April 14, 2012

பழனத்தரன் பாதம் பணி! (திருப்பழனம்)

('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - என்ற வாய்பாடு)

துயிலும்நிதம் விழிப்பும்தொடர் நிலையாகிடும் உலகில்
மயலில்வரும் இடர்நீங்கவும் துதிசெய்திட அருள்வான்
மயிலும்நடம் இடும்பூம்பொழில் தனில்பாடிடும் குயில்கள்
பயிலும்திருப் பழனத்தரன் பாதம்பணி மனமே … 1

 

வாடும்படி மிகுதுன்பினைத் தரும்வெவ்வினை தீர
ஆடும்பதம் நாளும்பணி பவர்க்கேயருள் செய்வான்
மூடும்புனல் மலராலெழிற் மிகச்சூழ்ந்திட வண்டு
பாடும்பொழிற் பழனத்தரன் பாதம்பணி மனமே … 2


புத்தித்தடம் விலகித்தடு மாறும்நிலை மாறும்
சித்தத்தெளி வினுக்கோர்வழி புகல்வேனது கேளாய்
தித்தித்திடும் திருப்பேருடை சுத்தத்தவன் போற்றி
பத்தர்க்கரண் பழனத்தரன் பாதம்பணி மனமே … 3


ஓலத்திரை கடல்சூழ்ந்திடும் புவிமீதுறு வாழ்வில்
காலத்திடர் செயும்வெவ்வினை தீர்க்கும்தயை கொண்டான்
சூலப்படை உடையான் தன(து)அடியார்களின் துணையாய்ப்
பாலித்தருள் பழனத்தரன் பாதம்பணி மனமே … 4


அலையும்மனம் அடங்கும்வழி மொழிவேனது கேளாய்
தலையில்பிறை சூடும்சிவன் கழல்போற்றிட அருள்வான்
உலவும்வளி தவழ்பூம்பொழில் மணம்வீசிடும் கொடிகள்
பலவும்திகழ் பரனத்தரன் பாதம்பணி மனமே … 5


ஒலியென்றனை தாளந்தனில் இசைவாளவள் காந்தன்
பொலிவொன்றிய ஒளிவீசிடும் திருவாகிடும் உருவன்
நலிவின்றிட அடியாரிடர் தீர்க்கும்தயை நிதியாய்ப்
பலிகொள்பவன் பழனத்தரன் பாதம்பணி மனமே … 6


அனை=அன்னை,இடைக்குறை
பொலிவு+ஒன்றிய=பொலிவொன்றிய


சுடரேந்திடும் நுதல்கண்ணினன் முழவோடதிர் துடிசெய்
நடையேந்திடும் திருவாடலில் அடியார்க்கருள் செய்வான்
சடையேந்திய மலர்கொன்றையில் மிளிர்வான்கரம் மழுவாட்
படையேந்திய பழனத்தரன் பாதம்பணி மனமே … 7


சேர்க்கும்நெறி கூட்டும்அடி யவர்க்கேஉயர் அன்பை
வார்க்கும்விழி நுதலோன்கழல் தொழவேவினை மாயும்
போர்த்தவ்வெழில் வனத்தில்கடும் தவமேசெய கணையை
பார்த்தற்கருள் பழனத்தரன் பாதம்பணி மனமே … 8


மண்ணாகிடும் யாக்கைக்கொரு நலம்சேர்வழி சொல்வேன்
பெண்ணோரிடம் கொண்டானவன் கழலேதுணை என்றே
"கண்ணா!கறைக் கண்டா!எமக் கருள்வாய்!"என வேண்டிப்
பண்ணார்பொழில் பழனத்தரன் பாதம்பணி மனமே … 9


தீங்கற்றிடும் உயர்வாழ்வினைத் தருவான்கழல் நாடி
ஓங்கித்திகழ் அழலோன் திருப் புகழ்பாடிட அருளும்
பூங்கொத்துகள் உதிர்ந்தேபுனல் ஆடும்கவின் பொன்னி
பாங்கர்த்திகழ் பழனத்தரன் பாதம்பணி மனமே … 10

April 04, 2012

ஆரூர் அரன்தாள் (திருவாரூர்)

 

(அறுசீர் விருத்தம் - '5 மா + மாங்காய்')

