September 09, 2013

திருக்கருகாவூர்

 

(கலிவிருத்தம் - 'தேமா தேமா புளிமா புளிமாங்காய்' - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைக ளவைபோகச்")

மண்ணாய் விண்ணீர் வளிதீ எனவானான்
கண்ணால் அன்பைக் கனிவாய் அருளீசன்
தண்ணார் கங்கை சடையன் கருகாவூர்
எண்ணாய் நெஞ்சே இலையோர் இடர்தானே....1

தார்கொள் தோளில் தவழும் அரவேற்பான்
பேர்சொல் பத்தர் பிணிசெய் துயரோட்டும்
சீர்கொள் தாளன் திகழும் கருகாவூர்
சேர்க நெஞ்சமே சிதையும் வினைதானே....2

கோதே விஞ்சும் குணங்கொள் அடியேனுக்(கு)
ஆதா ரம்பூங் கழலே எனவேண்டி
மாதோர் பங்கன் வதியும் கருகாவூர்
நீ தீ தோட நினையாய் மடநெஞ்சே....3

கோது=குற்றம்.

நித்தன் ஆலின் நிழலில் அமர்போதன்
பத்தர் தம்மின் பரமன் கருகாவூர்
முத்தன் பூந்தாள் முடியில் தரிப்பார்க்கே
எய்த்தல் இல்லா இனிய நிலைதானே....4

அங்கம் நீற்றில் அழகாய்த் துதைந்தானின்
துங்க செந்தாள் தொழுவார்க் கருளீசன்
திங்கள்  சூடித் திகழும் கருகாவூர்
அங்கை கூப்பிப் பணிவார் அடியாரே....5

பிட்டு விற்கும் பெரியள் துணையானான்
சுட்ட நீற்றில் துலங்க அருள்செய்வான்
மொட்ட விழ்பூம் பொழில்சூழ் கருகாவூர்
சிட்டன் தாள்சேர் மனமே திருவாமே....6

பெரியள்=வயதில் பெரியவள்(வந்தி)

காட்டில் தீயில் கதித்தே நடம்செய்வான்
வாட்டும் துன்பில் வருவான் துணையாக
மாட்டின் மீதூர் மலையன் கருகாவூர்
நாட்ட மாகித் தொழுதால் நலமாமே....7

கோல கங்கை குளிர்வெண் மதிசூடி
பாலன் கொண்ட பசிக்காய் அமுதீந்த
நீல கண்டன் நிதியார் கருகாவூர்
சூலன் பாதம் தொழுவார் துயர்போமே....8

மானேய் கண்ணி மடவாள் உமைகேள்வன்
ஊனார் ஓடோ(டு) உணவுக் கலைவானின்
தேனார் பூங்கா திகழும் கருகாவூர்
போனாற் பொல்லா வினைகள் பொடியாமே....9

பாய்தண் கங்கை படர்செஞ் சடையேற்றான்
தூய்நற் றாளைத் தொழுவார்க் கருள்செய்வான்
காய்நெல் காணும் வயல்சூழ் கருகாவூர்
போய்முன் வீழிற் பொல்லா வினைபோமே....10

தூய்=தூய.

August 20, 2013

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்

 

 

(அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' - அரையடி வாய்பாடு

பிஞ்சு மதியை அணிகின்ற
    ....பெண்ணோர் பங்கன் அடியார்கள்
தஞ்சம் என்றே கழல்பற்றின்
  ....தாங்கி அருளும் ஈசனவன்
நஞ்சை உண்ட கறைக்கண்டன்
  ....நாடி உறையும் திருக்கோவில்
அஞ்சொற் கிளிகள் நிறைசோலை
    ....ஆவூர்ப் பசுப தீச்சரமே....1

ஒளியில் சுடராய்த் திகழ்கின்ற
...உமையோர் பங்கன் புகழ்பாடித்
தெளியும் ஞானம் பெறவேண்டித்
...தேடும் அன்பர்க் கருள்செய்வான்
துளிவெண் பிறையை அணிகின்றத்
...துணைவன் மகிழ்ந்தே அமர்கோவில்
அளிகள் முரலும் பொழில்சூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே. ..2

ஈர்க்கும் தேசாய் ஒளிர்கின்ற
...எம்மான் மங்கை உமைபங்கன்
யார்க்கும் பரிவில் அருள்செய்வான்
...ஐயன் கழல்கள் பணிவாரின்
சீர்க்கும் பாடல் செவிமாந்தும்
...செய்யன் விழைவாய் அமர்கோவில்
ஆர்க்கும் பொன்னி அலைமோதும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....3

வெளியில் ஆடல் புரிகின்றான்
....விரிஞ்சன் மால்முன் அழலாகி

ஒளியில் சுடராய்த் திகழ்கின்ற

...உமையோர் பங்கன் புகழ்பாடத்
தெளியும் ஞானம் பெறவைக்கும்
 ...திங்கள் சூடி அமர்கோவில்   
 அளிகள் முரலும் பொழில்சூழும்
 ...ஆவூர்ப் பசுப தீச்சரமே....4

காடும் மலையும் வான்வெளியும்
...கழலன் ஆடும் களமாகும்
ஈடு வேறொன் றில்லாத
...இறைவன் அடியார் நீரிலிட்ட
ஏடும் எதிர்க்க அருள்வான்வீற்
...றிருக்கும் கோவில் தென்காற்றில்
ஆடும் பயிரார் வயல்சூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....5

 தசையைச் சுடுகான் தழலாடும்
...தனியன் மங்கை பங்குடையான்
விசமும் அமுதாய் விண்ணவர்க்காய்
...விரும்பி உண்ட ஈசனவன்
வசமும் ஆவான் அன்பினுக்கே
...மேவும் கோவில் வளிதவழ
அசையும் பயிரார் வயல்சூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....6

எந்த துன்பம் வந்திடினும்
...எந்தை நாமம் சிந்திப்பார்
முந்து வினையும் நீங்கிடவே
...மூழ்கு சுழலாம் பவம்விடுப்பான்
சந்த இசைப்பாத் தமிழ்மாந்தும்
...தழலன் மேவி உறைகோவில்
அந்தண் சோலை புடைசூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....7

படையும்
  அழலும் கரம்கொண்டான்
...பதமாய் ஆடல் புரிந்திடுவான்
விடையில் ஊர்ந்தே வந்திடுவான்
...விரும்பும் அடியார் துயர்தீர்ப்பான்
சடையன் மேவி அமர்கோவில்
...தவழும் காரார் மேகமெலாம்
அடையும் சோலை நிறைந்திருக்கும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....8

