December 27, 2012

இலம்பையங்கோட்டூர்


('விளம் விளம் காய்'- என்ற அமைப்பு.

சம்பந்தர் தேவாரம் -1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")


வார்சடைமீதொளிர்மதியுடையான்
சீர்மிகுபேர்தொழும்அன்பருளம்
சார்பவன்உறைவிடம்தண்பொழில்சூழ்
ஏர்மலிஇலம்பையங்கோட்டூரே....1

விழிநுதல்உடையவன்வெவ்வினைசெய்
பழியினில்தொடரிடர்ப்பார்த்தருளைப்
பொழிகுவன்உறைவிடம்பூஅளியார்
எழில்பொழில்இலம்பையங்கோட்டூரே....2

கரும்பினைகரம்கொளும்காமாட்சி
விரும்பிடும்ஈசனும்வேண்டுவதைத்
தரும்பதிஉறைவிடம்தண்ணளியார்
இரும்பொழில்இலம்பையங்கோட்டூரே....3

ஊர்விடைஅமர்பவன்உண்பலிதேர்
ஓர்முடைத்தலையெனும்ஓடுடையான்
நீர்மடைஎனவருள்நெஞ்சனிடம்
ஏருடைஇலம்பையங்கோட்டூரே....4

தருஞ்சுகமவன்கழல்சாற்றுமன்பர்
பெருஞ்சுமையெனும்வினைதீர்த்தருளும்
அருஞ்சுவைப்பேருடைஐயனிடம்
இருஞ்சுனைஇலம்பையங்கோட்டூரே....5

பாடிடும்அன்பரின்பாவலங்கல்
சூடிடும்அருள்நிதிதோன்றுமிடம்
தேடிடும்பொழில்மலர்த்தேனளிகள்
கூடிடும்இலம்பையங்கோட்டூரே....6

நளிர்மதிசடையனைநாடிடுவோர்க்(கு)
ஒளிர்கழல்அருள்பவன்உறையுமிடம்
துளிர்விடுமுகைமலர்ச்சுரும்பினமார்
குளிர்பொழில்இலம்பையங்கோட்டூரே....7

நிசமவன்தீங்கினைநீக்கியன்பில்
வசமுறஅருள்கிறவள்ளலிடம்
அசைவுறுவணம்குயில்ஆர்த்திடும்பண்
இசைமலிஇலம்பையங்கோட்டூரே....8

பன்னகம்அணிபவன்பைந்தமிழில்
சொன்மலர்மாலைகள்சூடுமையன்
பொன்னவன்உறைவிடம்பூஞ்சுரும்பார்த்(து)
இன்புறும்இலம்பையங்கோட்டூரே....9

திசையறிகிலாவெளித்திரிகோள்கள்
விசையுறுகதிசெலவிதித்தவன்நல்
இசையதுவானவன்இருக்குமிடம்
இசையுடைஇலம்பையங்கோட்டூரே....10

December 10, 2012

திருக்கானூர்

(அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' - அரையடி வாய்பாடு)

 

திருக்கானூர் - இத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சில கிலோமிட்டர் தொலைவில், கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ளது.

 

தளைத்து வினைசெய் யிடர்தீர்க்கும்

...சடையன் செந்தாள் மலர்பற்றிக்

களத்தில் விடத்தைக் கொண்டருளும்

...கதியே எனநீ அடைநெஞ்சே

தளத்தில் வெளியில் நடம்செய்யும்

...தனியன் புரத்தை நகையாலே

கொளுத்தும் ஈசன் உறைகோவில்

...கொள்ளி டஞ்சூழ் கானூரே....1

 

தளம்=மேடை, வெளி=ஆகாசம்.

களம்=தொண்டை.

தனியன்=ஒப்பில்லாதவன்.

 

இறைவன் ஈசன் என்றுணர்ந்து

....ஏத்திப் பணியும் அன்பர்க்கு

நிறைவைத் தருமே நிமலன் தாள்

....நினைந்து அடைநீ மடநெஞ்சே

நறைசேர் மலரால் நன்மாலை

....நயமாய்ச் சூடும் நம்பனவன்

குறைகள் தீர்ப்பான் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....2

 

நறை=தேன்.

 

எஞ்சும் நாளில் முதுமையினில்

....இடர்கள் பலவும் பட்டுழல

அஞ்சும் காலன் வருமுன்னே

....அரன்பேர் போற்றி அடைநெஞ்சே

பிஞ்சு நிலவும் பேரலையாய்

....பெருகும் நதியும் கொன்றையுமே

குஞ்சி வைத்தான் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....3

 

ஆறு தலதை விழைமூப்பில்

....அண்டும் துன்பம் எத்தனையோ

நீறு புனைந்து நெகிழ்ந்துருகி

....நேயன் போற்றி அடைநெஞ்சே

ஆறு சடையன் ஆலின்கீழ்

....அமரும் தவம்செய் போதமருள்

கூறும் ஒருவன் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....4

 

சீரார் இளமை தேயபிணி

....தேடி வரவும் இயமபடர்

ஓரா துயிரைக் கொள்ளுமுனம்

....உய்வை நாடி அடைநெஞ்சே!

காரார் கண்டன் கதியாகி

....கனிவோ டருளும் கழலனவன்

கூரார் மழுவன் உறைகோயில்

.. கொள்ளி டஞ்சூழ் கானூரே....5

 

தள்ளும் வயதில் தடுமாறித்

....தடிக்கை கொண்டு பிணிமூப்பில்

விள்ள முடியா வேதனையை

....விட்டு விலக அடைநெஞ்சே

அள்ளும் மலரின் மணமாக

....அருளும் வள்ளல் ஒளிர்பிறையை

கொள்ளும் சடையன் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....6

 

தள்ளும் வயது என்றால், நடக்க முயலும்போது சுதாரிக்க இயலாமல் 'தள்ளும் 'வயதான முதுமையில் என்ற பொருளில்.

 

காலக் கணக்குத் தவறாமல்

....காலன் வந்து நிற்குமுன்னே

மூலப் பொருளாம் முன்னவனின்

....முடி,தாள் போற்றி அடைநெஞ்சே

சீலச் சுடராய்த் திகழ்கிறவன்

....தேடி அருளைத் தந்திடுவான்

கோலப் பிறையன் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....7

 

தொடுக்கும் போராய் பிணிவாட்டும்

....துன்பை எண்ணிக் கலங்காமல்

உடுக்கை ஒலியில் நடமாடும்

....ஒருவன் போற்றி அடைநெஞ்சே

எடுக்கும் பிறவிக் கடல்தாண்ட

....இணையில் அருளை வரமாகக்

கொடுக்கும் பெருமான் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....8

 

பொன்றும் காலம் வந்திடுமுன்

....புனிதன் தாளே கதியென்று

ஒன்றும் சித்தம் கொண்டன்பில்

....ஓதி உய்ய அடைநெஞ்சே

கன்றின் தாயாய்ப் பேணுபவன்

....கனிவாய் அருட்கண் பார்த்திடுவான்

கொன்றை சூடி உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....9

 

ஆண வமெனும் மாசுதனை

....அகற்றி உய்வை அடைநெஞ்சே

வீண டைவதோ இப்பிறவி

....விருதாய் மூப்பில் வருந்துவதென்

காணக் கண்செய் தவமாகக்

....கருணை தவழும் நுதல்விழியன்

கோணற் பிறையன் உறைகோவில்

....கொள்ளி டஞ்சூழ் கானூரே....10

November 24, 2012

மழபாடி வயிரத்தூண்


(எண்சீர் விருத்தம் - 'காய் காய் மா தேமா' - அரையடி வாய்பாடு)

வெண்பொடியார் மேனியனாய் விளங்கு வானை
....வேணியினில் கூன்பிறையை அணிகின் றானைக்
கண்பனிக்க உள்ளுருகக் கரைந்து வேண்டிக்
....கரங்கூப்பித் தாள்தொழுவார்க் கன்பன் தன்னைத்
தண்பதிகள் பலகண்டு சாற்றும் பத்தர்
...தண்டமிழ்ப்பா மாலைதனில் உவக்கின் றானை
வண்பதியாம் மழபாடி வயிரத் தூணை
....வாயார வாழ்த்தவினை மாயும் தானே....1

பாம்பணியும் கறைமிடறன் பதம்செய் யாடல்
....பரவசமாய்க் கண்டுவக்கும் பத்தர் தம்மின்
தீம்பழிய நன்றுசெயும் தேவ தேவைச்
....சீராரும் தேவாரம் செவியேற் பானைத்
தீம்பலவும் குலைநிறைந்தத் தெங்கும் ஓங்கத்
....தீங்குயில்கள் கிளையமர்ந்து தேனாய்ப் பாடும்
மாம்பொழில்சூழ் மழபாடி வயிரத் தூணை
....வாயார வாழ்த்தவினை மாயும் தானே....2

 

ஆர்வருவார் ஆர்செல்வார் அறிவார் யாரே

....ஆரமுதாம் நஞ்சுண்டன் அனைத்தும் உய்ப்பான்

கார்முகிலாய்ப் பொழிகின்ற கருணை வெள்ளம்

....கழல்பற்றி அருள்வேண்டின் கதியா வானைப்

பார்முதலாம் கண்ணுதலை பலித்தேர் வானைப்

....பரிந்துயிர்க்காய் ஆடுவானைப் பண்ணார் வண்டு

வார்பொழில்சூழ் மழபாடி வயிரத் தூணை
....வாயார வாழ்த்தவினை மாயும் தானே....3

 

மின்னலிடை உமையவளை மெய்யில் பங்காய்
....மேவியவன் துணைதன்னை வேண்டும் அன்பர்
பொன்னவனை நாண்மலரால் புனைந்துப் போற்றிப்
....பூசிக்கும் பூசனையில் பொலிகின் றானை
இன்னமுதென் றாலமுண்ட ஈசன் தன்னை
....இணையில்லாச் செல்வமென இலங்கு வானை

மன்னவனை மழபாடி வயிரத் தூணை

....வாயார வாழ்த்தவினை மாயும் தானே....4

 

சிந்திக்கும் சிந்தையுள் தேசா வானைச்
...சீர்மல்கும் பேரானை செம்மல் தன்னை
விந்தைக்குள் விந்தைதரும் வேடம் மேவி

...வேணவிதம் அருள்செய்யும் விமலன் தன்னைச்
சந்தத்தில் மலர்கின்ற தமிழா னானைச்
...சங்கரனை நாவலூரர் சாற்றிப் பாட்டால்
வந்திக்கும் மழபாடி வயிரத் தூணை
...வாயார வாழ்த்தவினை மாயும் தானே....5

எழுவானில் உயர்தீயாய் இலங்கு வானை
....எளியோரின் அருள்நிதியாய் இரங்கு வானை
வழுவாத அன்பினுக்கு மகிழும் தேவை
....மலைமகளின் கேள்வனை மன்றன் தன்னைத்
தொழுவாரின் துயர்தீர்க்கும் துணையா வானைச்
....சுந்தரர்க்குத் தூதுசென்றத் தூயோன் தன்னை
மழுவானை மழபாடி வயிரத் தூனை
....வாயார வாழ்த்தவினை மாயும் தானே....6

மன்றன்=சிவன்

 

அரவுநெளி மேனியினில் அழகு சேரும்
...அலங்கலென கொன்றைமலர் அணிகின் றானை
விரவிடுமென் மணத்தூபம் மேவு வானை
....விடையூரும் திருஇலகும் வெண்ணீற் றானை
இரவலுடல் தனிலுயிர்க்குள் இருக்கும் தேசை
...இறைஞ்சிடுவார் தமதன்புக் கிரங்கு வானை

வரமருளும் மழபாடி வயிரத் தூணை

…வாயார வாழ்த்தவினை மாயும் தானே. ...7

மண்டுமிசை வாசகத்தேன் வழுத்தும் கோவை
...வற்றாத அருள்வழங்கும் வள்ளல் தன்னை
வெண்டிரைமீ தெழுவிடத்தை விழுங்கி னானை
...விண்ணோர்கள் தொழுதேத்தும் விமலன் தன்னை
தண்டலைசூழ் மயிலாடச் சாரல் காற்றுத்
...தவழ்மணம்சேர் தேன்மலரில் தங்கி யுண்ணும்

வண்டுமுரல் மழபாடி வயிரத் தூணை

...வாயார வாழ்த்தவினை மாயும் தானே....8

 

