October 10, 2012

சண்பை நகர் (சீகாழி)


(மா மா மா புளிமாங்காய் - என்ற வாய்பாடு)

அழுது நெகிழ்வர்க் கணுக்கன் மதிசூடி
தொழுது மகிழத் துணையென் றருளூராம்
எழுமின் னிசையை ஏந்தித் தவழ்தென்றல்
தழுவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....1


அணுக்கன்=அண்மையில் இருப்பவன.

பொங்கும் அழலாய்ப் பொலியும் மலைஈசன்
பங்கம் தீர்த்துப் பரியும் அருளூராம்
தெங்கின் கீற்றில் செழுமைக் கிளியாடித்
தங்கும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....2


தீங்கும் அழிப்பான் சீரார் மணிகண்டன்
தேங்கும் அன்பில் தேடி அருளூராம்
ஓங்கும் மரங்கள் உயர்ந்து முகில்மோதித்
தாங்கும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....3


துவள வருமூழ்த் தொலைக்கும் குருநாதன்
பவள வண்ணன் பத்தர்க் கருளூரான்
தவளை ஒலிக்கச் சாரல் சொரிமேகம்
தவழும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....4


சடையன் முடையார் தலையில் பலிதேரும்
நடையன் துதியில் நனைந்தின் பருளூராம்
தடையின் றுயர்ந்த தருக்கள் முகில்மேவித்
தடவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....5


நாவும் மொழியும் நம்பன் திருப்பேரை
பாவும் பாடப் பத்தர்க் கருளூராம்
கூவும் குயில்தேன் குரலில் மகிழ்மந்தி
தாவும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....6


சேரும் வினையைத் தீர்க்கும் அருளாளன்
ஊரும் விடையன் உறுநர்க் கருளூராம்
தேரும் சுவையின் தேனார் மலர்வண்டுச்
சாரும் பொழில்சூழ் சண்பை நகர்தானே....7


சித்தம் தெளியும் செம்மை மருந்தான
அத்தன் அன்பால் அடியர்க் கருளூராம்
பத்தர் பரவும் பாவை நிதம்கேட்கும்
தத்தை தமிழ்சொல் சண்பை நகர்தானே....8


வாமம் தன்னில் மங்கை யுடையானின்
நாமம் பலவும் நவில்வர்க் கருளூராம்
தூமென் மலர்த்தேன் சுவைக்கும் அளிகூடிச்
சாமம் பாடும் சண்பை நகர்தானே. ...9


தாயும் ஆன தந்தைக் கழலெண்ணித்
தோயும் அன்பில் தொழுவர்க் கருளூராம்
பாயும் சிட்டுப் பற்றும் கொடியாடச்
சாயும் பொழில்சூழ் சண்பை நகர்தானே. ...10
 

October 09, 2012

அப்பனிடம் ஆலங்காடு

(திருவாலங்காடு)

(எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)

நீலகண் டமொடுசெஞ் சடைசேர் கங்கை
...நிலவுபொன் கொன்றையம் மலரும் சூடி
காலமும் ஆனவன் எமனை எற்றும்
...காலனாய் மாணியைக் காத்த செம்மல்
கோலமுக் கண்ணுதல் எழிலைக் காணக்
...குலைந்திடும் ஊழ்வினை விண்ணோர்க் காக
ஆலமு துண்டருள் செய்த எங்கள்
...அப்பனி டந்திரு ஆலங் காடே....1

மருவறு வெண்பிறைச் சடையன் கையில்
...மான்மழு தீயுடன் சூலம் கொள்வான்
இருவினை தருமிடர் எளிதில் தீர
...இன்னருள் செய்திடும் ஈடில் ஈசன்
கருவுறு பவக்கடல் கடக்கச் செய்வான்
...கண்ணுதல் தருவடி அமர்ந்து தானாய்
அருமறை நால்வருக் குரைக்கும் எங்கள்
...அப்பனி டந்திரு ஆலங் காடே....2