துடியோ டொலிக்கும் பம்பையுடன்
...சுழன்றே ஆடும் நடம்கண்டு
பொடியார் மேனி புளகிக்க
...புடைசூழ் அடியார்க் கருளீசன்
கடிமா மதில்மூன் றெரிசெய்த
...கழலன் மேவி உறைகோவில்
அடியார் பலரும் வந்தேத்தும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....9

பிணியாய் வினைசெய் இடர்தீர்க்கும்
...பெம்மான் நின்ற ஊரர்தான்
பணிவாய் மனத்துள் அமைத்ததளி
...பரிவாய் அமர்ந்தே அருளியவன்
துணியாய்ப் பிறையை முடிகொண்டான்
...தொண்டர் துணைவன் உறைகோவில்
அணியார் சோலை புடைசூழும்
...ஆவூர்ப் பசுப தீச்சரமே....10

August 11, 2013

திருப்புன்கூர்


(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்)

கலைவுறா பத்தியினில் கண்ணாரக் காணவேண்டித்
தலைவனை தில்லையினில் தரிசிக்கும் நந்தனுக்காய்
விலகுவாய் கொஞ்சமென்று விடைக்குரைத்த கைலாய
மலையினான் திருப்புன்கூர் வணங்கவினை மாயுமன்றே....1

திருநாளைப் போவார்தன் தீராத அன்புடனே
ஒருநாளே தரிசித்தால் உய்யும்நாள் எனவேண்டி
வருவாரை விடையேநீ மறைக்காமல் ஒதுங்கென்றான்
இருதாளை புன்கூரில் ஏத்தவினை மாயுமன்றே....2

நீரடையும் வேணியன்பேர்
  நினைந்துருக வந்தருளும்
பூரணனைக் காணவரும் புனிதருக்காய் விடையொதுங்கும்
ஆரணிசேர் புன்கூரின் ஆடவல்லான் தாள்தொழவே
போரணியாய் வருவினையை புறங்காணல் எளிதாமே.3

தந்தையாய்த் தாங்குவான் தாள் தரிசித்தே உய்யவந்த
நந்தனார் வழிமறைக்கும் நந்திசற்று விலகவைத்த
அந்தமார் புன்கூரின் அங்கணனை தொழுவாரின்
சிந்தையார்
  தீவினைகள் தீபுக்கப் பஞ்சாமே....4


சிரஞ்சேர்கை குவியநிதம் சிவனைநினை அடியாரின்
உரஞ்சேர்மெய்த் தொண்டினுக்கே உவகையுடன் அருள்செய்யும்
பரஞ்சோதி மேவுகின்ற பதிபுன்கூர் கண்டுதொழ
வரஞ்சேரும் முன்செய்த வல்வினைகள் மாயுமன்றே....5

கூவியரன் தாள்பற்றிக் குமுறுகிற பத்தனுக்காய்
தாவியெமன் தனைச்செற்ற தண்ணருளன் சேவினையே
ஏவியவன் நந்தனுக்கு இன்னருளில் விலகவைத்தான்
மேவியபுன் கூரடைய மேல்வினைகள் வீடுமன்றோ....7

நெஞ்சார நினைப்பவரின்
 
நேயனவன் கைலையினில்
விஞ்சைசேரும் ஆடலினை மேவியவன் நந்தனுக்கு
பஞ்சார்வெள் ளேற்றினையே பையநகர் என்றருள்வான்
மஞ்சாரும் பொழிற்புன்கூர் வணங்கவினை மாயுமன்றே....8

பஞ்சு=பஞ்சைப்போல் நிறத்திற்கு.

சோதித்தே அருள்வழங்கும் துங்கநதிச் சடையுடையான்
பாதித்தன் மெய்யினிலே பங்காக உமையுடையான்
ஆதித்தன் ஒளியாக ஆலின்கீழ் அமர்ந்தறங்கள்
போதிப்பான் புன்கூரைப் போற்ற வினை போகுமன்றே....9

எல்லை யில்லாத இன்னருள் புரிபவனின்
வெல்ல ஒண்ணாத மெய்சிலிர்க்கும் பேருரைத்து
வில்வ யிலைதூவி வேண்டுவாரின் ஐயனவன்
செல்வன் திருப்புன்கூர் சேர வினைத் தீருமன்றே....10

ஆத்தூர்

 

அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு.
1-5 சீர்களில் மோனை.பாடல்தோறும் ஈற்று அடியில் 5-ஆம் சீரில் எதுகை அமைந்துள்ளது.


வானூர் மதிசேர் சடையில் கொன்றைச் சரமும் அணியாகும்
ஊனார் முடையாய் நாறும் தலையில் உண்ணும் பலித்தேர்வான்
மீனார் விழியாள் உமையோர் பங்கன் மேவும் பதியென்பார்
வானீர்ப் பொருநைத் தென்பால் மகிழும் தேனார் ஆத்தூரே....1

வால வயது சிறுவற் கருள மறலி யுதைசெய்த
கால காலன் விண்ணோர் வாழ கடலின் விடமுண்ட
சூலம் ,மழுவாள் தீ,மான் ஏந்தும் துய்யன் பதியென்பர்
நீல வண்டு தேனார் பொழில்சூழ் கோல ஆத்தூரே....2

பழிசேர் வினையால் விளையும் துன்பப் பாட்டை விடுவிப்பான்
இழிவான் நதியை சடையில் வாகாய் ஏற்ற சிவநாதன்
விழிஆர் நீரோ டுருகும் நெஞ்சில் மிளிர்வான் பதியென்பார்
சுழிநீர்ப் பொருநைத் தென்பால் பொழில்சூழ் எழிலார் ஆத்தூரே....3

 சிரமும் கலனாய் ஏந்தி பலிக்குத் திரியும் மதிசூடி
அரவும் நதியும் சடைமேல் திகழ அணிந்து மலர்கோத்தச்
சரமும் சூடி எளியர்க் கருள்செய் தலைவன் பதியென்பர்
இரவும் பகலும் ஏத்தும் அன்பர் விரவும் ஆத்தூரே....4

ஈம எரியில் ஆடல் புரியும் ஈடில் தழலாடி
நாமம் சொல்லத் தேனாய் இனிக்கும் நாளும் தொழுதுய்ய
சேம நிதியாய் நின்று காக்கும் தேவன் பதியென்பர்
பூமன் .னெழிலார் பொழில்கள் புடைசூழ் காமர் ஆத்தூரே....5