உயர்வென்றும் தாழ்வென்றும் உருளும் வாழ்வில்
...உத்தமன் தாள் தொழுபவர்க் குய்வைத் தந்தே
துயர்செய்யும் இருவினையைத் தொலைப்பான் தன்னைச்
...சோதிபொங்கும் அருணமலை சுடரா னானைச்
செயல்தன்னில் விளைவாகத் திகழ்வான் தன்னைச்
...சீராக அண்டமெல்லாம் செலுத்து வானை

வயல்சூழும் மழபாடி வயிரத் தூணை

...வாயார வாழ்த்தவினை மாயும் தானே....9

தூமதிசேர் வார்சடையன் துணைத்தாள் பற்றித்
...தொடுத்தமலர்க் கொன்றைத்தார் சூட்டிப் போற்றின்
தாமதியா தருள்செய்துத் தாங்கு வானைத்
...தருநீழல் அமர்மோனத் தவசி தன்னைச்
சேமநிதி யாயிடரைத் தீர்க்கும் தேவைச்
...சேவூரும் பெம்மானை, சீலன் தன்னை

மாமதில்சூழ் மழபாடி வயிரத் தூணை

...வாயார வாழ்த்தவினை மாயும் தானே....10

உனை நினைத்திடும் அகத்தினை அருள் (திருக்கழுமலம்)

'தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன .. தனதான'

அரிக்கிற வினைத்தொடர் அறுத்திடு திறத்தஉன்
...அடித்தொழு பவர்க்கருள் ..புரிவாயே
கரிக்கிற விழித்துளி அருச்சனை எனப்பெறு
...கரத்துடை பலிக்கலன் ..உடையோனே
தரிக்கிற பொடித்துகள் தளர்ச்சியை விடுத்திடும்
...சடைத்தலை வனப்புடன் ..மிளிர்வோனே
சிரிக்கிற முகத்தொரு விழிச்சுடர் படைத்தவ
...திருக்கழு மலத்துறை .. பெருமானே! … 1

 

குவைத்திரள் மணிச்சுடர் சுவைக்கனி உனைத்தொழும்
...குவிக்கையில் மதுப்பொழி .. மலர்தூவி
பவத்தளை விடுத்திடும் அருட்புனல் விழிக்கதிர்
...படைத்தவ கழற்புணை..தருவாயே
தவத்தினில் நிசப்தமும் ஒலித்திடும் குருத்துணை
...தனைப்பெறு நலத்தினை.. அருளாயே
சிவத்துறு அறத்துணை உமைக்கருள் கொடுப்பவ
...திருக்கழு மலத்துறை.. பெருமானே! … 2

மயிலாடுதுறை

 

(தேமாங்கனி கூவிளம் கூவிளம் தேமா)

தெம்போடரன் ஆடிடும் சீர்கழல் எண்ணி
சம்போவெனும் அன்பரைத் தாங்குவான் ஊராம்
செம்போதலர் தேனுணச் சேர்ந்தளி ஆர்க்கும்
வம்பார்பொழில் மாமயி லாடுது றையே....1

அஞ்சேவடி பாடிடும் அன்பரை உய்க்கும்
பிஞ்சார்பிறை சூடிய பிஞ்ஞகன் ஊராம்
செஞ்சேலுகள் நீர்வயல் சீருறக் காணும்
மஞ்சார்பொழில் மாமயி லாடுது றையே.2

தானாயவன் வந்தருள் தந்திடும் நேயன்
மீனார்விழி மாதவள் மேயவன் ஊராம்
தேனார்குயில் கூவிடும் செவ்விசை சூழும்
வானார்பொழில் மாமயி லாடுது றையே....3

ஐந்தாகிய அக்கரன் அஞ்சலைத் தந்து
நைந்தார்வினை நீக்கும் நம்பரன் ஊராம்
பைந்தேனுணும் வண்டினம் பண்ணொலி ஆர்க்கும்
மைந்தார்பொழில் மாமயி லாடுது றையே....4

முந்தாவணம் ஊழ்வினை முற்றுமே நீங்கத்
தொந்தோமென ஆடிடும் துய்யவன் ஊராம்
கொந்தார்மலர் வண்டினம் கூடிப்பண் பாடி
வந்தார்பொழில் மாமயி லாடுது றையே....5

நோவாய்வரும் ஊழினை நூக்கியே மாய்க்கும்
சேவூர்பவன் ஊண்பலித் தேர்பவன் ஊராம்
தூவார்மலர்த் தேனுணும் தும்பிகள் பாடல்
ஓவாப்பொழில் ஒண்மயி லாடுது றையே....6

தூ+ஆர்=தூவார்
தூ=தூய்மை
நூக்குதல்=தள்ளுதல்

மீண்டும்கரு வாயுரு மேவிடேன் என்று
வேண்டும்சிவ பத்தரின் மெய்யிறை ஊராம்
தூண்டும்கவின் வான் தரு தொட்டுயர் திங்கள்
தீண்டும்பொழில் தென்மயி லாடுது றையே....7

தூண்டுகிற எழிலுடைய வான் திங்களை உயர் தரு தொட்டுத்தீண்டும் பொழில் என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளவேண்டும்.

கண்டார்பிணி தீர்த்திடும் கண்ணுதல் ஆடல்
கொண்டாடிடு வார்க்கருள் கூட்டுவன் ஊராம்
தண்டாமரைப் பூவினில் தங்கியே தேன் தேர்
வண்டார்பொழில் மாமயி லாடுது றையே....8

நீரானவன் தீவளி நீள்விசும் பாகிப்
பாரானவன் அன்பரின் பற்றவன் ஊராம்
ஏராழ்வயல் நெற்கதிர் எங்குமே சாய்ந்து
சீரார்கிற தென்மயி லாடுது றையே....9

பிட்டேயுணக் கூலியாய்ப் பேதைமுன் வந்து
பட்டானடி அன்பருள் பண்பினன் ஊராம்
மொட்டாயலர்ப் பூவளி மோதியே பாடும்
மட்டார்பொழில் மாமயி லாடுது றையே....10

October 10, 2012

சண்பை நகர் (சீகாழி)


(மா மா மா புளிமாங்காய் - என்ற வாய்பாடு)

அழுது நெகிழ்வர்க் கணுக்கன் மதிசூடி
தொழுது மகிழத் துணையென் றருளூராம்
எழுமின் னிசையை ஏந்தித் தவழ்தென்றல்
தழுவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....1


அணுக்கன்=அண்மையில் இருப்பவன.

பொங்கும் அழலாய்ப் பொலியும் மலைஈசன்
பங்கம் தீர்த்துப் பரியும் அருளூராம்
தெங்கின் கீற்றில் செழுமைக் கிளியாடித்
தங்கும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....2


தீங்கும் அழிப்பான் சீரார் மணிகண்டன்
தேங்கும் அன்பில் தேடி அருளூராம்
ஓங்கும் மரங்கள் உயர்ந்து முகில்மோதித்
தாங்கும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....3


துவள வருமூழ்த் தொலைக்கும் குருநாதன்
பவள வண்ணன் பத்தர்க் கருளூரான்
தவளை ஒலிக்கச் சாரல் சொரிமேகம்
தவழும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....4


சடையன் முடையார் தலையில் பலிதேரும்
நடையன் துதியில் நனைந்தின் பருளூராம்
தடையின் றுயர்ந்த தருக்கள் முகில்மேவித்
தடவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....5


நாவும் மொழியும் நம்பன் திருப்பேரை
பாவும் பாடப் பத்தர்க் கருளூராம்
கூவும் குயில்தேன் குரலில் மகிழ்மந்தி
தாவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....6


சேரும் வினையைத் தீர்க்கும் அருளாளன்
ஊரும் விடையன் உறுநர்க் கருளூராம்
தேரும் சுவையின் தேனார் மலர்வண்டுச்
சாரும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....7


சித்தம் தெளியும் செம்மை மருந்தான
அத்தன் அன்பால் அடியர்க் கருளூராம்
பத்தர் பரவும் பாவை நிதம்கேட்கும்
தத்தை தமிழ்சொல் சண்பை நகர்தானே....8


வாமம் தன்னில் மங்கை யுடையானின்
நாமம் பலவும் நவில்வர்க் கருளூராம்
தூமென் மலர்த்தேன் சுவைக்கும் அளிகூடிச்
சாமம் பாடும் சண்பை நகர்தானே. ...9


தாயும் ஆன தந்தைக் கழலெண்ணித்
தோயும் அன்பில் தொழுவர்க் கருளூராம்
பாயும் சிட்டுப் பற்றும் கொடியாடச்
சாயும் பொழில்சூழ் சண்பை நகர்தானே. ...10
 

October 09, 2012

அப்பனிடம் ஆலங்காடு

(திருவாலங்காடு)

(எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)

நீலகண் டமொடுசெஞ் சடைசேர் கங்கை
...நிலவுபொன் கொன்றையம் மலரும் சூடி
காலமும் ஆனவன் எமனை எற்றும்
...காலனாய் மாணியைக் காத்த செம்மல்
கோலமுக் கண்ணுதல் எழிலைக் காணக்
...குலைந்திடும் ஊழ்வினை விண்ணோர்க் காக
ஆலமு துண்டருள் செய்த எங்கள்
...அப்பனி டந்திரு ஆலங் காடே....1

மருவறு வெண்பிறைச் சடையன் கையில்
...மான்மழு தீயுடன் சூலம் கொள்வான்
இருவினை தருமிடர் எளிதில் தீர
...இன்னருள் செய்திடும் ஈடில் ஈசன்
கருவுறு பவக்கடல் கடக்கச் செய்வான்
...கண்ணுதல் தருவடி அமர்ந்து தானாய்
அருமறை நால்வருக் குரைக்கும் எங்கள்
...அப்பனி டந்திரு ஆலங் காடே....2

ஊனையும் உயிரையும் உருக்கும் தெய்வம்
...ஒப்பிலா தயையினில் உதிக்கும் அன்பில்
வானையும் மண்ணையும் அண்டம் யாவும்
...மாறிடா கதியினில் வைத்துக் காக்கும்
தானொடு தனதெனும் அகந்தை போக்கும்
...தண்ணருள் தந்தெமைத் தாங்கும் வள்ளல்
ஆனையின் ஈருரி போர்த்த எங்கள்
...அப்பனி டந்திரு வாலங் காடே....3

தழையினை மலரினை சாத்தி,தீரா
...சஞ்சலம் தீர்த்திடும் மலர்த்தாள் போற்றிப்
பிழைமலி வாழ்விதில் பீழை யின்றிப்
...பேற்றினில் உய்வினைப் பெறவும் வேண்டின்
விழைவுடன் இன்னருள் விரைந்து செய்வான்
...வேலையின் விடமுணும் மெய்யன் வெய்ய
அழலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
...அப்பனி டந்திரு வாலங் காடே....4

கனிதனை அம்மையின் கரத்தில் அன்று
...கனிவுடன் ஈந்தமுக் கண்ணன் அன்பர்
நனைமிகு நறுமலர் நற்றாள் தூவி
... நடமிடு கூத்தனை துதிசெய் வாரின்
புனைகிற தீந்தமிழ்ப் பாடல் மாந்தும்
...பூரணன் அருளினை வழங்கும் ஐயன்
அனலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
...அப்பனி டம்திரு வாலங் காடே....5

தங்கமும் வைரமும் சற்றும் ஈடோ
...சங்கரன் தண்ணருள் தானே செல்வம்
செங்கழல் சதங்கையும் செவியில் ஆர்க்க
...சிந்தையில் நிறைந்திடத் தெம்பை வார்க்க
அங்கமும் தேய்ந்திட அரன் தாள் எண்ணி
...அங்கையை ஊன்றியே அம்மை சேரும்
அங்கியைக் கையினில் ஏந்தி ஆடும்
...அப்பனி டம்திரு வாலங் காடே....6

பிணிபவச் சுழலதில் மீள வேண்டிப்
....பெய்கழல் தொழுபவர் பீழை தீர்ப்பான்
தணிவுறு உயர்தவக் கோலம் கொள்வான்
....தனியனாய்க் கானதில் தங்கும் காடன்
துணியெனப் பிறைதனைச் சூடும் தேவைச்
...சூழ்ந்திடும் கணங்களும் சுற்றி ஆர்ப்ப
அணிகுழல் மலைமகள் காண ஆடும்
...அப்பனி டந்திரு வாலங் காடே. ...7

நீர்க்குமி ழியாகுமிந் நிலையில் வாழ்வில்
...நிலைப்பதும் அவனது நேயம்; எங்கும்
பார்க்கும னைத்துமே பரனாய்க் காணும்
...பத்தியில் உருகிடப் பரிந்து வந்து
தீர்க்குமவ் வினைதனை செந்தாள் கூத்தன்
...துடியுடன் தெறித்திடும் பம்பை நாதம்
ஆர்க்கநள் ளிருளினில் நட்டம் ஆடும்
...அப்பனி .னிடந்திரு வாலங் காடே. ...8