பூக்கும் மலர்கள் பொலிய இலங்கும் பொற்றாள் வினையாவும்
தீர்க்கும் அடியார்க் கருளை சேர்க்கும் திருத்தாள் எரிகானில்
சேர்க்கும் லயத்தில் துடியார் நடமே செய்தாள் புகழ்சேர்தாள்
ஆர்க்கும் கழலை அணிந்த ஐயன் ஆரூர் அரன்தாளே. …. 1

என்பும் பெண்ணாய்க் குடத்துள் ளிருந்து எழவே பதிகத்தால்
சம்பு மகிழ சம்பந் தர்தாம் சாற்றித் தொழும்நற்றாள்
துன்ப வினையைத் தீர்க்கும் செந்தாள் தூதாய் நடக்கும்தாள்
அன்பர் நெஞ்சை அகலா திருக்கும் ஆரூர் அரன் தாளே. …. 2


என்பும் பெண்ணாய்க் குடத்துள் ளிருந்து எழவே பதிகத்தால்
சம்பு மகிழ சம்பந் தனும்செஞ் சடையன் தொழும்தண்தாள்
துன்ப வினையைத் தீர்க்கும் செந்தாள் தூதாய் நடக்கும்தாள்
அன்பர் நெஞ்சை அகலா திருக்கும் ஆரூர் அரன் தாளே. …. 3

பாவை புனித வதியாம் அம்மை பற்றிப் பரவும்தாள்
கோவை கைலை வெற்பில் ஆடல் குறித்தே பணியும்தாள்
நாவை பழக்கி அஞ்சக் கரத்தை நவில வினைசெய்நோய்
யாவை யும்தீர்த் தருளும் செல்வன் ஆரூர் அரன் தாளே. …. 4


துண்டப் பிறையும் விண்ணின் நதியும் துலங்கும் அணியாகக்
கண்டு நிகர்த்த மொழியாள் உமையின் காந்தன் நடம்செய்தாள்
செண்டு மலர்த்தார் சூட்டி அடியார் சிந்தை குளிரும்தாள்
அண்டம் எல்லாம் கடந்து நின்ற ஆரூர் அரன் தாளே. …. 5


கன்றிச் சிவக்கத் தெருவில் விறகுக் கட்டைச் சுமக்கும்தாள்
தொன்று கைலையில் அம்மை பாடத் தூக்கி நடம்செய்தாள்
மன்றில் சக்தி நாணும் படியே வாகாய் உயர்பொற்றாள்
அன்று தூதாய் நண்பர்க் கலைந்த ஆரூர் அரன் தாளே. …. 6


பொருத்த மான சதங்கை கழலில் பொலிய ஒலிசெய்தாள்
வருத்தும் வினைசெய் நோயைத் தீர்க்கும் மருந்தா கிடும்பொற்றாள்
கருத்தில் என்றும் நிலையாய் நின்று காக்கும் வரமாம்தாள்
அருத்தி யோடு பத்தர் போற்றும் ஆரூர் அரன் தாளே. …. 7

தலையில் அரவு கொன்றை மதியும் தாங்கி அருளும்தாள்
அலையும் மனத்தை அடக்கி அருளில் அணைக்கும் புனிதத்தாள்
கலையும் கனவாம் உலக வாழ்வை கதியில் செலுத்தும்தாள்
அலர்கள் தூவி அமரர் போற்றும் ஆரூர் அரன் தாளே. …. 8

 

பரியும் தயையின் திறத்தை அன்பர் பாடி வணங்கும்தாள்
திரியும் நிலையில் பலியைத் தேரத் தினமும் அலையும்தாள்
விரியும் வெளியில் நடனம் ஆடி விந்தை புரியும்தாள்
அரியும் அயனும் அடைதற் கரிய ஆரூர் அரன் தாளே. …. 9

தையல் உமையை இடது பங்கில் தாங்கி அருள்வான் தாள்
கையில் சூலம் மழுதீ யோடு கலைமான் உடையான் தாள்
மெய்யில் நீறு பூசும் அடியார் வேண்டித் தொழும்நற்றாள்
ஐயம் ஏற்க ஊரூர் நடக்கும் ஆரூர் அரன் தாளே. …. 10