பெயலாய் அருளைப் பொழியும் பெம்மான் பெண்ணோர் இடங்கொண்டான்
மயலார் வாழ்வில் தெளிவைத் தருவான் மறைகள் தொழுமீசன்
வெயிலாய் வெம்பக் காற்றாய் வீசும் அன்பன்
  பதியென்பர்
கயலார் புனல்பாய் பொருநைத் தென்பால் வயலார் ஆத்தூரே....6

தகழி ஒளிரத் தூபம் கமழத் தண்பூ மலர்சூடி
முகிழும் அருளில் இடர்கள் செய்யும் முந்தை வினைதீர்ப்பான்
நிகழும் தீம்பும் நீங்க
  முறைசெய் நிமலன் பதியென்பர்
புகழும் தமிழின் ஓசை என்றும் திகழும் ஆத்தூரே....7

வில்லாம் மலையில் கணையைக் கோத்து விடுத்தான் புரம்வேவ
பொல்லா வினைசெய் இடரை தீர்த்துப் புகலைத் தந்தாள்வான்
எல்லா நலமும் அளிக்கும் வள்ளல் எம்மான் பதியென்பர்
சொல்லூர் தமிழால் துதிப்போர் திரளும் நல்லூர் ஆத்தூரே....8

கண்டம் கறையன் நுதல்சேர் விழியன் கங்கை மதிசூடி
அண்டம் யாவும் இயக்கி ஆளும் அண்ணல் அடிபோற்றும்
தொண்டர் தம்மின் அன்புதெய்வம் துய்யன் பதியென்பார்
 விண்ட மலரை வண்டு நாடி மண்டும் ஆத்தூரே. ....9

காவா யென்றே கூவு வோனைக் காக்க அருள்செய்தான்
நாவா யாகப் பவத்தைக் கடக்க நம்பன் கழல்நாடிப்
பூவாய்த் தூவிப் பணிவோர்த் தெய்வம் புனிதன் பதியென்பார்
நாவார் தமிழால் போற்றும் ஓசை ஓவா ஆத்தூரே....10

திருவாலங்காடு

 

திருவாலங்காடு (காவிரிக்கரைத் தலம்) (கும்பகோணம் - மயிலாடுதுறை மார்க்கத்தில், ஆடுதுறைக்கும் குத்தாலத்திற்கும் இடையே உள்ளது.)
(அறுசீர் விருத்தம் - மா மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)


நினைவார் நெஞ்சில் என்றும்
...நிறைவாய் உறையும் தெய்வம்
முனைநாள் மறலி தன்னை
...மூளும் சினத்தில் செற்று
வினைதீர்த் தருளில் காக்கும்
...வெண்ணீற் றனின்நல் லூராம்
புனலார் பொன்னித் தென்பால்
...பொலியும் ஆலங் காடே....1

விரையார் மலரில் மாலை
...மிளிரச் சூடும் மார்பன்
குரையார் கழல்செய் ஆடல்
...கும்பிட் டன்பர் காணும்
மரைசேர் கையன் பங்காய்
...மங்கை கொண்டான் ஊராம்
திரையார் பொன்னித் தென்பால்
...திகழும் ஆலங் காடே....2

மண்ணீர்
வான் தீ யோடு
...
வளியாய்த் தோன்றும் வள்ளல்
விண்ணீர் கங்கை சூடி
...
வெண்ணீ றணியும் மெய்யன்
கண்ணீர் ததும்ப வேண்டின்
...
காக்கும் கழலன் ஊராம்
தெண்ணீர்ப் பொன்னித் தென்பால்
...
திகழும் ஆலங் காடே....3

பால்போல் மதியும் பாம்பும்
...பாயும் நதிசேர் சடையன்
சூல்சேர் பிறப்பும் சாவும்
...
தொடரா தருளும் ஐயன்
ஆல்கீழ் மறையைச் சீடர்
...
அறியச் சொல்வான் ஊராம்
சேல்பாய் பொன்னித் தென்பால்
...
திகழும் ஆலங் காடே ....4

தலையோ டுடையான் கொன்றைச்
...
சடையன் பேரை ஓதி
நிலையாம் அவன் தாள்  என்றே
...
நினையும் அன்பர் தெய்வம்
மலைமா தோர்பால் வைத்த
...
மதியன் மேவும் ஊராம்
அலைசேர்
பொன்னித் தென்பால்
...அழகார் ஆலங் காடே....5

விரையார் மலரில் மாலை
...
மிளிரச் சூடும் மார்பன்
குரையார் கழல்செய் ஆடல்
...
கும்பிட் டன்பர் காணும்
மரைசேர் கையன் பங்காய்
...
மங்கை கொண்டான் ஊராம்
திரையார்
பொன்னித் தென்பால்
...திகழும் ஆலங்காடே....6

பறவை ஏன மாகப்
...
பறந்தும் அகழ்ந்தும் காணா
இறைவன் முடிதாள் இன்றி
...
எரியாய் அழலாய் நின்ற
பிறையை நதியைச் சூடும்
...
பெம்மான் மேவும் ஊராம்
அறையும்
பொன்னித் தென்பால்
...அழகார் ஆலங்காடே....7

வெயிலாய்
வாட்டும் வெம்மை
...
வினையைத் தாங்கச் செய்வான்
செயலாய் விளைவின் துன்பைத்
...
தீர்ப்பான் அன்பர் நேசன்
இயலாய் சுதிசேர் பண்ணில்
...
இசைவாய் மிளிர்வான் ஊராம்
கயல்பாய்
பொன்னித் தென்பால்
...கவினார் ஆலங் காடே....8

பொன்னும் மணியும் பூவும்
...
பொலியும் அணியாய் மார்பில்
முன்னும் பின்னும் இல்லா
...
மூல முதல்வன் பேரை
இன்னும் இன்னும் சொல்ல
..
இனிக்கும் அண்ணல் ஊராம்
செந்நெல்
வயல்கள் சூழத்
...திகழும் ஆலங் காடே....9

திறந்த வெளியில் வானில்
...
சிவனின் ஆடல் காணப்
பிறந்த பயனைக் கொள்வர்
...
பெம்மான் அடியார் தம்மை
நிறைந்த அருளில் வைப்பான்
...
நிமலன் மேவும் ஊராம்
செறிந்த
பொழில்கள் சூழத்
...திகழும் ஆலங் காடே...10