கோதிலன் குணநிறை குன்றா னானின்
...குரைகழல் போற்றிக் கூடும் அன்பில்
நாதியும் அவனென நாடும் அன்பர்
...நடுவினில் துணையென நயமாய் நிற்கும்
நீதியின் உருவவன் நேயச் செம்மல்
...நெறிசெலும் தெளிவினை நெஞ்சில் சேர்க்கும்
ஆதியன் அனலினை ஏந்தி ஆடும்
...அப்பனி டந்திரு வாலங் காடே....9

எங்குளன் எம்பிரான் என்று தேடி
...ஏங்கிடும் எளியரின் இதயம் தன்னில்
தங்குவன்; வெவ்வினைத் தாங்கும் உள்ளம்
...தந்திடும் சங்கரன் தாளைப் போற்றும்
குங்கும முகமலர் குளிர்ந்த பார்வை
...கொண்டவள் கூறுடைக் கோல மேவும்
அங்கணன் அனலினை ஏந்தி ஆடும்
....அப்பனி டந்திரு வாலங் காடே....10

உயிரானான் போற்றி


(அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடிவாய்பாடு)

அம்மையொ டாடிடும் ஐயன்
...அடியரின் உளங்கவர் கள்வன்
பொம்மைக ளாகவே நம்மைப்
...புவியினில் நடித்திட வைப்பான்
செம்மையில் திகழுறும் மெய்யன்
...சிகையினில் நதிமதி சூடும்
செம்மலின் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....1

ஓதிடும் நான்மறை ஏற்றும்
...ஒருதனி முழுமுத லாவன்
கோதிலன் குணநிதி யாகக்
...குறைகளை தீர்த்திடும் ஈசன்
மாதிடம் வைத்தவன் ஆலம்
...மணிமிட றுடைகறை கண்டன்
நாதியன் சேவடி போற்றி
...நம்பெரு மானடி போற்றி.

உருவமும் அருவமும் ஆவான்
...உடுக்கையும் சூலமும் ஏந்தும்
மருவறு பிறைதனைச் சூடி
...மன்றினில் ஆடிடும் ஐயன்
இருவினை தருமிடர்த் தீர
...இணையடி தொழவருள செய்வான்
திருவனின் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....3

ஆறுதல் தந்திட வேண்டி
...அனுதினம் தொழுதிடும் அன்பர்
தேறுதல் பெற்றிடத் துன்பம்
...தீர்ந்திட இன்னருள் செய்வான்
ஊறிடும் பரிவினில் காக்கும்
...உமையவள் பங்குடை ஈசன்
சீறர வன்பதம் போற்றி
...சிவபெரு மானடி போற்றி....4

பெருகிடும் பத்தியில் அன்பர்
...பிறைமதிச் சடையனின் சீரை
உருகிட இசைத்தநன் மாலை
...உகப்புடன் சூடிடும் ஐயன்
வெருவரு மறலியை எற்றி
...வீழ்த்திஅம் மாணியைக் காத்தச்
செருவனின் சேவடி போற்றி
....சிவபெரு மானடி போற்றி....5

 

வார்சடை மேல்நதி யோடு
...மதியினைச் சூடிடும் ஐயன்
பேர்புகழ் பாடிடு வாரைப்
...பிணித்திடு வினைவிடு விப்பான்
கார்பொழி வாயருள் பெய்வான்
...கரமதில் கலனொடு பிச்சை
தேர்பவன் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....6

அவ்விடம் இவ்விடம் என்றே
...அனைத்திலும் அணுவிலும் உள்ளான்
செவ்விய தீந்தமிழ்ப் பாவில்
...திகழ்கிற பத்தியில் நிற்பான்
நவ்வியன் நான்மறை போற்றும்
...நாயகன் அடிமுடி காணா
செவ்வழ லானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....7

செவ்விய=சிறந்த
நவ்வி=அழகு.


பேசுவர் அவனுடைப் பெற்றி
...பெரிதவன் தயைசெயும் பாங்கு
சாசுவ தமாயவன் அன்பு
...தன்னை எண்ணுவர்க் கையன்
பூசுவெண் ணீற்றனின் சீற்றம்
...பொடியென எயிலெரி செய்தத்
தேசுடை யானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....8

அந்தஇ லங்கையின் வேந்தை
...அடர்த்தக மடக்கிய ஈசன்
குந்தக மாஇடர் செய்யும்
...கொடுவினை தீர்த்திடு மெய்யன்
செந்தமிழ்ப் பாவிசைத் தேனை
...செவிமடுத் தின்புறும் எம்மான்
செந்தழ லானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....9

நெளியுநல் லுரகமு டன்வான்
...நிலவையும் நதியையும் சூடும்
கிளிகர மேந்துமை பங்கன்
...கேட்டினைத் தீர்த்தருள் செய்வான்
எளியரின் உறுதுணை யாக
...எங்கணும் நிறைந்தவன் காப்பான்
தெளிசடை யானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....10

மாசிலாமணியைத் தொழு நெஞ்சமே

(வட திருமுல்லைவாயில்)

 

(எழுசீர் விருத்தம் - 'மா விளம் மா விளம் மா விளம் விளம்' என்ற வாய்பாடு)

துன்னும் இடரிடைத் துவளும் நெஞ்சமே
....துயரை வெல்வழி சொல்லுவேன்
முன்னைப் பழையவன் மூல மானவன்
....முக்கண் நுதலினன் முடிவிலான்
தன்னை நினைப்பவர் தமக்குத் தயையினைத்
....தந்து காத்திடும் இறையவன்
வன்னன் வடமுல்லை வாயில் மாசிலா
....மணியைத் தொழவினை மாயுமே....1

துன்னும்= சூழ்ந்துவரும்
வன்னம்=அழகு.

நொந்தி டரதனில் நோகும் நெஞ்சமே
...நொடியா வழியினை நுவலுவேன்
சுந்த ரன்கறை சூழ்ந்த கந்தரன்
...துங்க நதியுடை சடையினன்
வெந்த நீறணி மெய்யன் முப்புரம்
...வேவ சினமுற விழித்தவன்
மைந்தன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....2

விஞ்சும் இடரினில் வீழும் நெஞ்சமே
...விலகும் வழியினைக் கூறுவேன்
கஞ்ச மலர்ப்பதம் கருதும் அன்பரைக்
...கனிவோ டருளிக் காப்பவன்
நஞ்ச மமுதென நாடி விண்ணவர்
...நலத்தை எண்ணியே உண்டவன்
மஞ்சன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....3

சிரமம் தொடர்ந்திடச் செய்யும் துன்பதும்
...தீரும் வழியிது நெஞ்சமே
மரக தாம்பிகை வாமம் கொண்டவன்
...மன்றில் ஆடிடும் வல்லவன்
மரம தடியமர் மாத வத்தினன்
...மவுன மாயருள் செய்பவன்
வரதன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....4

பள்ள மேடுகள் பற்றும் வாழ்விதில்
...படிந்து இடருறும் நெஞ்சமே
விள்ள லாகவொர் வெண்ணி லாவுடன்
...வேக மிகுநதி அணிபவன்
அள்ளி வழங்கிடும் அன்பில் கனிபவன்
...ஆடல் மன்றினில் புரிகிற
வள்ளல் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....5

 

அல்லல் தன்னிலே ஆழும் நெஞ்சமே
...அகலும் வழியிது கூறுவேன்
முல்லை நறுங்கொடி மூலம் தன்னையே
...முந்தி காட்டிய மூலவன்
'எல்லை யொன்றிலா ஏற்றம் கொண்டவ
...எளியை நீயென இரங்குவன்
வல்லன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....6

குளமார் கண்ணொடு குமுறும் நெஞ்சமே
...குறைகள் தீர்வழி சொல்லுவேன்
உளமார் உணர்வினில் உற்ற அன்பொடு
...உமையொர் பங்கனின் நினைவொடு
தளமார் வண்ணமாய் சாற்றும் பாமலர்
...தன்னில் தங்கிடும் இறையவன்
வளமார் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....7

விதியி தோவென வெம்பும் நெஞ்சமே
...வெல்லும் வழியிது சொல்லுவேன்
'கதியுன் தாள்'எனக் கத்தும் சிறுவனைக்
...காக்க மறலியை உதைத்தவன்
நதியும் மதியுடன் நஞ்சார் நாகமும்
...நயமாய் சடையில் அணிமுக
மதியன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....8

வீண்பி றவிச்சுழல் விட்டு வெளிவரும்
...விதத்தைச் சொல்லுவேன் நெஞ்சமே
பூண்ப .னணியெனப் பொன்னார் கொன்றையைப்
...பொங்கும் அலைநதி சடையினன்
காண்ப .னன்புறு கண்ணால் எளியரைக்
...காக்கும் வல்லவன் மறைதொழும்
மாண்பன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....9

சித்த மலமதில் திகைக்கும் நெஞ்சமே
...தெளியும் வழியினைச் சொல்லுவேன்
வித்தில் மரமென விறகில் தீயென
...வெளியில் தெரிந்திடா திருப்பவன்
பித்த .னவன் திருப் பேரை உரைத்திடில்
...பீழையைத் தொலைத்திடும் இறையவன்
மத்தன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....10

August 21, 2012

திருநின்றவூர்

(அறுசீர் விருத்தம் - 'விளம் மா தேமா' - அரையடி வாய்பாடு)
(திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்)

துடைப்பவன் வினைசெய் துன்பை; துய்யமெய் அன்பில் வேண்டக்
கிடைப்பவன்; குருவாய்க் கல்லால் கீழமர்ந் தருளும் தேசாய்க்
கடப்பவன் யுகத்தைக் காலமாய்ச் சுழன்றிட ஓட்டிப் பாரைப்
படைப்பவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே. ...1

சேந்தவன் நீல கண்டம் திகழொளி நீற்ற னாக
ஆய்ந்தவன் மறைகள் நான்கும் அடியவர் உள்ளக் கோவில்
ஏய்ந்தவன்; மாணிக் காக இயமனை சினத்தால் எற்றிப்
பாய்ந்தவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....2

சேந்த=சிவந்த

மறைந்தவன் அருள்செய் கின்ற வகையினில் அடியார் நெஞ்சம்
நிறைந்தவன் பூச லாரின் நினைவினில் எழுந்த கோவில்
உறைந்தவன் ஆதி அந்தம் ஒன்றுமில் லாத ஐயன்
பறந்தலை ஆடு வான்தம் பதிதிரு நின்ற வூரே....3

எண்பொலி எழுத்தைந் தென்றும் எண்ணிடும் அடியர்க் கன்பன்
ஒண்பொலி முக்கண் நெற்றி உடையவன் மறைகள் தன்னைப்
பண்பொலி இசையாய் ஓதிப் பரவுவார் துன்பைத் தீர்க்கும்
பண்புடை ஐயன் மேவும் பதிதிரு நின்ற வூரே....4

குவித்திடு கரங்கள் கொண்டு குவிந்திடும் மலர்கள் தூவத்
தவித்திடத் துயர்செய் ஊழைச் சாடியேத் தீர்க்கும் ஐயன்
கவித்திடு முடியாய்க் கொன்றைக் கவினுறச் சடைமேல் சூடும்
பவித்திரன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே...5.

 

ஆடினான் எரிகான் மன்றில் அழலிடை ஒருவன் என்றே
தேடினார் முடிதாள் அன்று திகைத்திட உயர்ந்தான் தீயாய்
வாடினார் இசையில் வெல்ல வந்தவொர் விறகா ளாகிப்
பாடினான் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....6

சேவையன் பொடுசெய் வாரின் தீந்தமிழ்ப் பாவில் தங்கும்
கோவையன் றொருவன் சீறிக் கோலினால் வீச ஏற்கும்
தேவையென் றுமுன்னக் காப்பான் திகழுறு வாம பாகப்
பாவையன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....7

ஊர்த்தவ தாண்ட வம்செய் உத்தமன் அடியார் தம்மின்
சீர்த்தநற் றுணையாய் நின்று தீவினை விளைக்கும் துன்பைத்
தீர்த்தவன் உமைதன் ஆகம் சேர்த்தவன் மதன்நீ றாகப்
பார்த்தவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....8

பொங்குமன் பாலுள் ளத்தில் பூசலார் எடுத்த கோவில்
தங்குவன் எளியர்க் கென்றும் தயையினை வழங்கும் வள்ளல்
எங்கணும் நிறைந்தி ருப்பான் இடமாய் உமையைக் கொண்ட
பங்கினன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....9

எங்கணும்=எங்கும்.