ஊனையும் உயிரையும் உருக்கும் தெய்வம்
...ஒப்பிலா தயையினில் உதிக்கும் அன்பில்
வானையும் மண்ணையும் அண்டம் யாவும்
...மாறிடா கதியினில் வைத்துக் காக்கும்
தானொடு தனதெனும் அகந்தை போக்கும்
...தண்ணருள் தந்தெமைத் தாங்கும் வள்ளல்
ஆனையின் ஈருரி போர்த்த எங்கள்
...அப்பனி டந்திரு வாலங் காடே....3

தழையினை மலரினை சாத்தி,தீரா
...சஞ்சலம் தீர்த்திடும் மலர்த்தாள் போற்றிப்
பிழைமலி வாழ்விதில் பீழை யின்றிப்
...பேற்றினில் உய்வினைப் பெறவும் வேண்டின்
விழைவுடன் இன்னருள் விரைந்து செய்வான்
...வேலையின் விடமுணும் மெய்யன் வெய்ய
அழலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
...அப்பனி டந்திரு வாலங் காடே....4

கனிதனை அம்மையின் கரத்தில் அன்று
...கனிவுடன் ஈந்தமுக் கண்ணன் அன்பர்
நனைமிகு நறுமலர் நற்றாள் தூவி
... நடமிடு கூத்தனை துதிசெய் வாரின்
புனைகிற தீந்தமிழ்ப் பாடல் மாந்தும்
...பூரணன் அருளினை வழங்கும் ஐயன்
அனலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
...அப்பனி டம்திரு வாலங் காடே....5

தங்கமும் வைரமும் சற்றும் ஈடோ
...சங்கரன் தண்ணருள் தானே செல்வம்
செங்கழல் சதங்கையும் செவியில் ஆர்க்க
...சிந்தையில் நிறைந்திடத் தெம்பை வார்க்க
அங்கமும் தேய்ந்திட அரன் தாள் எண்ணி
...அங்கையை ஊன்றியே அம்மை சேரும்
அங்கியைக் கையினில் ஏந்தி ஆடும்
...அப்பனி டம்திரு வாலங் காடே....6

பிணிபவச் சுழலதில் மீள வேண்டிப்
....பெய்கழல் தொழுபவர் பீழை தீர்ப்பான்
தணிவுறு உயர்தவக் கோலம் கொள்வான்
....தனியனாய்க் கானதில் தங்கும் காடன்
துணியெனப் பிறைதனைச் சூடும் தேவைச்
...சூழ்ந்திடும் கணங்களும் சுற்றி ஆர்ப்ப
அணிகுழல் மலைமகள் காண ஆடும்
...அப்பனி டந்திரு வாலங் காடே. ...7

நீர்க்குமி ழியாகுமிந் நிலையில் வாழ்வில்
...நிலைப்பதும் அவனது நேயம்; எங்கும்
பார்க்கும னைத்துமே பரனாய்க் காணும்
...பத்தியில் உருகிடப் பரிந்து வந்து
தீர்க்குமவ் வினைதனை செந்தாள் கூத்தன்
...துடியுடன் தெறித்திடும் பம்பை நாதம்
ஆர்க்கநள் ளிருளினில் நட்டம் ஆடும்
...அப்பனி .னிடந்திரு வாலங் காடே. ...8

கோதிலன் குணநிறை குன்றா னானின்
...குரைகழல் போற்றிக் கூடும் அன்பில்
நாதியும் அவனென நாடும் அன்பர்
...நடுவினில் துணையென நயமாய் நிற்கும்
நீதியின் உருவவன் நேயச் செம்மல்
...நெறிசெலும் தெளிவினை நெஞ்சில் சேர்க்கும்
ஆதியன் அனலினை ஏந்தி ஆடும்
...அப்பனி டந்திரு வாலங் காடே....9

எங்குளன் எம்பிரான் என்று தேடி
...ஏங்கிடும் எளியரின் இதயம் தன்னில்
தங்குவன்; வெவ்வினைத் தாங்கும் உள்ளம்
...தந்திடும் சங்கரன் தாளைப் போற்றும்
குங்கும முகமலர் குளிர்ந்த பார்வை
...கொண்டவள் கூறுடைக் கோல மேவும்
அங்கணன் அனலினை ஏந்தி ஆடும்
....அப்பனி டந்திரு வாலங் காடே....10

