ந்திடும் உனதருள் திறமே
நன்மையில் இருப்பாய் நலமிகச் செய்வாய்
...
நதிமதி சூடிடும் தேவே
பன்மலர்த் தேனுண் பூவளி பொழில்சூழ்
...
பராய்த்துறை மேவிய பரனே....10