சுற்றமும் சொந்த பந்தத் தொடரெனும் தளைகள் மீட்கும்
உற்றவன் உயிரை அன்பில் உய்ப்பவன் அடியார் நண்ணும்
நற்றவன் குருவாய்ப் பாரில் நலம்பல மாந்தர் கொள்ளப்
பற்றுவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....10

திருவேடகம்

(திருமுக்கால் அமைப்பில்.
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் தேமா
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் மா)


பற்றன லிலேடதும் பசுமையாம் ஏடகப்
புற்றர வினையணி வீரே
புற்றர வினையணி வீருமைப் புகலென
உற்றவர் உறுவதும் உய்வே....1

(பற்றும் அனலில் ஏடதும் பசுமையாம்)

அலைபுனல் எதிர்த்தெழு அந்தமிழ் ஏடக
கலைமதி புனைசடை யீரே
கலைமதி புனைசடை யீருமை வணங்கிட
இலையென விலகிடும் இடரே....2

வையையி லேடெதிர் வந்தடை ஏடக
மெய்யணி வெண்பொடி யீரே
மெய்யணி வெண்பொடி யீருமை நினைபவர்
வெய்யவல் வினைத்தளை விடுமே....3


ஆற்றிலி டருந்தமிழ் அவையடை ஏடக
நீற்றினைப் புனைநுத லீரே
நீற்றினைப் புனைநுத லீரும தலர்க்கழல்
ஏற்றிட நிறைந்திடும் இனிதே....4

தெறிபுனல் எதிரெழு செந்தமிழ் ஏடக
வெறிமலர் புனைசடை யீரே
வெறிமலர் புனைசடை யீருமை நினைபவர்
நெறிதனில் அடைவதும் நிறைவே....5

 

ஒருபுன லிடுதமிழ் உயர்ந்தெதிர் ஏடக
தருநிழல் அமர்ந்தருள் வீரே
தருநிழல் அமர்ந்தருள் வீரும தடிதொழ
இருவினைத் துயரதும் இலையே....6

விரைநதி யிடுதமிழ் வென்றடை ஏடக
வரைமக ளொருபுடை யீரே
வரைமக ளொருபுடை ஈருமை தொழுதிடப்
புரைமலி பவமதும் போமே....7

விசையுறு புனலெதிர் வெல்தமிழ் ஏடக
இசைவிழை செவியுடை யீரே
இசைவிழை செவியுடை யீரும கழல்தொழும்
இசைவுடை யோர்க்கிலை இடரே....8

கோலநல் லிசைத்தமிழ்க் கூடவை ஏடக
நீலகண் டமதுடை யீரே
நீலகண் டமதுடை யீரும தடிதொழ
சீலமு டன்வரும் தெளிவே....9

உய்ந்நெறி காட்டிடும் ஒண்டமிழ் ஏடக
மெய்ந்நெறி யேஉகப் பீரே
மெய்ந்நெறி யேஉகப் பீருமை உன்னுவர்
கைதொழு தடைவருன் கழலே....10

July 21, 2012

மாற்பேற்று அரன்தன்னைச் சிந்தி (திருமாற்பேறு)

 

(திருத்தாண்டக அமைப்பு - எண்சீர் விருத்தம். பொதுவாகக் 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு. ஒரோவழி காய்ச்சீர் வருமிடத்தில் விளம்/ மா வரும். அவ்விடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்)

துள்ளலைகள் அலைக்கின்ற துரும்பைப் போல
...துயரலைக்கும் வினையெல்லாம் மாற வேண்டில்
அள்ளியருள் வழங்குகின்ற ஐயன் தன்னை
...அஞ்சனவேல் விழியன்னை வணங்கும் தேவை
வெள்ளிநிலாச் சூடுகின்ற விடையன் தன்னை
...விந்தைமிகு ஆடலினை நடிக்கும் வேந்தை
தெள்ளுதமிழ்ப் பதிகத்தால் குரவர் போற்றும்
...திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே....1

தீம்புமலி வினைகடந்து மீள வேண்டில்
...செஞ்சடையான் நடமிடுதாள் மனத்தில் கொண்டுக்
கூம்பலரும் நாண்மலர்கள் கோத்துச் சூட்டிக்
...கும்பிட்டுப் பூசிப்பார்க்(கு) அருள்செய் வானைச்
சாம்பலினை மெய்ப்பூசும் மதியன் பேரைச்
...சங்கையின்றி ஓதிடுவார்த் துணையா வானைத்
தீம்பழங்கள் நிறையுமரச் சோலை சூழும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....2

தீம்புமலி வினைகடந்து மீள வேண்டில்
...செஞ்சடையான் நடமிடுதாள் மனத்தில் கொண்டுக்
கூம்பலரும் நாண்மலர்கள் கோத்துச் சூட்டிக்
...கும்பிட்டுப் பூசிப்பார்க்(கு) அருள்செய் வானைச்
சாம்பலினை மெய்ப்பூசும் மதியன் பேரைச்
...சங்கையின்றி ஓதிடுவார்த் துணையா வானைத்
தீம்பழங்கள் நிறையுமரச் சோலை சூழும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....3

தெம்பழிசெய் ஊழ்வினையை விரட்டவேண்டில்
...சித்தமெல்லாம் சிவமாக உய்விப்பானை
வம்பலரார் சிலைமதனை எரிசெய் தானை
...வார்சடையில் மதிசூடும் அண்ணல் தன்னை
அம்பலமே நடிக்கின்ற மேடை யாகி
...ஆடலிலே உயிரனைத்தும் புரக்கின் றானைச்
செம்பரமாய் இலங்குமம்மை அப்பன் தன்னைத்

...திருமாற்பேற்றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....4

செம்பரம்=செம்பொருள்

நாகா பரணமணி நாதன் தன்னை
...நயமாய்ப் பொற்சபையில் நடம்செய் வானை
வாகா யுமையம்மை வாமத் தானை
...வருத்து மூழ்வினையை மாற்று வானைப்
பாகா யினிக்கின்ற பரனின் பேரைப்
...பாட்டால் பரவுமன்பர் பற்றும் கோனை
சேகார் நிறச்சடையன் திங்கள் சூடும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே.... 5

சேகு=செம்மை

தாய்வழியில் வெள்ளத்தால் தவித்து நிற்கத்
...தாயாகப் பெண்ணைவந்து காத்தான் தன்னைப்
பேய்வடிவ அன்னையினைப் பெற்றான் தன்னைப்
...பித்தனென்ற சுந்தரர்க்குத் தூதா .னானைக்
காய்வினையைத் தீர்க்கின்ற கழலன் தன்னைக்
...கரியுரியை உடுத்தவனைக் கதியா வானைச்
சேய்மையனாய் அண்மையனாய்த் திகழ்கின் றானைத்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....6

மொய்குழலாள் உமைபங்கன் முக்க ணானை
...மூலவனாம் பூரணனை முதல்வன் தன்னைப்
பெய்கிறவான் மழையவனைப் பிட்சாண் டானைப்
...பிறைமதியைச் சூடுவானைப் பெம்மான் தன்னைக்
கொய்தமலர் தூவுமன்பர் குறைதீர்ப் பானைக்
...கோதில்லா குணநிதியைக் குழகன் தன்னைச்
செய்வினையின் துன்புதன்னைத் தீர்க்கின் றானைத்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....7

ஆர்த்தவனை நாகத்தை அரைக் கச்சாய்
...ஆராத அன்பினிலே அடியார் தம்மை
ஈர்த்தவனை வெள்ளைநிற இடபத் தானை
...இன்னமுதாய் நஞ்சையுண்ட எம்மான் தன்னைப்
பார்த்தவனை மதனெரியால் படவைத் தானைப்
...பரிவுடனே உமையாளைப் பங்காய் ஆகம்
சேர்த்தவனை செஞ்சடையில் திங்கள் சூடும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....8

அங்கயற்கண் அம்மையுறு ஆகத் தானை
...அடலேறு தனிலமரும் அண்ணல் தன்னைத்
திங்களுடன் கங்கையையும் சிரமேற் றானைச்
...தென்மதுரை தனிலாடல் செய்தான் தன்னை
வெங்கடத்தில் இரவாடும் மெய்யன் தன்னை
...வீதியுலா வருகின்ற விமலன் தன்னை
செங்கமலத்(து) அளிமுரலும் தடங்கள் சூழும்
...திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே....9

வைதிடினும் ஏசிடினும் வஞ்ச மின்றி
...வாழ்வருளிக் காக்கின்ற வள்ளல் தன்னை
மெய்ம்மையெனும் அன்புருவாய் மிளிர்வான் தன்னை
...மெய்யடியார் குறைதீர்க்கும் விடையன் தன்னைக்
கைலைதனின் மன்னவனாய்க் காணும் தேவைக்
...கைத்தலத்தில் அழலேந்திக் காப்பான் தன்னைத்
தெய்வமென நம்பிடுவார் தெளிவா வானைத்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....10

July 13, 2012

ஊன்றாப்பு (Uentrop)

Kamakshi temple in Hamm-Uentrop in Germany (http://kamadchiampal.com/index.php?Itemid=191)

(கலிவிருத்தம் - 'மா மா மா காய்' என்ற வாய்பாடு.)
(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைக ளவைபோகச்")
(சம்பந்தரின் இப்பதிகத்தில் பொதுவாக 'மா தேமா புளிமா புளிமாங்காய்' என்றவாய்பாடு.

இலக்கணக் குறிப்புகள்:
ன்+த = 'ன்ற' என்று திரியும்.
ல்+ம = 'ன்ம' என்று திரியும்.


வான்த வழ்வெண் மதியன் செஞ்சடையன்
கான்த .னில்செங் கனலில் நட்டமிடும்
கோன்தன் கழலை கும்பிட் டன்பினில்சேர்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....1

கூன்பி றையுடன் குதித்துப் பாய்நதியும்
தான்றன் சிரசில் தரித்த செய்யவனை
நான்ம றையும் நாடும் புண்ணியனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....2

தேன்றாங் கலர்கள் திகழ அணிவானை
தோன்றாத் துணையாய்த் துதிப்போர்க் கருள்வானை
ஊன்றாங் குயிரில் ஒளியாய் இருப்பானை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....3

வான்போல் பொழியும் வண்மை கொண்டவனை
ஆன்மேல் அமரும் ஐயனை எழில்மேவ
மூன்றாய்த் திகழும் முக்கட் சோதியனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....4

 

தேன்வார்க் கும்பா செவியேற் கின்றானை
நான்காம் மறைகள் நவிலும் கழலானை
நோன்றார் மனத்தில் நுவலஞ் செழுத்தானை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....5

 

தான்றான் உலகைத் தாங்கி அருள்பவனாம்
ஊன்றான் பதத்தை உள்ளன் பிலரகத்தில்
தேன்றான் சுவையோ திருப்பேர் சொலச்சுவைக்கும்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....6

கூன்றான் விழுந்து குமையும் முதுமையிலும்
ஆன்றான் அமரும் ஐயா எனவழுதால்
ஈன்றா னாகி இரங்கிக் காப்பவனை
ஊன்றாப்(பு) அரனை ஓதி உய்ம்மனமே....7

ஏன்றான் நதியை எழிலார் சடைதன்னில்
தோன்றா அருவன் சோதி யானவனை
கோன்றான் நடத்தில் கோலங் கொண்டவனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....8

தான் தோன் றியெனும் தந்தை தாயில்லா
வான் தோய் சிகர மலையன் சங்கரனை
ஊன் தேய் முதுமை உறினும் தொழவருளும்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே. ...9

தான் தோன்றி=சுயம்பு.