திருவாட்போக்கி

(எண்சீர் விருத்தம் - 'காய் காய் மா தேமா' அரையடி வாய்பாடு)

வான்பிறையைக் கண்ணியெனச் சூடு வானை
...மாதொருபால் பங்குடைய பரமன் தன்னைக்
கான்நடுவில் எரிதழலில் ஆடு வானைக்
...கண்டமதில் கறையுடைய அழகன் தன்னை
ஊன்முடைசேர் ஓடுடனே பலித்தேர் வானை
...உன்னுதற்கும் பேசுதற்கும் இனியான் தன்னை
வான்முகில்வந் துலவுகின்ற திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....1

சிரமதனில் பொன்கொன்றைச் சூடு வானைத்
...தேடிவரும் அன்பர்க்குத் துணையா வானை
வரமெனவும் வினையிடரைத் தீர்க்கும் தேவை
...மாறாத பத்தியினில் உவக்கின் றானை
சரமலர்சேர் மாலையணி அண்ணல் தன்னைச்
...சந்ததமும் பணிவாரின் நேயன் தன்னை
மரகதம்போல் வயல்சூழ்ந்த திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....2

மானோடு தீஏந்தும் கரங்கொண் டானை
...மணிநீல கண்டனான மதியன் தன்னைக்
கோனான பாண்டியனுக்(கு) அருளி .னாலே
...கூன்நீக்கி நலம்செய்த அண்ணல் தன்னைக்
கானாடும் பெம்மானின் மலர்த்தாள் போற்றிக்
...கண்கசியப் பணிவோரின் துணையா வானை
வானோடும் மதிதீண்டும் திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....3

விளைவான வினையிடர்கள் வெருட்டும் போது
...விமலனின் பூந்தாளைப் பணிந்துப் போற்றி
உளமார நினைவோர்க்குப் பரிவாய்க் காக்கும்
...உத்தமனை வெண்ணீற்றில் ஒளிர்கின் றானைக்
குளமாரும் மலர்சூழக் சுரும்பி .னங்கள்
...கூடிஒன்றாய் முரலுகின்ற சோலையோடு
வளமாரும் வயல்சூழ்ந்த திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....4

தழையோடு மலர்நீரைத் தாளில் சேர்ப்பார்
...தண்டமிழ்ப்பாத் தேனமுதை மாந்து வானைப்
பிழைசேரும் வாழ்விதனில் நலியா வண்ணம்
...பேறெனச்சீர் அருள்செய்யும் பெம்மான் தன்னைப்
பழிதீரப் பகீரதற்காய் பாயும் ஆற்றைப்
...பாந்தமுடன் சிரமேற்றச் சடையன் தன்னை
மழைமேகம் வந்துலவும் திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....5

மணக்கொன்றை மலராலே அலங்கல் சூடும்
...மாசில்லா ஒளிப்பிறையை சிரமேற் றானை
குணக்குன்றை பெம்மானை நினைந்து வேண்டி
...குவிகரமோ(டு) அலர்தூவப் பவமும் தீர்க்கும்
துணைக்கென்றும் பரிவோடு வந்து நிற்கும்
...சுந்தரனை தேன்மொழியாள் கேள்வன் தன்னை
மணிப்பச்சை வயல்சூழும் திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....6

அகலாத அன்பினுக்கே ஆளா வானை
...ஆனந்த நடனம்செய் அழகன் தன்னை
நிகராரும் தனக்கில்லா நேயன் தன்னை
...நின்மலனை வானவர்க்காய் நஞ்சுண் டானைப்
பகையான அறுவினைசெய் துன்ப றுக்கும்
...பைநாகக் கச்சணியும் பரமன் தன்னை
மகவோடு மந்திதிரி திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....7

தீனரவர் உறுதுணையாய்த் தோன்று வானைத்
...தீராத இடர்தன்னைத் தீர்க்கின் றானை
ஆனையுரி ஆடையாக அணிந்தான் தன்னை
...அகிலமெல்லாம் படைத்தருளும் ஐயன் தன்னை
வானமுதென் றலையிலெழு நஞ்சை உண்டே
...வானவரைக் காத்தகறை கண்டன் தன்னை
வானரங்கள் பாய்ந்தோடும் திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....8

எந்தையரன் தாயுமாகிப் பெண்ணைக் காத்த
...ஈடில்லா அருளாடல் போற்றிச் சொல்லும்
சிந்தைதனில் அன்பகலா அடியர் செய்யும்
...பூசனையை உவந்தேற்கும் புனிதன் தன்னை
விந்தைமிகு அண்டாண்டம் காக்கின் றானை
...வேதமதை விரித்துணர்த்தும் விமலன் தன்னை
மந்திபல மகிழ்ந்தாடும் திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே....9

பிஞ்சுபிறை சூடுகின்ற சடையி னானைப்
...பித்தனென்றும் பேயனென்றும் அன்பில் போற்றி
நெஞ்சுநெகிழ் அடியார்கள் பணியும் பாடல்
...நிறைவாகச் செவிமாந்தும் நிமலன் தன்னை
நஞ்சுதனை அமுதெனவே உண்ட தேவை
...நலமருளி வினைதீர்க்கும் நம்பன் தன்னை
மஞ்சுவந்து தீண்டுகின்ற திருவாட் போக்கி
...மலையமர்ந்த மாமணியை வாழ்த்து வாயே.....10

திருவல்லம்

(இக்காலத்தில் "திருவலம்" )

 

(சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன".முதற்சீர் 'தானன' என்ற சந்தத்திலும் சில பாடல்களில் வரலாம்.பாடல்தோறும் ஈற்றுச்சீர் 'தனனா'. திருவிராகம் அமைப்பு. முடுகு ஓசை அமைந்த பாடல்கள்)

குணமுளன் உருகிடும் அடியரின் துணையவன்
நிணமுறு கலமுடன் பலிபெற அலைபவன்
தணலெரி கடமுடை தனியனின்
 உறைவிடம்
மணமலர் மலிபொழில் அணிதிரு வலமே....1

சதுரனாய் உலகுய முறைசெயும் கதியவன்
பதுமையென் றசைவுறும் படிச்செயும் இறையவன்
முதுமையில் பிணியினில் அருளரன் உறைவிடம்
மதுமலர் மலிபொழில் அணிதிரு வலமே....2

