November 21, 2011

திருக் கோடிகா !

"மா புளிமாங்காய் மா புளிமாங்காய்" - வாய்பாடு.
புளிமாங்காய்ச்சீர் வரும் இடத்தில் சில சமயம் கூவிளமும் வரலாம்
.


புயலென் றிடர்தன்னைப் போக்கும் பிறைசூடி
பெயலில் உலகுய்க்கும்; பேறாய் அடைநெஞ்சே
கயல்கள் குதித்தோடும் கால்வாய் வழிந்தோடும்
குயில்கள் பயில்சோலைக் கோடி காவையே...1

பெயல் = மழை.

பாலன் தனக்காகப் பரிந்தே உதைசெய்து
காலன் தனைச்செற்ற காலன் அடைநெஞ்சே
காலை பொழுதாகக் கானக் குயில்பாடும்
கோலப் பொழில்சூழும் கோடி காவையே...2

 

வெளிர்தண் பொடிபூசும் விடையூர் பெருமானை
மிளிர்கண் ணுதலானை வேண்டி அடைநெஞ்சே
அளிசெம் மலர்மேவி ஆர்க்கும் பசுஞ்சோலை
குளிர்தெண் புனல்சூழும் கோடி காவையே...3

அளி = வண்டு.

இங்கார் சிவனார்போல் இரங்கும் அருளாளர்
எங்கா டனவன் தாள் இறைஞ்சி அடைநெஞ்சே
பொங்கார் சிறைவண்டு போதில் இசைபாடும்
கொங்கார் பொழில்சூழும் கோடி காவையே...4

போது = மலர்.

 

மொக்காய் மலராகி முதிர்ந்து வருமன்பில்
சிக்கா திருப்பானோ தேடி அடைநெஞ்சே
மிக்கார் அளிகூடி மிழற்றும் மலர்ச்சோலை
கொக்கார் புனல்சூழும் கோடி காவையே....5

பாதி மதியானின் பாத மலர்தன்னை
ஓதி துதிபாடி உருகி அடைநெஞ்சே
சோதி யவன்பேரைச் சொல்லி வினைதீர்ந்த
கோதில் அடியார்சேர் கோடி காவையே....6

 

நீறு திகழ்மெய்யன் நீல மணிகண்டன்
ஆறு தலையோனென் றறைந்தே அடைநெஞ்சே
ஊறும் மதுநாடி ஒலிசெய் மலர்வண்டாய்
கூறும் அடியார்சேர் கோடி காவையே...7

தலையில் சுடர்கொன்றை தண்ணார் நதியேந்தும்
மலையன் மறையோன் தாள் வணங்கி அடைநெஞ்சே
அலைசெய் மருதம்சூழ் அணியார் பசும்பொற்பூங்
குலைகள் மலி சோலைக் கோடி காவையே...8

மருதம் = மந்தமாருதம், தென்றல்

 

ஈடும் இணையென்றும் இல்லா இறையோனைப்
பாடும் இசையாலே பரவி அடைநெஞ்சே
ஆடும் நடராசன் அலர்தாள் சிரம்சூடிக்
கூடும் அடியார்சேர் கோடி காவையே...9

மத்தா யுழல்வேனை வாட்டும் வினைதீர
அத்தா எனையாளென் றணுகி அடைநெஞ்சே
முத்தா டிடுமாப்போல் முரன்றே அளிபாடும்
கொத்தார் மலர்ச்சோலைக் கோடி காவையே...10

November 09, 2011

தாயுமானவனே !