மான் தீ மழுவாள் சூலப் படைக்கரத்தன்
வான்சூழ் கோள்கள் மாறா தியக்குபவன்
ஊன்சேர்ந் துருக உன்னு வார்க்கருளும்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....10

June 23, 2012

திருப்பரங்குன்றம்

(அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)

அரியுடன் அயனறி யாத
...அடிமுடி தனைஉடை யானும்
எரிகடத் திடைநடம் ஆடி
...இடுபலிக் கேஅலை வானும்
பரிவொட ருள்பொழிந் தேநம்
...பழவினை தீர்த்திடு வானும்
திரிதரு எயிலெரித் தானும்
...திருப்பரங் குன்றமர்ந் தானே....1

நுரையிடைக் குமிழிய தாக
...நொடித்திடும் இயல்புடை வாழ்வில்
குரைகழல் நடமிடு தாளைக்
...கும்பிட வந்தருள் வானும்
தரையுள உயிர்களைத் தாங்கித்
...தழைத்திடச் செய்திடு வானும்
சிரமதில் பிறையுடை யானும்
...திருப்பரங் குன்றமர்ந் தானே....2

 

வழுமலி உலகியல் வாழ்வில்
...மாண்புறு நிலைபெற எண்ணித்
தொழுதிடு அடியவர்த் துன்பைத்
...துடைத்துநல் வழியமைப் பானும்
விழுகதிர் போல்நிறத் தானும்
...விரிசடை மேல்நதி சூடி
செழுமண மலரணி வானும்

...திருப்பரங் குன்றமர்ந் தானே....3

 

கீறணி பிறையுடை யானும்
...கிலிதரு வினைதுடைப் பானும்
வீற ணி போர்விடை யானும்
...விண்ணவர் தம்பெரு மானும்
கூ றணி உமைஇடத் தானும்
...குதியலை நதியுடை யானும்
சீறர வம்புனை வானும்

...திருப்பரங் குன்றமர்ந் தானே ....4

 

வில்லலர் கணைமதன் வீழ
...விழித்திடு சினமுடை யானும்
கல்லலர் என்றிட ஏற்கும்
...கருணைசெய் மனமுடை யானும்
சொல்லற நலிவுறும் போதும்
...துணையென முன்வரு வானும்
தில்லையில் ஆடலி னானும்

...திருப்பரங் குன்றமர்ந் தானே....5

 

மரகத நிற உமை கேள்வன்
...மறைபுகழ் செய்யவன் தானும்
அரவுடன் கரிஉரி மேவும்
...அழலுடை அங்கையி .னானும்
சிரமதில் மிளிர்ந்திடு திங்கள்
...செழுமலர்க் கொன்றையி னானும்
திரையினில் மீன்பிடிப் பானும்
...திருப்பரங் குன்றமர்ந் தானே....6

சிரமொரு பத்துடை யானின்
...திறல்தனை அடர்த்திடு வானும்
மரநிழல் கீழமர் மோன
...வடிவினில் திகழ்குரு வாகி
வரமளித் துயர்நிலை கூட்டும்
...மலைமகள் பங்குடையானும்
சிரமலி மாலையி னானும்

... திருப்பரங் குன்றமர்ந் தானே....7

 

விரவிடு மணப்புகை யோடு
...விதவித நறுமலர் சூட்டிப்
பரவிடு பத்தரைக் காக்கும்
...பதமலர் தனையுடை யானும்
இரவினில் எரியிடு கானில்
...எழில்நடம் செயும்தனி யானும்
திரைவிடம் சேர்மிடற் றானும்

...திருப்பரங் குன்றமர்ந் தானே....8

 

உரியதொர் சிவனடி யாரென்(று)
...ஒப்பிட வஞ்சக மாகச்
சுரிதனை வீசிடும் போதும்
...தொழும்சிவ பத்தருக் கன்பன்
விரிசடை நுதல்விழி யானும்
...விடைதனில் அமர்ந்தருள் வானும்
திரியரண் மூன்றெரித் தானும்
...திருப்பரங் குன்றமர்ந் தானே....9

 

முந்தையன் பின்னவன் என்றும்
...மூலவன் முதலவன் றானும்
சந்திரன் வானதி பாம்பைத்
...தலையினில் சூடிடு வானும்
சந்ததம் பத்தியொ டெண்ணும்
...தகவுடை யருக்கருள் வானும்
செந்தழல் மேனியி னானும்
... திருப்பரங் குன்றமர்ந் தானே....10

June 14, 2012

தாராசுரம்

 

கலிவிருத்தம் - 'மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு

சொல்லும்தமிழ் மறைப்பாட்டினில் சுடரும்பர சிவனார்க்(கு)
அல்லும்பகல் பணிசெய்துயர் அரசாள்பவர் வாழ்வைக்
கல்லில்சொலும் தாராசுரம் காணப்பெறும் பேறாய்
செல்வன்கழல் தொழுவார்களைச் சேராவினை தானே....1

சொற்சித்திர மறையோதிடும் துய்யோர்களின் வாழ்வை
நற்பக்குவ பத்திசெயும் நலமாம்கதை யாகக்
கற்சித்திரம் மொழியும்தளி தாராசுரத் தேவை
அற்சித்திடும் அடியார்களை அடையாவினை தானே....2

அண்ணித்தவன் தாள்போற்றிடும் அன்பால்நெகிழ் பத்திப்
பண்ணிற்றுதி செய்தேவினை படவென்றவர் கதைகள்
மண்ணிற்றிகழ் கலையார்தளி தாராசுரத் தானை
எண்ணிப்பணி அடியார்களை எய்தாவினை தானே.....3

அண்ணித்தவன்= அணுகி அருள்செய்த ஈசன்

கோணில்விரி வானில்மினும் உடுவாயுளன் தாளைப்
பூணும்சிர முடைத்தொண்டரின் பொற்பில்திகழ் வாழ்வைக்
காணும்சுவர் சிற்பத்தளி தாராசுரத் தானை
பேணும்குணம் உடையார்களைப் பிடியாவினை தானே....4

கோண்=அணுவிலும் நுண்மைத்து

வெளியில்நட மிடுவான்கழல் விரைமென்மலர் தூவி
தெளிபத்தியில் தொண்டாற்றிய திடசித்தரின் உய்வை
உளிசொல்கதை சிற்பத்தளி தாராசுரத் தானை
அளியும்மனத் தொடுவாழ்த்திடில் அடையாவினை தானே....5

 

ஆலம்கறை கண்டன்கழல் அணிவாரவர் தொண்டை
காலம்நிலைத் திடச்செய்புகழ் காணத்தரும் சிற்பம்
ஞாலம்தனில் செப்பும்தளி தாராசுரம் சென்று
சூலன்றனைத் தொழுவார்களைத் தொடராவினை தானே....6

எல்லாமவன் அருளாகிடும் என்றேநினைத் தன்பால்
சொல்லாலுயர் செயலால்விழுத் தொண்டாற்றியர் உய்வை
கல்லாலொரு கதைசொல்தளி தாராசுரம் சென்று
வல்லான்கழல் தொழுவார்களை மருவாவினை தானே....7

தாயாயொரு பெண்ணுக்கருள் தந்தானவற் கன்பால்
ஓயாதவன் பணியேசெயும் உறுநர்தம துய்வை
தேயாஒளிச் சிலைசொல்தளி தாராசுரம் தன்னில்
சேயான்கழல் தொழுவார்களைத் தொடராவினை தானே....8

எரிபொங்கழல் அருவானவன் இருவர்தொழ அருள்வான்
விரிசெஞ்சடை ஈசன்கழல் விழைதொண்டரின் உய்வை
சரிதஞ்சொலும் சிற்பத்தளி தாராபுரம் மேய
பரியும்பரன் பாதம்தொழப் பற்றாவினை தானே....9

கொண்டல்தவழ் இமயத்தரன் குளிர்பூங்கழல் சூடி
மண்டன்பினில் பணிசெய்தவர் மறையாப்புகழ் வாழ்வைக்
கண்டின்புறச் சாற்றும்தளி தாராசுரம் மேய
அண்டன்கழல் அடைவார்தமை அடையாவினை தானே....10

May 29, 2012

ஆனைக்கா! (திருவானைக்கா)

 

எண்ணுருவன் ஆனைக்கா (திருவானைக்கா)
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

ஒருமன்றில் நட்டமிடும் உமைகேள்வன் மதியுறையும்
மருள்விளைக்கும் மயல்நீக்கும் மதிசூடி அமருமிடம்
பருகென்று பொன்னியன்னை பசுமைநிறை காட்சியள்ளித்
தருகின்ற வயல்சூழும் தண் ஆனைக் காநகரே....1

வெருவவரும் வினைத்தளையை விடுவித்து நலம்சேர்க்கும்
அருளுருவில் திகழ்வோனாம் அம்பலத்தான் அமருமிடம்
திருவடியைப் போற்றிடவே தேடிவரும் பொன்னிநதி
அருகடையும் அழகுடைய ஆனைக்கா நகர்தானே....2

அப் புரங்கள் மூன்றினையும் அனலெரிக்க நகைத்தவன்நம்
ஒப்பரிய அப்பனவன் உமையோடும் அமருமிடம்
எப்புறமும் இருளெனவே நிழலடர்ந்த பசுமரங்கள்
செப்பரிய எழிலாரும் திருவானைக் காநகரே....3

ஆல்தருவின் நீழலிலெ அருள்மோன குருவவனை
நால்வகையாம் மறைபுகழும் நம்பனவன் அமருமிடம்
பால்நுரையாய்ப் பொன்னிநதி பாய்வாய்க்கால் வயலூடே
சேல்பாயும் வளம்சேரும் திருவானைக் காநகரே....4

சஞ்சலத்தை நீக்கியருள் தஞ்சமதைத் தந்தருளும்
குஞ்சரத்தின் தோலுடையான் கூத்தனவன் அமருமிடம்
அஞ்சுகயல் விழிமாதர் அளைந்தாடும் காவிரிபால்
மஞ்சடையும் பொழில்சூழும் மணிஆனைக் காநகரே....5

 

பெறுபவற்றுள் பெரிதவன்சீர் பேறாகப் பாடுபவர்

அறுவினையும் தீர்க்கின்ற ஐயனவன் அமருமிடம்
மறுவறு மணமலர்த்தேன் மாந்துகிற வண்டினங்கள்
உறுபொழில்கள் மஞ்சுவரை உயரானைக் காநகரே....6

 

அழுதவனை சிந்திக்கும் அன்பரிடர் யாவையுமே
நழுவியகல் வழிசெய்வான் நம்பனவன் அமருமிடம்
கொழுமலரில் தேனருந்தக் கூடுமளி முரலுமொலிக்
கெழுமுகிற பொழில்சூழும் கேடிலா.னைக்காவே....7

 

கண்ணீரில் ஆணவமும் கரையவழும் இராவணனின்
பண்ணாரும் மறைகேட்கும் பரமனவன் அமருமிடம்
வெண்ணீறு மெய்பூசி விரிசடையன் புகழ்பாடி
மண்ணோர்கள் அடைகின்ற மணிஆனைக் காநகரே....8

 

நன்றினையே நவகோளும் நல்கிடவும் செய்தருள்வான்
அன்றயன்மால் அறியரியான் அழலானான் அமருமிடம்
நன்மலரில் தேன்மதுவை நாடிமுரல் அளியினங்கள்
பன்மலர் ஆர் பொழில்சூழும் பதிஆனைக் காநகரே....9

 

பித்தனவன் எரியாடும் பேயனவன் தயைசெய்யும்
நித்தனவன் பவமழிக்கும் நிமலனவன் அமருமிடம்
புத்தலர்கள் மலர்ந்திருக்கும் பூவனத்தில் வண்டினங்கள்
தெத்தெனவென்(று) ஆர்த்திருக்கும் திருவானைக் காநகரே....10

May 16, 2012

திருச்சோற்றுத்துறை!


கலிவிருத்தம். 'மா புளிமா புளிமா புளிமா' என்ற வாய்பாடு.
ஒரோவழி தேமா வரும்.