பிட்டதை செய்பவள் பணியினில் துணையவன்
மொட்டவிழ் மலரிடும் அடியவர் இடரதும்
பட்டிட அருள்செயும் பசுபதி உறைவிடம்
மட்டலர் மலிபொழில் அணிதிரு வலமே....3

விதியதன் விளைவினில்
  வருமிடர் பொடிபட
நதியணி சடையினன் பதமலர் அருளுவன்
சதியுமை இடமதில் உடையவன் உறைவிடம்
மதியண விய மதில் அணிதிரு வலமே....4

வடிவுடை உமையவள் பதியவன் கடமதில்
துடியடி ஒலியினில் நடமிடும் தனியவன்
கடிகமழ் மலரணி அழகனின் உறைவிடம்
அடியவர் வினைகெட அடைதிரு வலமே....5

தண்மதி அலைநதி சடையுடை சிவனவன்
வெண்பனி மலையரன் மென்மலர் பதம்தொழ
விண்ணையும் தருகிற விமலனின் உறைவிடம்
வண்புனல் மலரடி பணிதிரு வலமே....7

கலைமதி அணிபெறும் சடையினன் கழல்தொழ
உலைவுற இடர்செயும் வினையழி வகைசெயும்
நிலைபெறும் அருள்தரும் நிமலனின் உறைவிடம்
அலைநதி அடிதொழ அணைதிரு வலமே....8

பணியினை சிரமதில் அணிபவன் அடியரின்
பிணியினில் இதமுற அருள்கிற அவுடதம்
அணிமையில் துணையென வருபவன் உறைவிடம்
மணிநதி மலரடி பணிதிரு வலமே....9

பழிவிட அலைநதி சடைதனில் அடையுற
விழிநுதல் உடையவன் வெளிர்பொடி அணிபவன்
வழியெலாம் இசைபொழி துதியுடன் பரமனை
வழிபடும் அடியவர் மகிழ்திரு வலமே....10

திருநெடுங்களம்

 

எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் விளம் மா' அரையடி வாய்பாடு.

(சம்பந்தர் தேவாரம் - இலம்பையங்கோட்டூர்ப் பதிகம் - 1.76.1 )

 

விடியலை வேண்டியே துயருறும் மாந்தர்

...மிடியிலா வாழ்வினைப் பெற்றிட வேண்டும்

கடியதாம் சுடுதணல் சொல்லதும் வீசும்

...காற்றதன் வருடலாய் மேவிட வேண்டும்

பொடியினை பூசியே அஞ்செழுத் தோதிப்

...பூவிலைத் தூவியே நினைந்திடும் அன்பால்

அடியனேன் வேண்டுவ தடைந்திட அருளாய்

...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....1

 

அறையலை வானதி சிரமதில் ஏற்ற

...அண்ணலே உன்னருள் தன்னையே கேட்பேன்

குறைமலி வாழ்விதைப் பொருள்பெறு வாழ்வாய்க்

...கொண்டிடப் பிறர்நலம் பேணிடும் தன்மை

பொறைகுணம் இரங்கிடும் உணர்வுடன் அன்பைப்

...பொழிந்திடும் மழையெனும் பொன்னுளம் மேவ

அறவனே அத்தனை நலமுற அருளாய்

...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....2

 

இரவெனப் பகலெனப் பொழுதினைப் படைத்தே

...இன்னருள் புரிந்திடும் எருதமர் தலைவா

பரவையில் துரும்பென அலைந்துழல் உலகில்

...பவமதைக் கடந்திட உன்கழல் பிடித்தே

பரவிடும் அடியரைப் பரிவுடன் அணைக்கும்

...பரமனே செந்தமிழ்ப் பாடலை விரும்பும்

அரசனே அத்தனை நலமுற அருளாய்

...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....3

 

சுமையென நோய்களும் தொடர்கிற மூப்பில்

...துணையுனைத் தேடினேன் துய்யனே ஈசா

எமையுன தலர்கழல் இணையடி நீழல்

...இடர்வினை தீர்த்துநல் இதமுறச் செய்வாய்

அமைதியும் தெளிவுறு ஞானமும் பெறவே

...அஞ்செழுத் தோதியுன் அருளினை கேட்பேன்

அமரனே அத்தனை நலமுற அருளாய்

...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....4

 

கண்ணியென் றிளம்பிறை கவினுறத் தோன்றக்

...கங்கையும் உடன் திகழ் கற்றைவார் சடையா

புண்ணிய .னேஉன பொற்கழல் தன்னைப்

...போற்றிடும் அடியவர்ப் புகலென நின்றுப்

பண்ணிசைத் தீந்தமிழ்ப் பாக்களைக் கேட்டே

..பரிவுடன் அன்பரைப் பார்த்தருள் புரியும்

அண்ணலே அத்தனை நலமுற அருளாய்

...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....5

 

அழலென ஓங்கிய அண்ணலே அயன்மால்

...அறியவும் முடிந்திடா அடிமுடி யோனே

நிழலென எமைவினை நெரித்திடர் படுத்தும்

...நிமலனே துன்பினை நீங்கிடச் செய்வாய்

கழலிடு நடமதில் கனிந்துமே அம்மை

...காணவும் இசைக்கவும் அருளிய எங்கள்

அழகனே அத்தனை நலமுற அருளாய்

...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....6

 

தணிமிகு பனிமலைத் தலைவனே உமையாள்

...தனையொரு கூறுடை தாண்டவா தீராப்

பிணியெனும் முன்வினைப் பீழையை நீக்கி

...பீடுற வாழ்ந்திடும் பெற்றியை கேட்டேன்

பணியென உன்புகழ் பாடியே நாளும்

...பைங்கழல் தொழுதிடும் பத்தருக் கென்றும்

அணியனே அத்தனை நலமுற அருளாய்

...அருநட மாடிடும் நெடுங்கத் தரனே....7

 

தணி=குளிர்ச்சி. பீழை=துன்பம்.