உயிரானான் போற்றி


(அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடிவாய்பாடு)

அம்மையொ டாடிடும் ஐயன்
...அடியரின் உளங்கவர் கள்வன்
பொம்மைக ளாகவே நம்மைப்
...புவியினில் நடித்திட வைப்பான்
செம்மையில் திகழுறும் மெய்யன்
...சிகையினில் நதிமதி சூடும்
செம்மலின் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....1

ஓதிடும் நான்மறை ஏற்றும்
...ஒருதனி முழுமுத லாவன்
கோதிலன் குணநிதி யாகக்
...குறைகளை தீர்த்திடும் ஈசன்
மாதிடம் வைத்தவன் ஆலம்
...மணிமிட றுடைகறை கண்டன்
நாதியன் சேவடி போற்றி
...நம்பெரு மானடி போற்றி.

உருவமும் அருவமும் ஆவான்
...உடுக்கையும் சூலமும் ஏந்தும்
மருவறு பிறைதனைச் சூடி
...மன்றினில் ஆடிடும் ஐயன்
இருவினை தருமிடர்த் தீர
...இணையடி தொழவருள செய்வான்
திருவனின் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....3

ஆறுதல் தந்திட வேண்டி
...அனுதினம் தொழுதிடும் அன்பர்
தேறுதல் பெற்றிடத் துன்பம்
...தீர்ந்திட இன்னருள் செய்வான்
ஊறிடும் பரிவினில் காக்கும்
...உமையவள் பங்குடை ஈசன்
சீறர வன்பதம் போற்றி
...சிவபெரு மானடி போற்றி....4

பெருகிடும் பத்தியில் அன்பர்
...பிறைமதிச் சடையனின் சீரை
உருகிட இசைத்தநன் மாலை
...உகப்புடன் சூடிடும் ஐயன்
வெருவரு மறலியை எற்றி
...வீழ்த்திஅம் மாணியைக் காத்தச்
செருவனின் சேவடி போற்றி
....சிவபெரு மானடி போற்றி....5

 

வார்சடை மேல்நதி யோடு
...மதியினைச் சூடிடும் ஐயன்
பேர்புகழ் பாடிடு வாரைப்
...பிணித்திடு வினைவிடு விப்பான்
கார்பொழி வாயருள் பெய்வான்
...கரமதில் கலனொடு பிச்சை
தேர்பவன் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....6

அவ்விடம் இவ்விடம் என்றே
...அனைத்திலும் அணுவிலும் உள்ளான்
செவ்விய தீந்தமிழ்ப் பாவில்
...திகழ்கிற பத்தியில் நிற்பான்
நவ்வியன் நான்மறை போற்றும்
...நாயகன் அடிமுடி காணா
செவ்வழ லானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....7

செவ்விய=சிறந்த
நவ்வி=அழகு.


பேசுவர் அவனுடைப் பெற்றி
...பெரிதவன் தயைசெயும் பாங்கு
சாசுவ தமாயவன் அன்பு
...தன்னை எண்ணுவர்க் கையன்
பூசுவெண் ணீற்றனின் சீற்றம்
...பொடியென எயிலெரி செய்தத்
தேசுடை யானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....8

அந்தஇ லங்கையின் வேந்தை
...அடர்த்தக மடக்கிய ஈசன்
குந்தக மாஇடர் செய்யும்
...கொடுவினை தீர்த்திடு மெய்யன்
செந்தமிழ்ப் பாவிசைத் தேனை
...செவிமடுத் தின்புறும் எம்மான்
செந்தழ லானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....9

நெளியுநல் லுரகமு டன்வான்
...நிலவையும் நதியையும் சூடும்
கிளிகர மேந்துமை பங்கன்
...கேட்டினைத் தீர்த்தருள் செய்வான்
எளியரின் உறுதுணை யாக
...எங்கணும் நிறைந்தவன் காப்பான்
தெளிசடை யானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....10

மாசிலாமணியைத் தொழு நெஞ்சமே

(வட திருமுல்லைவாயில்)

 

(எழுசீர் விருத்தம் - 'மா விளம் மா விளம் மா விளம் விளம்' என்ற வாய்பாடு)

துன்னும் இடரிடைத் துவளும் நெஞ்சமே
....துயரை வெல்வழி சொல்லுவேன்
முன்னைப் பழையவன் மூல மானவன்
....முக்கண் நுதலினன் முடிவிலான்
தன்னை நினைப்பவர் தமக்குத் தயையினைத்
....தந்து காத்திடும் இறையவன்
வன்னன் வடமுல்லை வாயில் மாசிலா
....மணியைத் தொழவினை மாயுமே....1

துன்னும்= சூழ்ந்துவரும்
வன்னம்=அழகு.

