July 21, 2012

மாற்பேற்று அரன்தன்னைச் சிந்தி (திருமாற்பேறு)

 

(திருத்தாண்டக அமைப்பு - எண்சீர் விருத்தம். பொதுவாகக் 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு. ஒரோவழி காய்ச்சீர் வருமிடத்தில் விளம்/ மா வரும். அவ்விடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்)

துள்ளலைகள் அலைக்கின்ற துரும்பைப் போல
...துயரலைக்கும் வினையெல்லாம் மாற வேண்டில்
அள்ளியருள் வழங்குகின்ற ஐயன் தன்னை
...அஞ்சனவேல் விழியன்னை வணங்கும் தேவை
வெள்ளிநிலாச் சூடுகின்ற விடையன் தன்னை
...விந்தைமிகு ஆடலினை நடிக்கும் வேந்தை
தெள்ளுதமிழ்ப் பதிகத்தால் குரவர் போற்றும்
...திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே....1

தீம்புமலி வினைகடந்து மீள வேண்டில்
...செஞ்சடையான் நடமிடுதாள் மனத்தில் கொண்டுக்
கூம்பலரும் நாண்மலர்கள் கோத்துச் சூட்டிக்
...கும்பிட்டுப் பூசிப்பார்க்(கு) அருள்செய் வானைச்
சாம்பலினை மெய்ப்பூசும் மதியன் பேரைச்
...சங்கையின்றி ஓதிடுவார்த் துணையா வானைத்
தீம்பழங்கள் நிறையுமரச் சோலை சூழும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....2

தீம்புமலி வினைகடந்து மீள வேண்டில்
...செஞ்சடையான் நடமிடுதாள் மனத்தில் கொண்டுக்
கூம்பலரும் நாண்மலர்கள் கோத்துச் சூட்டிக்
...கும்பிட்டுப் பூசிப்பார்க்(கு) அருள்செய் வானைச்
சாம்பலினை மெய்ப்பூசும் மதியன் பேரைச்
...சங்கையின்றி ஓதிடுவார்த் துணையா வானைத்
தீம்பழங்கள் நிறையுமரச் சோலை சூழும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....3

தெம்பழிசெய் ஊழ்வினையை விரட்டவேண்டில்
...சித்தமெல்லாம் சிவமாக உய்விப்பானை
வம்பலரார் சிலைமதனை எரிசெய் தானை
...வார்சடையில் மதிசூடும் அண்ணல் தன்னை
அம்பலமே நடிக்கின்ற மேடை யாகி
...ஆடலிலே உயிரனைத்தும் புரக்கின் றானைச்
செம்பரமாய் இலங்குமம்மை அப்பன் தன்னைத்

...திருமாற்பேற்றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....4

செம்பரம்=செம்பொருள்

நாகா பரணமணி நாதன் தன்னை
...நயமாய்ப் பொற்சபையில் நடம்செய் வானை
வாகா யுமையம்மை வாமத் தானை
...வருத்து மூழ்வினையை மாற்று வானைப்
பாகா யினிக்கின்ற பரனின் பேரைப்
...பாட்டால் பரவுமன்பர் பற்றும் கோனை
சேகார் நிறச்சடையன் திங்கள் சூடும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே.... 5

சேகு=செம்மை

தாய்வழியில் வெள்ளத்தால் தவித்து நிற்கத்
...தாயாகப் பெண்ணைவந்து காத்தான் தன்னைப்
பேய்வடிவ அன்னையினைப் பெற்றான் தன்னைப்
...பித்தனென்ற சுந்தரர்க்குத் தூதா .னானைக்
காய்வினையைத் தீர்க்கின்ற கழலன் தன்னைக்
...கரியுரியை உடுத்தவனைக் கதியா வானைச்
சேய்மையனாய் அண்மையனாய்த் திகழ்கின் றானைத்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....6

மொய்குழலாள் உமைபங்கன் முக்க ணானை
...மூலவனாம் பூரணனை முதல்வன் தன்னைப்
பெய்கிறவான் மழையவனைப் பிட்சாண் டானைப்
...பிறைமதியைச் சூடுவானைப் பெம்மான் தன்னைக்
கொய்தமலர் தூவுமன்பர் குறைதீர்ப் பானைக்
...கோதில்லா குணநிதியைக் குழகன் தன்னைச்
செய்வினையின் துன்புதன்னைத் தீர்க்கின் றானைத்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....7