 

(அறுசீர் விருத்தம் - 'மா விளம் மா விளம் விளம் மா' - வாய்பாடு)


முந்து வெவ்வினை இடரை மோதியே பொடிபடச் செய்வான்
சிந்தை இன்புற அடியர் செந்தமிழ்ப் பாடலை விழையும்
அந்தி வண்ணனின் அன்பன் ஆளுடை யார்க்குசெம் பொன்னைத்
தந்தை யார்க்கென அன்று தந்தநம் தாயுமா னவனே...1

தேசன் வெவ்வினைத் துயரும் தீர்ந்திட மெய்யருள் புரிவான்
ஓசை தந்தநா யகியாள் உமையவள் பங்குடை யானின்
நேசர் தம்பசி தீர நிதம்படி பிள்ளையா ரோடு
தாசர் அப்பருக் கன்று தந்தநம் தாயுமா னவனே....2

பிள்ளையார் = ஆளுடை பிள்ளையார், சம்பந்தர்.

 

துண்டு வெண்மதி கங்கை சூடிடும் செஞ்சடை அண்ணல்
செண்டு நாண்மலர்த் தொடையல் திகழுறு எழில்மிகு தோளன்
பண்டு மிண்டரும் வெருவப் பார்வையை இழந்திட விழிகள்
தண்டி யாரவர்க் கன்று தந்தநம் தாயுமா னவனே....3

உண்ட வன்தயை என்றே உருகியே துதித்திடும் பத்தி
மண்டும் அன்பரின் தமிழ்ப்பா மாலைகள் சூடிடும் ஐயன்
தண்டு வீசிட வாளாய்த் தந்தையின் தாளற வீழ்த்தும்
சண்டிக் கன்றுயர் தானம் தந்தநம் தாயுமா னவனே....4

 

ஓங்கு செந்தழல் உருவன் உயிர்களுக் குற்றவன் எம்மான்
தேங்கு மன்பினில் ஊழின் தீங்கினைத் தீர்த்தருள் செய்வன்
வீங்கு தென்றலாம் குளிர்தாள் வேண்டியே பாடிடும் அப்பர்
தாங்கும் கல்லுமொர் புணையாய்த் தந்தநம் தாயுமா னவனே....5

கூடல் நன்னகர் ஆளும் குழகனின் விதவித மான
ஆடல் கண்டுளம் மகிழும் அன்பினள் அடிதொழ மாலை
போட முந்திட நெகிழும் புடைவையால் மனம்தடு மாறும்
தாட கைக்கெனச் சாய்ந்து தந்தநம் தாயுமா னவனே....6

தாடகை என்னும் பெயருடைய பெண்.

 

துக்க மின்பமென் றிரண்டு சுழல்வினை தனிலுழல் மாந்தர்
முக்க ணன்திருப் பெயரை முன்னிட அருள்தரும் அண்ணல்
தக்க நன்விழி மலரைச் சாற்றிட இடந்திடும் அன்பில்
சக்க ரத்தினை மாற்குத் தந்தநம் தாயுமா னவனே....7

திரையும் சேர்பிணி மூப்பில் சிவன்பெயர் குழறிடச் சொலினும்
குரைசெய் செங்கழல் கூத்தன் குழைந்திட வந்தருள் செய்வான்
வரையை கெல்லுமி லங்கை மன்னனை அடர்த்திசை கேட்டு
தரையில் நாளொடு வாளும் தந்தநம் தாயுமா னவனே....8

 

கங்கை கொன்றையை அணிவான் கறைமிளிர் மிடறுடை ஈசன்
மங்கை பங்கினன் ஆடல் வல்லவன் உறுதுணை யாவான்
திங்கள் வாடிய நாளில் திருவடி தொழஅவன் என்றும்
தங்கப் பொற்சடை தன்னைத் தந்தநம் தாயுமா னவனே....9

கருவி னில்வளர் பிறவிக் கடலினைக் கடந்திடச் செய்வான்
அருவம் ஆகவும் உருவம் ஆகவும் உயிர்களைக் காத்திடும் ஈசன்
தருவின் கீழமர் குருவாய்த் தண்டமிழ்ப் புலவனு மாகித்
தருமி வேண்டிய பொன்னைத் தந்தநம் தாயுமா னவனே....10