 

உமையலால் துணையென ஒருவரும் இல்லை

...உமதிணை கழலினை உன்னினேன் ஐயா

இமையதாய்க் காத்தருள் என்றுமை வேண்டி

...இணையிலா உம்புகழ் ஏற்றிடு வேனின்

சுமையதாம் ஊழதன் துன்பினைச் சின்னத்

...தூசென ஊதிடும் துய்யனே நஞ்சுண்

அமுதனே அத்தனை நலமுற அருளாய்

...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....8

 

வரியதள் உடுத்துவெண் மதிநதி யோடு

...மணமலர்க் கொன்றையைச் சூடிய முடியும்

எரியழல் கானதில் இணையிலா ஆடல்

...ஈர்ப்புடன் ஆடிடும் இன்னருட் தாளும்

அரியயன் அலைந்துமே அடைந்திடா வண்ணம்

...அழலென உயர்ந்தயெம் அதிசய மான

அரியனே அத்தனை நலமுற அருளாய்

...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....9

 

கீற்றென வெண்பிறை சூடிடும் சிவனே

...கெடுவினை தருதுயர் தீர்த்திடு முன்னைச்

சாற்றியே 'அருள்கஎம் சங்கரா' என்று

...தாளினைப் பிடித்தழும் பத்தனைக் காக்கச்

சீற்றமோ டெமனைசெங் கழலினால் உதைத்தச்

...செய்யனே சடைதனில் திகழ்தரும் கங்கை

ஆற்றனே அத்தனை நலமுற அருளாய்

...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....10

 

திருச்சிராப்பள்ளி


(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)

பாவல் நாவலர் பாடிப் பரவிடும்
தேவ .னைத்தொழு தேயடை நெஞ்சமே
கோவில் நெஞ்சினில் கொண்ட அன்பரின்
சேவ மர்பதி தென்சிராப் பள்ளியே. ...1

பாவென் றந்தமிழ்ப் பாடலைப் பாடியே
தாவென் றால்தரும் தாளடை நெஞ்சமே
நோவென் றேவரும் நொய்வினை
த் தீர்க்கும்
தேவன் மேவிய தென்சிராப் பள்ளியே....2

கேட தைச்செய் கெடுவினை நீங்கிட
ஆட கத்தாள் அடையஎண் நெஞ்சமே
நாட கன் தருக் கீழ்மறை ஓதிய
சேடன் மேவிய தென்சிராப் பள்ளியே....3


குலையும் வண்ணம் கொடுந்துயர் செய்வினை
இலையென் றேகிட எண்ணிசெல் நெஞ்சமே

கலைமிகு மஞ்சார் கவினுறு வெண்பனிச்
சிலையன் மேவிய தென்சிராப் பள்ளியே....4

கன்னல் வில்லினன் காமனைக் காய்ந்தவன்
பொன்ன லர்த்தாள் புகலடை நெஞ்சமே
என்ன துன்பிலும் இன்னருள் செய்பவன்
தென்னன் மேவிய தென்சிராப் பள்ளியே....5


பூத்த நாண்மலர்ப் பொற்கொன் றையணிவான்
சீர்த்த நற்றாள் தெளிந்தடை நெஞ்சமே

ஆர்த்த லைத்திழி ஆற்றைச் சடைக்கொளும்
தீர்த்தன் மேவிய தென்சிராப் பள்ளியே....6

வல்வி .னைத்துயர் மாய்ந்திட வேண்டியே
நல்வி தம்தொழ நத்திடு நெஞ்சமே
அல்லி ருட்தழல் ஆடுவான் ஆலமர்
செல்வன் மேவிய தென்சிராப் பள்ளியே....7

இட்ட மாயமர்ந் தின் தமிழ் மாந்துவன்
நட்டம் செய்கழல் நத்திடு நெஞ்சமே
சுட்ட நீறணித் துய்யன் தண்ணருட்
சிட்டன் மேவிய தென்சிராப் பள்ளியே....8

பேய வள்பெரும் பேறுடை அன்பினள்
தாயென் றானைச் சரணடை நெஞ்சமே
தூயன் தாள்முடி தோன்றா(து) உயர்ந்திடும்
தீயன் மேவிய தென்சிராப் பள்ளியே....9


மெய்யில் பங்குடை மீன்விழி யாளுமை
ஐயன் பூந்தாள் அடையஎண் நெஞ்சமே
கையில் மான்மழு தீயுடன் காத்தருட்
செய்யன் மேவிய தென்சிராப் பள்ளியே....10

திருவீழிமிழலை

(திருமுக்கால் அமைப்பில். 1, 3-ஆம் அடிகள் அளவடி. 2, 4-ஆம் அடிகள் சிந்தடி. இடைமடக்கு அமைந்து வரும்.
4 விளம்
2 விளம் + மா
4 விளம்
2 விளம் + மா)


விரிமரை கொடுஅரி தாள்தொழ அடைபதி
திரிமுகில் மிழலையு ளீரே
திரிமுகில் மிழலையு ளீருமை விழைபவர்
புரிவினை தீருமப் போதே …1

நரைவிடை யீருமை
  அரிதொழ அடைபதி
திரைநதி மிழலையு ளீரே
திரைநதி மிழலையு ளீருமை மேவுவார்
புரைவினை விலகுமப் போதே…2

புரைவினை=பாவவினை.

தெறிவிழி மலர்கொடு தொழவரி அடைபதி
வெறிகமழ் மிழலையு ளீரே
வெறிகமழ் மிழலையு ளீருமை நினைபவர்
செறிவினை விலகியே செலுமே…3

எண்ணிட நிறைமலர் விழிகொடு அடைபதி
தண்ணெழில் மிழலையு
  ளீரே
தண்ணெழில் மிழலையு ளீருமை நினைந்திட
நண்ணிய இடரிலை நலமே…4

படியினை அடியவர் பசியற அருளிய
படிபுகழ் மிழலையு ளீரே
படிபுகழ் மிழலையு ளீருமை எண்ணிடில்
பொடிபட இடர்வினை போமே…5

கூன்பிறை பாம்பொடு குதியலை சூடியே
தேன்பொழில் மிழலையு ளீரே
தேன்பொழில் மிழலையு ளீரும கழல்தொழ
ஊன்பிறப் பிலாநிலை உறுமே…6

ஊர்விடை அமர்ந்தவ உமையோர் பங்க,வான்
ஆர்பொழில் மிழலையு ளீரே
ஆர்பொழில் மிழலையுளீ ரும கழல்தொழ
தீர்வுறும் வினையிடர் திடமே…7

சாம்பலை மேனியில் தரித்தருள் தந்திடும்
தீம்பொழில் மிழலையு ளீரே
தீம்பொழில் மிழலையு ளீருமை தொழஎமை
நோம்படி செய்யிடர் நோமே…8

போதமும் மோனமாய் புரிந்தருள் தருகிற
கோதறு மிழலையு ளீரே
கோதறு மிழலையு ளீரும தடிதொழ
தீதறும் வளமுறும் திடனே…9

அக்கர மைந்தினை அடியவர் ஓதவும்
திக்கருள் மிழலையு ளீரே
திக்கரு மிழலையு ளீருமை நினைபவர்
தக்கநல் வாழ்வுறல் சதமே…10

திக்கு=ஆதரவு.