கல்லால் தனுசால் கனிவில் வசவால்
எல்லா இடரும் எளிதாய்ப் பொறுப்பான்
வல்லான் குருவாய் வருவான் அறங்கள்
சொல்வான் பிரியான் சோற்றுத் துறையே....1

எடுதாள் நடம்செய் இறையைத் தொழவே
அடுதீ வினையும் அகன்றோ டிடுமே
நெடுமூ வெயிலை நெருப்பாய் விழியால்
சுடுவான் பிரியான் சோற்றுத் துறையே....2

கணையார் மதனைக் கடுகிப் பொடித்தான்
இணையாம் வினையின் இடரைக் களைவான்
அணைவான் எளியர்க் கருள்வான் அடியார்த்
துணைவன் பிரியான் சோற்றுத் துறையே....3

ஆல மமுதாய் அருந்தும் அருளன்
பாலன் இடரை பரிவாய் தீர்க்கக்
காலன் நடுங்கக் கழலால் உதைசெய்
சூலன் பிரியான் சோற்றுத் துறையே....4

நாடித் தொழுவார் நலிவும் அகல
ஓடி வருவான் உவந்தே அடியார்
ஆடி டுமெழில் அடிபா டலங்கல்
சூடிப் பிரியான் சோற்றுத் துறையே....5

 

வாழ நிலையாம் வழிகாண் பதுவே
தாழ விரிசெஞ் சடையன் தொழுதல்
சூழ வருமூழ்த் தொலைப்பான்;அடியார்த்
தோழன் பிரியான் சோற்றுத் துறையே....6

வேத வடிவில் விளங்கும் பரமன்
நாத வெளியில் நடனம் புரியும
பாதன்;நடையாய் பரவை யிடம்செல்
தூதன் பிரியான் சோற்றுத் துறையே....7

உடுப்பான் புலித்தோல் உடையாய்; கைலையை
எடுத்தான் வலியோ டிசைப்பான் மடுப்பான்
கொடுப்பான் அருளை கொடிய வினையைத்
துடைப்பான் பிரியான் சோற்றுத் துறையே....8

உரியான் அடியார் உளமே தளியாய்ப்
பரிவான் எளியர் படுதுன் பகலப்
புரிவான் தயையைப் பொழிவான் அருளாய்ச்
சொரிவான் பிரியான் சோற்றுத் துறையே....9

உண்டன் புநிறை ஒருவன் கறையார்
கண்டன் அருளும் கழலார் பதத்தான்
அண்டும் வினைகள் அகற்றும் நிலவுத்
துண்டன்
பிரியான் சோற்றுத் துறையே....10

May 09, 2012

அருளாய் அறம் வளர்த்த நாயகியே (திருவையாறு)


(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

விடியலெழு செஞ்சுடரே மேதினியைக் காப்பவளே
வடிவழகி வெவ்வினைகள் வாட்டுமிடர்த் தீர்த்தருளாய்
பொடியணியும் மதியன் தன் பொற்புடைய கற்பகமே
அடியவர்கட் கருந்துணையே அறம்வளர்த்த நாயகியே....1

நையாத வாழ்வுதனை நலிந்தோர்க்கு நல்கிடுவாய்
பையாட ரவத்தானின் பங்குறையும் சங்கரியே
பொய்யாது அருள்வையே புனற்பொன்னிக் கரைதன்னில்
ஐயாறு மகிழ்ந்துறையும் அறம்வளர்த்த நாயகியே....2

பாகத்தைப் பாலுடனே பரிந்துண்ட சுவையாகத்
தேகத்தில் உள்ளத்தில் தித்திக்கும் நாமமம்மா!
சோகத்தைத் தருமூழாம் தீவினையைத் தீருமம்மா!
ஆகத்தைப் பிரியாத அறம்வளர்த்த நாயகியே....3

பாகு+அத்தை= பாகு அதனை.

உருளுகிற புவிதன்னில் உயிரனைத்தும் காப்பவளே
சுருளுடைய கருங்குழலி சுந்தரனின் பங்கினளே
வெருளவரு வினைத்துன்பம் விட்டேகச் செய்திடுவாய்
அருளமுதை அளிக்கின்ற அறம்வளர்த்த நாயகியே....4

அஞ்சுகம்சேர் தோளுடையாய் அருளரசி கயல்கண்ணி
பஞ்சுநிகர் பூங்கழலைப் பற்றவினை ஓடிடுமே
தஞ்சமென உனையடைந்தோம் சஞ்சலங்கள் தீர்த்தருளாய்
அஞ்சனவேல் விழியுடையாய் அறம்வளர்த்த நாயகியே....5

 

வாரணநன் முகத்தானை மகனாகப் பெற்றவளே
நாரணனின் சோதரியே நலியவைக்கும் வினைதீராய்
தோரணமும் கட்டிநறுந் தூபமுடன் மலர்தூவி
ஆரணங்கே அடிபணிந்தேன் அறம்வளர்த்த நாயகியே....6

சோதியுயர் அழலாகத் தொழுமன்பர்க்(கு) அரியானின்
பாதியுனைப் பணியுமன்பர் பாவினிலே உறைபவளே
மோதியெமை தாக்குகின்ற மூள்வினையை போக்கிடுவாய்
ஆதியுனை அடிபணிந்தேன் அறம்வளர்த்த நாயகியே....7

பாலகனின் பயம்தீரப் பாய்ந்துவந்து சினத்தோடு
காலனையே உதைசெய்த காலனவன் கண்மணியே
ஓலமிட வருமிடர்செய் ஊழ்வினையைப் போக்கிடுவாய்
ஆலமுண்டான் பங்கிலுறை அறம்வளர்த்த நாயகியே....8

வெங்கடம்சேர் துஞ்சினார் மேனிலைக்காய் ஆடுபவன்
திங்களையும் கங்கையையும் சென்னிதனில் சூடியவன்
பங்கிலுறை பூரணியே பாரமிகு வினைதீராய்
அங்கயல்போல் கண்ணுடையாய் அறம்வளர்த்த நாயகியே....9

மையாரும் வேல்விழியாய் மஞ்சிமய மங்கையுனை
கையாரக் கும்பிடுவேன் காய்வினையைத் தீர்த்தருளாய்
பையாரும் விடவரவம் படர்மார்பன் பங்குடையாய்
ஐயாறோ டொன்றொடொன்றாம் அறம்வளர்த்த நாயகியே....10

April 14, 2012

பழனத்தரன் பாதம் பணி! (திருப்பழனம்)

('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - என்ற வாய்பாடு)

துயிலும்நிதம் விழிப்பும்தொடர் நிலையாகிடும் உலகில்
மயலில்வரும் இடர்நீங்கவும் துதிசெய்திட அருள்வான்
மயிலும்நடம் இடும்பூம்பொழில் தனில்பாடிடும் குயில்கள்
பயிலும்திருப் பழனத்தரன் பாதம்பணி மனமே … 1

 

வாடும்படி மிகுதுன்பினைத் தரும்வெவ்வினை தீர
ஆடும்பதம் நாளும்பணி பவர்க்கேயருள் செய்வான்
மூடும்புனல் மலராலெழிற் மிகச்சூழ்ந்திட வண்டு
பாடும்பொழிற் பழனத்தரன் பாதம்பணி மனமே … 2


புத்தித்தடம் விலகித்தடு மாறும்நிலை மாறும்
சித்தத்தெளி வினுக்கோர்வழி புகல்வேனது கேளாய்
தித்தித்திடும் திருப்பேருடை சுத்தத்தவன் போற்றி
பத்தர்க்கரண் பழனத்தரன் பாதம்பணி மனமே … 3


ஓலத்திரை கடல்சூழ்ந்திடும் புவிமீதுறு வாழ்வில்
காலத்திடர் செயும்வெவ்வினை தீர்க்கும்தயை கொண்டான்
சூலப்படை உடையான் தன(து)அடியார்களின் துணையாய்ப்
பாலித்தருள் பழனத்தரன் பாதம்பணி மனமே … 4


அலையும்மனம் அடங்கும்வழி மொழிவேனது கேளாய்
தலையில்பிறை சூடும்சிவன் கழல்போற்றிட அருள்வான்
உலவும்வளி தவழ்பூம்பொழில் மணம்வீசிடும் கொடிகள்
பலவும்திகழ் பரனத்தரன் பாதம்பணி மனமே … 5


ஒலியென்றனை தாளந்தனில் இசைவாளவள் காந்தன்
பொலிவொன்றிய ஒளிவீசிடும் திருவாகிடும் உருவன்
நலிவின்றிட அடியாரிடர் தீர்க்கும்தயை நிதியாய்ப்
பலிகொள்பவன் பழனத்தரன் பாதம்பணி மனமே … 6


அனை=அன்னை,இடைக்குறை
பொலிவு+ஒன்றிய=பொலிவொன்றிய


சுடரேந்திடும் நுதல்கண்ணினன் முழவோடதிர் துடிசெய்
நடையேந்திடும் திருவாடலில் அடியார்க்கருள் செய்வான்
சடையேந்திய மலர்கொன்றையில் மிளிர்வான்கரம் மழுவாட்
படையேந்திய பழனத்தரன் பாதம்பணி மனமே … 7


சேர்க்கும்நெறி கூட்டும்அடி யவர்க்கேஉயர் அன்பை
வார்க்கும்விழி நுதலோன்கழல் தொழவேவினை மாயும்
போர்த்தவ்வெழில் வனத்தில்கடும் தவமேசெய கணையை
பார்த்தற்கருள் பழனத்தரன் பாதம்பணி மனமே … 8


மண்ணாகிடும் யாக்கைக்கொரு நலம்சேர்வழி சொல்வேன்
பெண்ணோரிடம் கொண்டானவன் கழலேதுணை என்றே
"கண்ணா!கறைக் கண்டா!எமக் கருள்வாய்!"என வேண்டிப்
பண்ணார்பொழில் பழனத்தரன் பாதம்பணி மனமே … 9


தீங்கற்றிடும் உயர்வாழ்வினைத் தருவான்கழல் நாடி
ஓங்கித்திகழ் அழலோன் திருப் புகழ்பாடிட அருளும்
பூங்கொத்துகள் உதிர்ந்தேபுனல் ஆடும்கவின் பொன்னி
பாங்கர்த்திகழ் பழனத்தரன் பாதம்பணி மனமே … 10

April 04, 2012

ஆரூர் அரன்தாள் (திருவாரூர்)

 

(அறுசீர் விருத்தம் - '5 மா + மாங்காய்')

பூக்கும் மலர்கள் பொலிய இலங்கும் பொற்றாள் வினையாவும்
தீர்க்கும் அடியார்க் கருளை சேர்க்கும் திருத்தாள் எரிகானில்
சேர்க்கும் லயத்தில் துடியார் நடமே செய்தாள் புகழ்சேர்தாள்
ஆர்க்கும் கழலை அணிந்த ஐயன் ஆரூர் அரன்தாளே. …. 1

என்பும் பெண்ணாய்க் குடத்துள் ளிருந்து எழவே பதிகத்தால்
சம்பு மகிழ சம்பந் தர்தாம் சாற்றித் தொழும்நற்றாள்
துன்ப வினையைத் தீர்க்கும் செந்தாள் தூதாய் நடக்கும்தாள்
அன்பர் நெஞ்சை அகலா திருக்கும் ஆரூர் அரன் தாளே. …. 2


என்பும் பெண்ணாய்க் குடத்துள் ளிருந்து எழவே பதிகத்தால்
சம்பு மகிழ சம்பந் தனும்செஞ் சடையன் தொழும்தண்தாள்
துன்ப வினையைத் தீர்க்கும் செந்தாள் தூதாய் நடக்கும்தாள்
அன்பர் நெஞ்சை அகலா திருக்கும் ஆரூர் அரன் தாளே. …. 3

பாவை புனித வதியாம் அம்மை பற்றிப் பரவும்தாள்
கோவை கைலை வெற்பில் ஆடல் குறித்தே பணியும்தாள்
நாவை பழக்கி அஞ்சக் கரத்தை நவில வினைசெய்நோய்
யாவை யும்தீர்த் தருளும் செல்வன் ஆரூர் அரன் தாளே. …. 4


துண்டப் பிறையும் விண்ணின் நதியும் துலங்கும் அணியாகக்
கண்டு நிகர்த்த மொழியாள் உமையின் காந்தன் நடம்செய்தாள்
செண்டு மலர்த்தார் சூட்டி அடியார் சிந்தை குளிரும்தாள்
அண்டம் எல்லாம் கடந்து நின்ற ஆரூர் அரன் தாளே. …. 5


கன்றிச் சிவக்கத் தெருவில் விறகுக் கட்டைச் சுமக்கும்தாள்
தொன்று கைலையில் அம்மை பாடத் தூக்கி நடம்செய்தாள்
மன்றில் சக்தி நாணும் படியே வாகாய் உயர்பொற்றாள்
அன்று தூதாய் நண்பர்க் கலைந்த ஆரூர் அரன் தாளே. …. 6


பொருத்த மான சதங்கை கழலில் பொலிய ஒலிசெய்தாள்
வருத்தும் வினைசெய் நோயைத் தீர்க்கும் மருந்தா கிடும்பொற்றாள்
கருத்தில் என்றும் நிலையாய் நின்று காக்கும் வரமாம்தாள்
அருத்தி யோடு பத்தர் போற்றும் ஆரூர் அரன் தாளே. …. 7

தலையில் அரவு கொன்றை மதியும் தாங்கி அருளும்தாள்
அலையும் மனத்தை அடக்கி அருளில் அணைக்கும் புனிதத்தாள்
கலையும் கனவாம் உலக வாழ்வை கதியில் செலுத்தும்தாள்
அலர்கள் தூவி அமரர் போற்றும் ஆரூர் அரன் தாளே. …. 8

 

பரியும் தயையின் திறத்தை அன்பர் பாடி வணங்கும்தாள்
திரியும் நிலையில் பலியைத் தேரத் தினமும் அலையும்தாள்
விரியும் வெளியில் நடனம் ஆடி விந்தை புரியும்தாள்
அரியும் அயனும் அடைதற் கரிய ஆரூர் அரன் தாளே. …. 9

தையல் உமையை இடது பங்கில் தாங்கி அருள்வான் தாள்
கையில் சூலம் மழுதீ யோடு கலைமான் உடையான் தாள்
மெய்யில் நீறு பூசும் அடியார் வேண்டித் தொழும்நற்றாள்
ஐயம் ஏற்க ஊரூர் நடக்கும் ஆரூர் அரன் தாளே. …. 10

March 19, 2012

கோள் அரா மாலைக் குழகன் (திருக்கயிலை)

 

(1 முதல் 9 பாடல்களில் ஒவ்வொரு பாடலிலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்ற கோள்களுள் ஒரு கோளின் பெயர் அமைந்து வரப் பெற்றது)

('மா புளிமா புளிமா புளிமாங்காய்' என்ற வாய்பாடு)

பொழுதாம் விடியல் எழுஞா யிறுபோல
எழிலார் சுடராய் இலகும் தழல்மேனி
குழுவா யடியார் குவிவார்க் கருள்செய்வான்
மழுவாட் படையன் கயிலை மலையானே....1

சங்கம் வளர்செந் தமிழில் திருப்பாடல்
திங்கள் அணியாய்த் திகழும் சடையானின்
பொங்கும் அருளைப் புகழும் இசையேற்பான்
கங்கை அணிவான் கயிலை மலையானே....2

செவ்வாய் சிரிப்பில் திகழும் குழகன் தான்
எவ்வா றுமவன் இரங்கும் இறையாவான்
அவ்வா றுவகை அவல நிலைவந்து
கவ்வா தருள்வான் கயிலை மலையானே....3

காம, குரோத, மோக, லோப, மத, மாச்சர்யம் என்னும் ஆறுவகை எதிரிகள்.

