(எண்சீர் விருத்தம் - 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)
ஆராத பேரின்ப அருளா .னானை
...அயன்மாலும் தொழுதேத்தும் அழலா.னானை
சீராரும் பிறைமேவும் சென்னி யானை
...செந்துவர்வாய்க் குமிண்சிரிப்பில் திகழ்கின் றானை
வாராத செல்வமென வருகின் றானை
...வாழ்வாக நினைத்தன்பர் வழுத்தும் கோனை
தீராத வினைதீர்க்கும் தெய்வ மானச்
....சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....1
நேயவனை நின்மலனை நிதியா .னானை
...நினைவினிலே எப்பொழுதும் நிற்கின் றானை
மேயவனை அன்பருளம் வீற்றான் தன்னை
...வெண்ணீற்றன் குளிரிமய வெற்பின் கோனை
தீயவினை செய்நோயைத் தீர்க்கின் றானை
...தேன் தமிழில் தேவாரம் செவியேற் பானை
சேயவனைத் தந்தருளும் தாயும் ஆன
...சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....2
நேயவன்=மிக்க அன்புடையவன்.
மேயவன்=விரும்பியவன்
வான்தங்கு முகிலினம்பெய் மழையா னானை
...வண்மைமிகு தயையினிலே வாழ்விப் பானைக்
கான்தங்குத் தீயாடும் கழலன் தன்னைக்
...கண்டுவக்கும் அடியார்க்குக் கண்ணா னானை
ஊன்தங்கு முயிர்தன்னில் உயிர்ப்பா னானை
...உற்றிடுமோர் புகலாக உதவு வானைத்
தேன்தங்கு கொன்றையுடன் திங்கள் சூடும்
...சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....3
பூவைஉமா தேவியினைப் புடைவைத் தானைப்
....பொன்னவனை அங்கணனைப் பூசிப் போரின்
நோவையிலா தருள்செய்யும் நுதல்கண் ணானின்
....நூறுபத்து பெயரினையே நுவன்று போற்றும்
நாவையலால் வெறிதரற்றும் நாவை வேண்டா
...நயனுடைய அடியாரின் நாதன் தன்னை
சேவையெலாம் எளியர்க்காய்ச் செய்தல் வேட்கும்
....சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....4
சந்தமுறு திருமறையில் தமிழா .னானை
...சஞ்சலங்கள் தீர்ப்பவனை தனிய ளான
வந்தியவள் கூலியாக வந்த போது
...மன்னன்கைத் தடிவீச வலிகொண் டானை
சுந்தரரின் தோழனெனத் தூதா .னானை
....தொண்டருளம் கண்டருளும் துய்யத் தேவை
சிந்தையினில் நின்றவனைத் திருநீற் றானை
...சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே!....5
ஓங்கழலாய் உயர்ந்தொளிரும் ஒருவன் தன்னை
...உற்றிடுமோர் துணைவனென உள்கு வாரைத்
தாங்குகிற அருள்நிதியைத் தம்பி ரானைச்
...சந்ததமும் அன்பருளம் தங்கு வானைப்
பூங்கழலன் திருநடனம் போற்று கின்ற
...புண்ணியராம் அடியார்க்குப் புகலாய் நின்று
தேங்குமன்பில் நிறைவானை சேயூர் வானை
...சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே!....6
உள்கு=நினை.
கூடிவந்த அன்பரெலாம் கோவில் கொண்ட
...கூத்தன்தாள் அடைக்கலமாய்க் கொள்வார் தம்மை
நாடிவந்த வினைதன்னை நலியச் செய்யும்
...நற்றவனை உலகினையே நடத்து வானை
வாடிநொந்து பார்த்திருக்கும் மகளை எண்ணி
...வருவெள்ளப் பெருக்கதனால் வாரா தாய்க்காய்த்
தேடிவந்து தாயுமானத் தெய்வ மான
...சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே!....7
நேத்திரங்கொள் நுதலானை நேயன் தன்னை
...நீலமணி மிடற்றானை நிதமும் போற்றிப்
பாத்திரமாய் அவனுக்குப் பத்தி பண்ணிப்
...பற்றிடும்தாள் கதியென்றே பரவு மன்பில்
பூத்திரள்கை நிறைந்திடவே பூசித் தேத்தும்
...புண்ணியம்செய் அடியாரின் புனிதத் தேவைத்
தீத்திரள்போல் மேனியனைத் திருநீற் றானைச்
...சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....8
பாத்திரம்= தகுதி என்னும் பொருளில்.
'கூவிடுஇன் குரலினிலே குயிலே!' என்று
...குயில்பத்துப் பாட்டிசைக்கும் குழகன் தன்னை
பாவடியில் தாண்டகம்சொற் பதங்கள் ஆடும்
...பாங்கினிலே நடனம்செய் பரனை போற்றிப்
பூஅடியில் தூவியன்பர் பூசை செய்தே
...புங்கவனின் அஞ்செழுத்தைப் பொலிய ஓதிச்
சேவடியால் கூற்றுதைத்துச் சிறியன் காத்தச்
...சிராப்பள்ளி சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....9
தீங்கன்னல் இன்சுவைசேர் சீரார் நாமம்
...சிந்திக்கும் அன்புக்குள் சிக்கு வானை
ஆங்கன்று மழலைக்காய் அம்மை யோடே
...அமுதீந்துப் பசிதீர்த்தே அருள்செய் தானை
தாங்கொண்ணா வல்வினைசெய் சஞ்ச லத்தைச்
...சாடியென்றும் தயைசெய்துத் தாங்கு வானைத்
தீங்கில்லா நிலையருளும் செல்வன் தன்னைச்
...சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே!....10
தேம்,தீம்=இனிமை
தீம்+கன்னல்=தீங்கன்னல்
ஆங்கு+அன்று= ஆங்கன்று