திருவாஞ்சியம்

(தானன தானதனா தன தானன தானதனா)

ஆலமர் செல்வனவன் அரு மாமறை ஓதியவன்
காலனைக் காய்ந்துதைத்த கழ லன்மத யானையதன்
தோலுடைப் போர்த்தியவன் அருள் செய்பதி ஆவதுதான்
சேலுகள் வாவிகள்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....1

தாணுவென் றேதிகழ்வான் தழ லாடிடும் ஈசனவன்
காணுதற் கேயரிதாம் கழல் நாடிடு வோர்த்துணைவன்
பூணுவன் பாம்பணியாய் புரி வார்சடை யோனுறையூர்
சேணுயர் சோலைகள்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....2

 திங்களை ஏந்துசடை திகழ் செம்மையி லேஒளிர்வான்
சங்கடம் தீர்த்திடுவான் சகம் காத்திடும் உமைபங்கன்
அங்கணன் நீலகண்டன் அடி யாருளம் மேயவனூர்
செங்கயல் பாய்புனல்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....3

ஆரணி செஞ்சடையான் அடல் ஏற்றினில் ஊர்ந்திடுவான்
வாரணி நன்மலர்சேர் வழி பாட்டினி லேமகிழ்வான்
பூரணி பங்குடையான் பொடி பூசிய மெய்யனினூர்
சீரடி யார்திரளும் திரு வாஞ்சிய நன்னகரே....4

ஐய னருள்விரும்பும் அடி யார்மனக் கோவிலுளான்
நைய வரும்வினையை நலிந் தோடிடச் செய்திடுவான்
வைய மெலாம்புரக்கும் மதி சூடிடு வானிடமாம்
செய்யில் கொக்கிரைதேர் திரு வாஞ்சிய நன்னகரே....5

மன்னிய மாமணியாய் மறை ஓதிடும் தெய்வமவன்
கன்னலின் வில்லுடையான் தனை தீயெழச் செற்றவனை
உன்னிட அன்பூறும் உயர் பேருடை வித்தகனூர்
தென்னைகள் ஆர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....6

 ஓங்கழ லாயுயர்ந்தே  ஒளிர் மாமலை ஆனவனின்
பூங்கழல்
  நாடியவன் புகழ் பாடிடு வார்க்கருள்வான்
தேங்கிடு மன்பினிலே திகழ் முக்கணன் மேவிடுமூர்
தீங்கனி ஆர்பொழில்சூழ்
  திரு வாஞ்சிய நன்னகரே....7

என்றுனை கண்டிடுவேன் எனும் நந்தனின் ஏக்கமற
அன்றருள் செய்தபரன் அடி போற்றிடும் அன்பரையே
நன்றுசெய் தாட்கொளும்பாய் நதி சூடிய ஈசனினூர்
தென்றிசைக் கோன்பணியும் திரு வாஞ்சிய நன்னகரே....8

கூன்பிறை சூடியவன் குழை ஆடிட ஆடிடுவான்
தான் தனி
  யானவனாம் தவ மேசெயும் 
செஞ்சடையன்
மான்கர மேந்தியவன் மறை ஓதிடும் சங்கரனூர்
தேன்மலர் ஆர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....9

ஒவ்வுதல் தானிலையென் றுயர் சோதியாய் நின்றவனை
பவ்விய மாயடியார் பர விப்பணி பூரணணாம்
நவ்விகை ஏந்துவானூர் நறை மாமலர்ச் சோலைகளில்
செவ்வழி தேன்முரலும் திரு வாஞ்சிய நன்னகரே....10

ஓவ்வுதல்=ஒப்புதல்
நறை=நறுமணம்.


தென்குடித்திட்டை ('திட்டை')

கலிவிருத்தம். 'விளம் விளம் விளம் விளம்' என்ற வாய்பாடு.
இதில் பன்னிரண்டு பாடல்கள்.
(சம்பந்தர் தேவாரம்
 - 3.35.1 - முன்னைநான் மறையவை ..... 
தென்குடித் திட்டையே.)

துய்யவெண் பொடிதனில் துலங்கிடும் தூயவன்
ஐயமுண் கலனுடன் அலைந்துமே ஏற்பவன்
செய்யவன் மேவுமூர் தென்குடித் திட்டையை
மெய்யுறப் பணிபவர் வினையெலாம் தொலையுமே....1

ஓர்விழி நுதலினில் உடையசெஞ் சடையவன்
சீர்பெறு திருமுறை செவியுறக் கேட்பவன்
தேர்செலும் விழவுடைத் தென்குடித் திட்டையைச்
சார்கிற அடியவர் தம்வினை சாயுமே....2

துஞ்சிட நமனையே நெஞ்சினில் உதைத்துடன்
கெஞ்சிய சிறுவனுக் கஞ்சலைத் தந்தவன்
செஞ்சடையானுறை தென்குடித் திட்டையை
தஞ்சமென் றடைபவர் சஞ்சலம் தீருமே....3

கன்னலின் வில்லினன் கனல்பட விழித்தவன்
இன்னலில் காத்திடும் முன்னவன் மதியணி
சென்னியன் மேவிடும் தென்குடித் திட்டையை
முன்னிடும் அடியவர் முன்வினை நீங்குமே....4

முன்னுதல்=கருதுதல்.

வரியதள் அணிபவன் மழவிடை ஊர்பவன்
விரிசடை சேர்பிறை மிளிர;புன் நகையினால்
திரிபுரம் எரித்தவன் தென்குடித் திட்டையை
பரிவொடு பணிபவர் பழவினை பாறுமே....5

 வெண்பனி மலையினன் விண்ணதிச் சடையினன்
பெண்ணுமை பங்கினன் பிஞ்ஞகன் மருமலி
செண்பக மாலையன் தென்குடித் திட்டையை
கண்பனித் தேத்துவார் கடுவினை கழலுமே....6

வேயினில் கீதமாய் வெளிதவழ் காற்றவன்
நோயினில் மருந்தவன் நோற்றிடு நாமமே
தீயினில் ஆடுவான் தென்குடித் திட்டையை
வாயினால் வாழ்த்துவார் வல்வினை மாயுமே....7