தூக்கும் திருத்தாள் தொழுவார்க் கிடர்செய்துத்
தாக்கும் வினைகள் சரிய விழியன்பில்
பூக்கும் அரனற் புதன் தன் நிகரில்லான்
காக்கும் கடவுள் கைலை மலையானே....4

உயவுற் றரக்கன் விரலால் நசுக்குண்டே
இயமோ டிறைஞ்சும் இசையைச் செவியாழன்
றுயர்வாள் அளித்த ஒருவன் சிவநாதன்
கயமார் சடையன் கயிலை மலையானே....5

செவி+ஆழ்+அன்று
உயவு=வருததம்.
இயம்=வாத்தியம்.

ஆழ்=ஈடுபாட்டுடன் ஆழ்ந்து.

இராவணன் அகம்பாவத்தில், கைலைமலைப் பெயர்க்க முயல்வதை அறிந்த ஈசன், தன் கால் விரலாலழுத்த, இராவணன் நெருக்குண்டு வருந்தி சாமகானம் இசைத்தான். ஈசன் ,அந்த கானத்தில் ஈடுபட்டு, சந்திரஹாசம் எனும் வாளை அளித்தார்.

 

வெள்ளிப் பனியாய் விளங்கும் மலைமன்னன்
துள்ளும் நதியைச் சுமக்கும் சடைகொண்டான்
கொள்ளும் தயையில் கொடுக்கும் அருளின்பக்
கள்ளைச் சொரிவான் கயிலை மலையானே....6

மறைஆர் திருமா மதுரை நகர்தன்னின்
இறையாய்க் கொலுவில் இனிதாய் அருளீந்தப்
பிறைஆர் சடையன் பலவே சனிருத்தன்
கறையார் மிடறன் கயிலை மலையானே....7

நிலையாய் கதியாய் நிழலாய் எளியோர்க்காய்
இலையே துயரம் எனவே அருளீவான்
அலையார் நதியோ(டு)அராகு ரவம்சூடி
கலைமான் கரத்தன் கைலை மலையானே....8

விரைசேர் அலங்கல் மிளிர நடம்செய்யும்
குரைசே வடிக்கே துநிகர் எனப்போற்றின்
மரை,தீ,மழு,கப் பரைதன் கரம்கொண்டான்
கரைசேர்த் திடுவான் கைலை மலையானே....9

விதிசெய் தளையை விலக்கும் இறையோனை
துதிசெய் பவரின் துணையாய் வருமீசன்
நிதியன் அருள்வான் நிகரில் பரிவோடு
கதியைத் தருவான் கைலை மலையானே....10

March 06, 2012

திருக்கூடலையாற்றூர் !

 

கலிவிருத்தம் - 'விளம் மாங்காய் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு.

ஆடலில் வல்லான் தன் அன்பனின் பண்ணாரும்
பாடலை உவந்தேற்கும் பரிவினில் முதுகுன்றம்
நாடிடும் அவர்தம்மை நம்பனும் வழிகாட்டிக்
கூடவும் வருவானூர் கூடலை யாற்றூரே....1

மொக்குளின் நிகராக முடிவுறும் வாழ்வீதில்
அக்கரம் அஞ்சோதின் அன்பொடு வினைதீர்ப்பான்
இக்குவில் மதவேளை எரித்தவன் சிரமீது
கொக்கிற கணிவானூர் கூடலை யாற்றூரே....2

நாவினில் இனிக்கின்ற நலம்தரும் பெயரானை
பாவினில் இசைத்தோதும் பத்தரின் துணையாவான்
கூவிடும் குயில்கொஞ்சும் குளிர்நிழல் தருமேவும்
கூவிளம் அணிவானூர் கூடலை யாற்றூரே....3

தேன்சுவை பதிகங்கள் செவிமடுத் திடுமீசன்
மீன்விழி உமைபங்கன் வேண்டிய அருள்செய்வான்
கான் தனில் தழலாடி கற்றைவார் சடைமீது
கூன்பிறை அணிவானூர் கூடலை யாற்றூரே....4

கான்=காடு


பல்வகை நிலைகாணும் பத்திசெய் வழிதன்னில்
வெல்வழி இறைதாளை விட்டிடா நினைவாகும்
வல்வினை அகன்றோடும் வாழ்வினைத் தருமீசன்
கொல்விடை அமர்வானூர் கூடலை யாற்றூரே....5

 

வார்சடை அதன்மீது வான்மதி அணிவான்தன்
சார்கிற நிறையன்பில் தனதடி யரைக்காத்துச்
சேர்கிற நிதியாகத் திகழ்ந்திடும் அருளாவான்
கூர்மழு உடையானூர் கூடலை யாற்றூரே....6

வெஞ்சினம் எழவேளை விழித்தெரி படச்செய்தான்
நஞ்சணி கறைகண்டன் நற்றவ குருவாகி
அஞ்சலென் றருள்செய்து அடைக்கலம் தருமீசன்
குஞ்சரத் துரியானூர் கூடலை யாற்றூரே....7

காளமும் அமுதென்றுண் கறைமிட றுடையானும்
நீளவெந் துயர்செய்யூழ் நீங்கிட அருள்தந்துத்
தூளவை யெனதீர்க்கும் தொண்டரின் துணையாவான்
கோளர வணிவானூர் கூடலை யாற்றூரே....8

எங்குளன் இறைவன் தான் என்றவன் அருள்தேடின்
தங்குவன் உளம்தன்னில் தாங்கிநம் வினைதீரப்
பொங்கிடும் தயைசெய்வான் பொலிவுறும் சடைமீது
கொங்கலர் புனைவானூர் கூடலை யாற்றூரே....9

நோற்றிடும் அடியாரின் நோய்செயும் வினைதீர்ப்பான்
ஆற்றினை பிறைதன்னை அழகுடை சிரம்கொண்டான்
சீற்றமும் மிகவன்று சிறுவனுக் கருள்செய்யக்
கூற்றினை உதைத்தானூர் கூடலை யாற்றூரே....10

March 03, 2012

திருமழபாடி

 

வண்ணவிருத்தம் - "தனனா தனனா .. தனதான"

வலைமீ தினிலே.. படுமீனாய்
...வதையே செயுமூ..ழதுவீழும்
கலைசேர் மதிசூ.. டிடுநேசன்
...கழலே தருவான்..துணையாக
நிலையா மிறைவோன்..அருளேதம்
...நினைவா யடியார்..தொழுமீசன்
அலையார் புனல்சேர்.. மழபாடி
...அகலா துறைமா..மணிதானே!...1

துளிவான் நிலவோ..டலையாறும்
...சுருளார் சடைமேல்.. அணியாகி
வெளியே சிவனா.. டிடுமேடை
...விரையார் கழலோன்..நடமாகும்
தளியே அடியார்.. மனமாகும்
...தரு ஆல் நிழல்கீழ்.. குருவாவன்
அளிஆர் பொழில்சூழ்.. மழபாடி
...அகலா துறைமா.. மணிதானே....2

 

பணியோ டலையா.. றதனோடு
...பனிவா .னிலவை.. அணிவானே
தணியா நனிகோ..பமதாலே
...தழலாய்..மதவேள்.. பொடியானான்
பணிவே உருவா .. முழவாரப்
.. படையா ளிபரா .. வியநாதன்
அணியார் பொழில்சூழ் .. மழபாடி
...அகலா துறைமா.. மணிதானே....3

பணி = பாம்பு

பொடி = சாம்பல்

மதவேள் = செருக்குள்ள மன்மதன்.

செடியா யடர்தீ .. வினையாலே
...தெளிவே துமிலா .. துழல்வாரும்
நொடியே அரனா.. மமதோதில்
...நுதலார் விழியோன் .. புகலாவான்
துடியா ரிடையா .. ளுமைநாதன்
...துணையா யிணைதாள் .. தருமீசன்
அடியார் திரளூர் .. மழபாடி
...அகலா துறைமா .. மணிதானே....4


தழையோ மலரோ .. அடிதூவின்
....சதமே அடைவா .. ரருளேதான்
பிழையே செயலா .. யலைவோரும்
....விடையோ .னினைவா .. லுயர்வாரே
விழைவா யரனார் .. புகழோதி
....மிகவே அடியார் .. தொழுமீசன்
அழகார் பொழில்சூழ் .. மழபாடி
....அகலா துறை மா மணிதானே....5

இதமா கிடுமே .. சிவநாமம்
....இணையே இலையே .. இனிதேதான்
முதலா .னவனாய் .. முடிவானான்
....முனமா லடிசேர்.. குருவானான்
சதமா யவனே .. கதியாகும்
....சரணா யடைவா .. ருளமேவும்
அதளா டையினான் .. மழபாடி
....அகலா துறைமா மணிதானே....6

 

நலமே விளைவாய் .. அடைநெஞ்சே
...நடுவாய் விதையாய் .. இறைநேசம்
நிலைபே றுடையான் ..நினைவாகின்
....நிறைவாய் இனிதாய் .. வருவானே
தலையோ டதிலே .. பலிதேர்வான்
....தழலாய் மலையாய் .. அருளீசன்
அலைகா விரிபாய் .. மழபாடி
....அகலா துறைமா .. மணிதானே....7

நறைசேர் மணமோ.. டலர்பூவை
...நவமாய் சரமாய் அணிவானே
கறைசேர் மிடறோன் .. பிறைசூடி
...கழலே சரணாய் .. அடைவாரின்
குறையே கிடவே .. வருமீசன்
...குணமா நிதியாம் .. குருநாதன்
அறைஆர் புனல்பாய்.. மழபாடி
...அகலா துறைமா .. மணிதானே....8

நறை=தேன் என்னும் பொருளில்.

 

சகியா இடராய் .. வினைசூழின்
...சரியா மனமே .. தருவானே
துகிலா யதளே .. உடையானின்
...துதிசேர் இசையே..இனிதாகும்
முகிலார் பனிமா .. மலைநாதன்
...முழவார் ஒலிசேர் .. நடராசன்
அகிலார் புகைசூழ் .. மழபாடி
...அகலா துறைமா .. மணிதானே....9

சகியா = தாங்கொணாத,

விழவார் கொலுவாய்.. எழிலாக
...விடைமீ தமர்வான்.. அருள்நாடிப்
பழமோ டலர்மா.. மலராலே
...பதமே தொழுவார்.. பதியாவான்
தழலா டிடுவான்.. எரிகானில்
...தவமே உருவா..கியமோனி
அழகார் தலமாம்.. மழபாடி
...அகலா துறைமா.. மணிதானே....10

March 02, 2012

திரு ஆனைக்கா !

 

(கலிவிருத்தம் - 'மா மா மா விளம்' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய மாதரார்")

இருள்செய் ஊழின் இன்னல் இரிந்திட
பொருள்கொள் உய்வாய் புகல்கொள் நெஞ்சமே
தெருள்கொள் எண்கால் சிலந்தி ஆளவே
அருள்செய் அண்ணல் ஆனைக் காவையே....1

இரிந்திட= சாய
தெருள்கொள்=(சிவ பக்தியில்)தெளிவுடைய.