நொந்தி டரதனில் நோகும் நெஞ்சமே
...நொடியா வழியினை நுவலுவேன்
சுந்த ரன்கறை சூழ்ந்த கந்தரன்
...துங்க நதியுடை சடையினன்
வெந்த நீறணி மெய்யன் முப்புரம்
...வேவ சினமுற விழித்தவன்
மைந்தன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....2

விஞ்சும் இடரினில் வீழும் நெஞ்சமே
...விலகும் வழியினைக் கூறுவேன்
கஞ்ச மலர்ப்பதம் கருதும் அன்பரைக்
...கனிவோ டருளிக் காப்பவன்
நஞ்ச மமுதென நாடி விண்ணவர்
...நலத்தை எண்ணியே உண்டவன்
மஞ்சன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....3

சிரமம் தொடர்ந்திடச் செய்யும் துன்பதும்
...தீரும் வழியிது நெஞ்சமே
மரக தாம்பிகை வாமம் கொண்டவன்
...மன்றில் ஆடிடும் வல்லவன்
மரம தடியமர் மாத வத்தினன்
...மவுன மாயருள் செய்பவன்
வரதன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....4

பள்ள மேடுகள் பற்றும் வாழ்விதில்
...படிந்து இடருறும் நெஞ்சமே
விள்ள லாகவொர் வெண்ணி லாவுடன்
...வேக மிகுநதி அணிபவன்
அள்ளி வழங்கிடும் அன்பில் கனிபவன்
...ஆடல் மன்றினில் புரிகிற
வள்ளல் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....5

 

அல்லல் தன்னிலே ஆழும் நெஞ்சமே
...அகலும் வழியிது கூறுவேன்
முல்லை நறுங்கொடி மூலம் தன்னையே
...முந்தி காட்டிய மூலவன்
'எல்லை யொன்றிலா ஏற்றம் கொண்டவ
...எளியை நீயென இரங்குவன்
வல்லன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....6

குளமார் கண்ணொடு குமுறும் நெஞ்சமே
...குறைகள் தீர்வழி சொல்லுவேன்
உளமார் உணர்வினில் உற்ற அன்பொடு
...உமையொர் பங்கனின் நினைவொடு
தளமார் வண்ணமாய் சாற்றும் பாமலர்
...தன்னில் தங்கிடும் இறையவன்
வளமார் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....7

விதியி தோவென வெம்பும் நெஞ்சமே
...வெல்லும் வழியிது சொல்லுவேன்
'கதியுன் தாள்'எனக் கத்தும் சிறுவனைக்
...காக்க மறலியை உதைத்தவன்
நதியும் மதியுடன் நஞ்சார் நாகமும்
...நயமாய் சடையில் அணிமுக
மதியன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....8

வீண்பி றவிச்சுழல் விட்டு வெளிவரும்
...விதத்தைச் சொல்லுவேன் நெஞ்சமே
பூண்ப .னணியெனப் பொன்னார் கொன்றையைப்
...பொங்கும் அலைநதி சடையினன்
காண்ப .னன்புறு கண்ணால் எளியரைக்
...காக்கும் வல்லவன் மறைதொழும்
மாண்பன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....9

சித்த மலமதில் திகைக்கும் நெஞ்சமே
...தெளியும் வழியினைச் சொல்லுவேன்
வித்தில் மரமென விறகில் தீயென
...வெளியில் தெரிந்திடா திருப்பவன்
பித்த .னவன் திருப் பேரை உரைத்திடில்
...பீழையைத் தொலைத்திடும் இறையவன்
மத்தன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....10