ஆர்த்தவனை நாகத்தை அரைக் கச்சாய்
...ஆராத அன்பினிலே அடியார் தம்மை
ஈர்த்தவனை வெள்ளைநிற இடபத் தானை
...இன்னமுதாய் நஞ்சையுண்ட எம்மான் தன்னைப்
பார்த்தவனை மதனெரியால் படவைத் தானைப்
...பரிவுடனே உமையாளைப் பங்காய் ஆகம்
சேர்த்தவனை செஞ்சடையில் திங்கள் சூடும்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....8

அங்கயற்கண் அம்மையுறு ஆகத் தானை
...அடலேறு தனிலமரும் அண்ணல் தன்னைத்
திங்களுடன் கங்கையையும் சிரமேற் றானைச்
...தென்மதுரை தனிலாடல் செய்தான் தன்னை
வெங்கடத்தில் இரவாடும் மெய்யன் தன்னை
...வீதியுலா வருகின்ற விமலன் தன்னை
செங்கமலத்(து) அளிமுரலும் தடங்கள் சூழும்
...திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே....9

வைதிடினும் ஏசிடினும் வஞ்ச மின்றி
...வாழ்வருளிக் காக்கின்ற வள்ளல் தன்னை
மெய்ம்மையெனும் அன்புருவாய் மிளிர்வான் தன்னை
...மெய்யடியார் குறைதீர்க்கும் விடையன் தன்னைக்
கைலைதனின் மன்னவனாய்க் காணும் தேவைக்
...கைத்தலத்தில் அழலேந்திக் காப்பான் தன்னைத்
தெய்வமென நம்பிடுவார் தெளிவா வானைத்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....10

July 13, 2012

ஊன்றாப்பு (Uentrop)

Kamakshi temple in Hamm-Uentrop in Germany (http://kamadchiampal.com/index.php?Itemid=191)

(கலிவிருத்தம் - 'மா மா மா காய்' என்ற வாய்பாடு.)
(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைக ளவைபோகச்")
(சம்பந்தரின் இப்பதிகத்தில் பொதுவாக 'மா தேமா புளிமா புளிமாங்காய்' என்றவாய்பாடு.

இலக்கணக் குறிப்புகள்:
ன்+த = 'ன்ற' என்று திரியும்.
ல்+ம = 'ன்ம' என்று திரியும்.


வான்த வழ்வெண் மதியன் செஞ்சடையன்
கான்த .னில்செங் கனலில் நட்டமிடும்
கோன்தன் கழலை கும்பிட் டன்பினில்சேர்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....1

கூன்பி றையுடன் குதித்துப் பாய்நதியும்
தான்றன் சிரசில் தரித்த செய்யவனை
நான்ம றையும் நாடும் புண்ணியனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....2

தேன்றாங் கலர்கள் திகழ அணிவானை
தோன்றாத் துணையாய்த் துதிப்போர்க் கருள்வானை
ஊன்றாங் குயிரில் ஒளியாய் இருப்பானை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....3

வான்போல் பொழியும் வண்மை கொண்டவனை
ஆன்மேல் அமரும் ஐயனை எழில்மேவ
மூன்றாய்த் திகழும் முக்கட் சோதியனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....4

 

தேன்வார்க் கும்பா செவியேற் கின்றானை
நான்காம் மறைகள் நவிலும் கழலானை
நோன்றார் மனத்தில் நுவலஞ் செழுத்தானை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....5

 

தான்றான் உலகைத் தாங்கி அருள்பவனாம்
ஊன்றான் பதத்தை உள்ளன் பிலரகத்தில்
தேன்றான் சுவையோ திருப்பேர் சொலச்சுவைக்கும்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....6

கூன்றான் விழுந்து குமையும் முதுமையிலும்
ஆன்றான் அமரும் ஐயா எனவழுதால்
ஈன்றா னாகி இரங்கிக் காப்பவனை
ஊன்றாப்(பு) அரனை ஓதி உய்ம்மனமே....7

ஏன்றான் நதியை எழிலார் சடைதன்னில்
தோன்றா அருவன் சோதி யானவனை
கோன்றான் நடத்தில் கோலங் கொண்டவனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....8

தான் தோன் றியெனும் தந்தை தாயில்லா
வான் தோய் சிகர மலையன் சங்கரனை
ஊன் தேய் முதுமை உறினும் தொழவருளும்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே. ...9

தான் தோன்றி=சுயம்பு.

மான் தீ மழுவாள் சூலப் படைக்கரத்தன்
வான்சூழ் கோள்கள் மாறா தியக்குபவன்
ஊன்சேர்ந் துருக உன்னு வார்க்கருளும்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....10