ஒளிக்குள் வானாய் ஓங்கு வான்பெயர்
விளித்து நினைந்து வேண்டு நெஞ்சமே
பிளிற்றும் வேழம் பெறவோர் நற்கதி
அளித்த அண்ணல் ஆனை காவையே....2

 

பொன்பெற் றாலென் புகழே கொண்டிலென்
அன்புற் றிறைஞ்சி அடைக நெஞ்சமே
முன்புற் றவ்வூழ் முற்றும் தீர்த்தருள்
அன்பத் தனுறை ஆனைக் காவையே....3

வெம்மை செய்தீ வினைகள் நீங்கிடச்
செம்மை நிலையுறச் சேர்க நெஞ்சமே
தம்மை எண்ணி சாற்று வோர்க்கருள்
அம்மை அப்பன் ஆனைக் காவையே....4

 

சுழலார் வினைசெய் துன்பில் சிக்கியே
உழலா தடைய உரையென் நெஞ்சமே
கழலார் பாதன் கனகக் கொன்றையன்
அழலார் விழியன் ஆனைக் காவையே....5

வலையில் மீனாய் வதைசெய் வெவ்வினை
இலையென் றடைய இறைஞ்சு நெஞ்சமே
தலைவன் மலர்பூந் தாளை காவிரி
அலைகொண் டேத்தும் ஆனை காவையே....6

 

மாறு படுமிவ் வைய வாழ்வினில்
தேறு தலுற சேர்க நெஞ்சமே
வீறு கொண்டு வேக மாய்விழும்
ஆறு சூடி ஆனைக் காவையே....7

இடுக்கண் தீர எய்து நெஞ்சமே
திடுக்கிட் டதிர சிமைய வெற்பினை
எடுக்க முயன்ற இலங்கை மன்னனை
அடர்த்த அண்ணல் ஆனைக் காவையே....8

 

இரியும் இன்னல்; இடர்செய் வல்வினை
சரிய எண்ணில் சாற்று நெஞ்சமே
உரியன் அன்பர்க்(கு); உன்னா தார்க்கவன்
அரியன் உறையும் ஆனைக் காவையே....9

சாற்று=சொல்லு.

வெந்து யரற விழைக நெஞ்சமே
சிந்தை சிவமாய்த் திகழ்பேய் அம்மையை
அந்த மிலன்பில் அன்னை யேஎனும்
அந்தி வண்ணன் ஆனைக் காவையே....10

 

February 04, 2012

திருவேடகம்!

இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:


(மா + கூவிளங்காய் + நிரை + கூவிளம்-கூவிளங்காய் / தேமா-கருவிளங்காய்)


அடியின் முதற்சீர் நெடிலில் முடியும்; மூன்றாவதாக வரும் நிரைச்சீரில் நெடில் இராது; 4-5 சீர்களிடை வெண்டளை பயிலும்; அடியின் ஈற்றுச் சீரின் முதல் அசையில் நெடிலோ ஒற்றோ வரும்.
(சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து")


பின்வரும் பாடல்களுள் சில ஈசனை முன்னிலையிலும், சில படர்க்கையிலும் பாடுவன.

(சிவசிவா நன்றி!)



தேவா தீஞ்சுடரே சிவ சுந்தரத் தெள்ளமுதே
நோவா கின்றவினை நொறுங் கச்செயு நுண்மையனே
ஓவா துன் துணையே உறத் தந்தருள் ஒண்பொருளே
சேவார் வெல்கொடியாய் திரு ஏடக மேயவனே....1

மூவா முன்னவனே முழு தாகிய மூலவனே
காவா என்றவுடன் கனிந் தேயருள் செய்திடவே
மாவாம் சேவமர்ந்து மலைப் பெண்ணுடன் வந்தருள்வாய்
தேவா சிற்பரனே திரு ஏடக மேயவனே....2

 

எந்தாய் உன்நிழலில் எமை வைத்தருள் ஈந்திடுவாய்
கந்தார் பூவலங்கல் கமழ் தோளுடை கண்ணுதலே
சந்தார் தேவாரத் தமிழ் மாந்திடும் தற்பரனே
செந்தீ மேனியனே திரு ஏடக மேயவனே....3

சந்தார்=இசை நிறைந்த
கந்தார்= நறுமணம்நிறைந்த


பேரா யானவனை பிறை சூடியை போற்றிசெயச்
சேரா வல்வினைகள் தெறித் தோடிடச் செய்திடுவான்
காரார் மாமிடறா கழல் தந்தருள் கண்ணுதலே
தீரா என்பவர்க்கே திரு ஏடக மேயவனே....4

பேராய் ஆனவன்= நாமரூபன்.

 

ஆரா இன்னமுதே அழ லாயொளிர் செம்மலையே
காரார் மேகமெனக் கனி வாகும் அருள்மழையே
தாரார் தோளுடையாய் தருக் கீழமர் சற்குருவே
சீரார் கின்றபதி திரு ஏடக மேயவனே....5

பையார் நச்சரவைப் பரி வாக அணிபவனை
மையார் கண்ணியுமை மண வாளனை மாதவனைக்
கையால் தூமலர்பொற் கழல் தூவியெம் அங்கணனே
செய்யா என்பவர்க்கே திரு ஏடக மேயவனே....6

 

மின்னார் செஞ்சடையில் மிடை யும்பிறைக் கண்ணியுடன்
பொன்னா லேஇழையும் பொலி மார்புடை பூரணனாய்த்
தன்னே ரில்நடனம் தனை ஆடிடும் தாண்டவனே
தென்னா என்பவர்க்குத் திரு ஏடக மேயவனே....7

இழை= ஆபரணம்.
மிடைதல்=செறிதல்.


புரமோர் மூன்றினையும் பொடி யாகிடப் புன்னகைத்தாய்
சுரமார் பண்ணிசையில் சுக மேயுணர் வானவனே
வரமா மஞ்செழுத்தை மனம் ஓதிட வந்தருள்வாய்
திரையார் கங்கையனே திரு ஏடக மேயவனே....8

 

தொன்றா யானவனே துதி செய்பவர்க்(கு) அண்மையனே
வென்றாய் பூங்கணையை விடு வேளெரி வீழ்ந்திடவே
அன்றோர் தோழனுக்காய் அருள் செய்திடத் தூதுவனாய்ச்
சென்றாய் எற்கருளாய் திரு ஏடக மேயவனே....9

மட்டார் பூங்குழலி மகிழ் மாமலை மன்னவனே
அட்டாய் தென்னிலங்கை அரக் கன்திறல் அற்றிடவே
பிட்டே உண்டரசன் பிரம் பாலடி பட்டவனே
சிட்டா என்பவர்க்கே திரு ஏடக மேயவனே....10

January 24, 2012

சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி (திருச்சிராப்பள்ளி)

 

(எண்சீர் விருத்தம் - 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)

ஆராத பேரின்ப அருளா .னானை
...அயன்மாலும் தொழுதேத்தும் அழலா.னானை
சீராரும் பிறைமேவும் சென்னி யானை
...செந்துவர்வாய்க் குமிண்சிரிப்பில் திகழ்கின் றானை
வாராத செல்வமென வருகின் றானை
...வாழ்வாக நினைத்தன்பர் வழுத்தும் கோனை
தீராத வினைதீர்க்கும் தெய்வ மானச்
....சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....1

நேயவனை நின்மலனை நிதியா .னானை
...நினைவினிலே எப்பொழுதும் நிற்கின் றானை
மேயவனை அன்பருளம் வீற்றான் தன்னை
...வெண்ணீற்றன் குளிரிமய வெற்பின் கோனை
தீயவினை செய்நோயைத் தீர்க்கின் றானை
...தேன் தமிழில் தேவாரம் செவியேற் பானை
சேயவனைத் தந்தருளும் தாயும் ஆன
...சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....2

நேயவன்=மிக்க அன்புடையவன்.
மேயவன்=விரும்பியவன்

 

வான்தங்கு முகிலினம்பெய் மழையா னானை
...வண்மைமிகு தயையினிலே வாழ்விப் பானைக்
கான்தங்குத் தீயாடும் கழலன் தன்னைக்
...கண்டுவக்கும் அடியார்க்குக் கண்ணா னானை
ஊன்தங்கு முயிர்தன்னில் உயிர்ப்பா னானை
...உற்றிடுமோர் புகலாக உதவு வானைத்
தேன்தங்கு கொன்றையுடன் திங்கள் சூடும்
...சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....3

பூவைஉமா தேவியினைப் புடைவைத் தானைப்
....பொன்னவனை அங்கணனைப் பூசிப் போரின்
நோவையிலா தருள்செய்யும் நுதல்கண் ணானின்
....நூறுபத்து பெயரினையே நுவன்று போற்றும்
நாவையலால் வெறிதரற்றும் நாவை வேண்டா
...நயனுடைய அடியாரின் நாதன் தன்னை
சேவையெலாம் எளியர்க்காய்ச் செய்தல் வேட்கும்
....சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....4

 

சந்தமுறு திருமறையில் தமிழா .னானை
...சஞ்சலங்கள் தீர்ப்பவனை தனிய ளான
வந்தியவள் கூலியாக வந்த போது
...மன்னன்கைத் தடிவீச வலிகொண் டானை
சுந்தரரின் தோழனெனத் தூதா .னானை
....தொண்டருளம் கண்டருளும் துய்யத் தேவை
சிந்தையினில் நின்றவனைத் திருநீற் றானை
...சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே!....5

ஓங்கழலாய் உயர்ந்தொளிரும் ஒருவன் தன்னை
...உற்றிடுமோர் துணைவனென உள்கு வாரைத்
தாங்குகிற அருள்நிதியைத் தம்பி ரானைச்
...சந்ததமும் அன்பருளம் தங்கு வானைப்
பூங்கழலன் திருநடனம் போற்று கின்ற
...புண்ணியராம் அடியார்க்குப் புகலாய் நின்று
தேங்குமன்பில் நிறைவானை சேயூர் வானை
...சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே!....6

உள்கு=நினை.

 

கூடிவந்த அன்பரெலாம் கோவில் கொண்ட
...கூத்தன்தாள் அடைக்கலமாய்க் கொள்வார் தம்மை
நாடிவந்த வினைதன்னை நலியச் செய்யும்
...நற்றவனை உலகினையே நடத்து வானை
வாடிநொந்து பார்த்திருக்கும் மகளை எண்ணி
...வருவெள்ளப் பெருக்கதனால் வாரா தாய்க்காய்த்
தேடிவந்து தாயுமானத் தெய்வ மான
...சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே!....7

நேத்திரங்கொள் நுதலானை நேயன் தன்னை
...நீலமணி மிடற்றானை நிதமும் போற்றிப்
பாத்திரமாய் அவனுக்குப் பத்தி பண்ணிப்
...பற்றிடும்தாள் கதியென்றே பரவு மன்பில்
பூத்திரள்கை நிறைந்திடவே பூசித் தேத்தும்
...புண்ணியம்செய் அடியாரின் புனிதத் தேவைத்
தீத்திரள்போல் மேனியனைத் திருநீற் றானைச்
...சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....8

பாத்திரம்= தகுதி என்னும் பொருளில்.

 

'கூவிடுஇன் குரலினிலே குயிலே!' என்று
...குயில்பத்துப் பாட்டிசைக்கும் குழகன் தன்னை
பாவடியில் தாண்டகம்சொற் பதங்கள் ஆடும்
...பாங்கினிலே நடனம்செய் பரனை போற்றிப்
பூஅடியில் தூவியன்பர் பூசை செய்தே
...புங்கவனின் அஞ்செழுத்தைப் பொலிய ஓதிச்
சேவடியால் கூற்றுதைத்துச் சிறியன் காத்தச்
...சிராப்பள்ளி சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....9

தீங்கன்னல் இன்சுவைசேர் சீரார் நாமம்
...சிந்திக்கும் அன்புக்குள் சிக்கு வானை
ஆங்கன்று மழலைக்காய் அம்மை யோடே
...அமுதீந்துப் பசிதீர்த்தே அருள்செய் தானை
தாங்கொண்ணா வல்வினைசெய் சஞ்ச லத்தைச்
...சாடியென்றும் தயைசெய்துத் தாங்கு வானைத்
தீங்கில்லா நிலையருளும் செல்வன் தன்னைச்
...சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே!....10

தேம்,தீம்=இனிமை
தீம்+கன்னல்=தீங்கன்னல்
ஆங்கு+அன்று= ஆங்கன்று