ஒருபது சிரம்தனை உடையவன் செருக்கழித்(து)
அருளினை அளித்தவன் அடியிணைப் போற்றியும்
திருமறை விழைபவன் தென்குடித் திட்டையை
மருவிடும் அடியவர் வல்வினை மாயுமே....8

 சூடிய மதிநதி துலங்கிடும் முடியுடன்
ஆடிய அடியையும் அயனரி காணவே
தேடிய சோதியன் தென்குடித் திட்டையை
நாடிய பத்தரை நல்லன நாடுமே....9

கரத்திலோர் மான்மறி கனல்மழு ஏந்திமுப்
புரத்தையே தீயெழப் பொடிசெயும் மன்னவன்
திரைத்தலை அரனுறை தென்குடித் திட்டையை
சிரத்தையாய்த் தொழுபவர் தீவினை சிதறுமே....10

அழுதவன் தாள்பணி அன்பரின் துணையவன்
எழுகதிர் ஒளியவன் இளமதி சடையனின்
செழுவயல் சூழ்தரு தென்குடித் திட்டையை
தொழுபவர் தொல்வினை தூசென விலகுமே....11

ஊர்விடை அமர்பவன்
  வார்சடை மதியினன்
தார்மலி மார்பினன் ஓர்நுதல் விழியினன்
சீர்மலி சோதியன் தென்குடித் திட்டையை
சேர்பவர் தீவினை தீர்வது திண்ணமே....12

April 17, 2013

திருநீலக்குடி

 

'மா மா மா புளிமாங்காய்' என்ற வாய்பாடு

 

தீயர் கல்லில் சேர்த்துக் கடல்தள்ளத்

தூய னவன்பேர் துணைகொள் அடியாரைப்

பாய லைதனில் கலனாய் அருள்செய்யும்

நேயம் உடையார் நீலக் குடியாரே....1

 

நனைசேர் பூக்கள் நாடிப் பதம்சூட்டிப்

புனைவார் பூந்தாள் புனிதத் திருநாமம்

வினைசேர் கடலில் மீட்கும் கலனாக

நினைவார்க் கினியார் நீலக் குடியாரே....2

 

நனை=தேன் எனும்பொருளில்.

 

கன்றின் தாயாய்க் கனியும் அருளாளர்

மன்றில் ஆடும் மலையர் திருநாமம்

ஒன்றும் உளமோ டுன்னத் துணையாக

நின்று காப்பார் நீலக் குடியாரே....3

 

பதியாய் உமையோர் பங்கில் உடையாரைச்

சுதியாய்ப் பண்ணில் துதிக்கும் அடியாரின்

கதியாய் நின்று கருணை நிறையன்பின்

நிதியாய் வருவார் நீலக் குடியாரே....4

 

ஆரார் உறவார் அறிவார் உனையன்றி

வேறார் அருள்வார் விமல வெனப்போற்றும்

சீரார் அடியார் தெய்வம் கயல்துள்ளும்

நீரார் வயல்சூழ் நீலக் குடியாரே....5

 

எல்லா மவனாய் எங்கும் நிறைந்தானைச்

சொல் ஆர் தமிழ்ப்பாத் துதியால் தொழுதேத்தும்

நல்லார் துணைவன் நந்த வனமோடு

நெல்லார் வயல்சூழ் நீலக் குடியாரே....6

 

கழலார் திருத்தாள் கதியாய்ப் பணிவாரின்

சுழலார் வினையின் துன்பை தீர்க்கின்ற

அழலார் கரத்தர் அஞ்சல் அருள்கின்ற

நிழலார் சோலை நீலக் குடியாரே....7

 

ஒற்றை யாக உடுக்கை ஒலியோடு

கற்றைச் சடையர் கானில் நடம்செய்யும்

உற்ற வரிவர் உறுநர்த் துணையாவார்

நெற்றி விழியர் நீலக் குடியாரே....8

 

உறுநர்= தொண்டர்.

 

கூடும் அன்பில் கூம்பும் கரமோடு

சூடும் மலர்த்தாள் தொழுவார்க் கருள்செய்வார்

நாடும் முடிதாள் அயன்மால் அறியாது

நேடும் சோதி நீலக் குடியாரே....9

 

விஞ்சும் பரிவில் வேண தருள்வாரைத்

தஞ்சம் எனத்தாள் தன்னைத் தொழுமன்பர்க்(கு)

அஞ்சல் என்றே அந்த கனைச்செற்று

நெஞ்சில் உதைத்தார் நீலக் குடியாரே....10

March 14, 2013

நஞ்சனகூடு

 

'கலித்துறை-- மா கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்' - வாய்பாடு.

'தான தானன தானன தானன தானன'.

அடி ஈற்றுச் சீரைத் தவிர ஏனைய சீர்கள் எல்லாம் குறிலில் முடியும்.)

(சம்பந்தர் தேவாரம் - 2.9.1 - "களையும் வல்வினை யஞ்சனெஞ் சேகரு தார்புரம்")

 

பாத கம்செயும் ஊழ்வினை பாற்படு துன்பெனும்

ஏதம் நீங்குமொர் உய்வுற எய்திடு நெஞ்சமே

போதன் ஆலடி நீழலில் புண்ணிய னாயருள்

நாதன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....1

 

எய்தல்=அடைதல்

ஏதம்=கேடு.

 

என்பு மாலையன் ஏறமர் நாயகன் பூங்கழல்

அன்பி .னால்தொழு(து) ஆட்பட அண்டிடு நெஞ்சமே

நன்பதி யானவன் நாடுவர் நைவினை தீர்த்தருள்

நம்பன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே.... 2

 

சிக்க லாக்கிடும் தீவினை யால்தொடர் துன்பற

சொக்கன் சேவடிச் சீருரைத் தேகிடு நெஞ்சமே

இக்கு வில்லினை ஏந்துவேள் தீப்படச் செய்தவன்

நக்கன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....3

 

புயலென் றேவரும் புன்வினை தாங்கிடச் செய்திடும்

தயைநி திக்கழல் சார்ந்துய சென்றடை நெஞ்சமே

பெயலெ னப்பொழி பெற்றியன் முப்புரம் நீறுசெய்

நயனன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....4

 

தொல்லை செய்வினைத் துன்பறச் சோதியன் பேரினைச்

சொல்லி அன்பரும் சூழ்ந்திடச் சென்றடை நெஞ்சமே

தில்லை அம்பலச் சிற்பரன் ஏழையர்க் கருள்செய்

நல்லன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....5

 

சிந்தை நொந்திடர் செய்திடும் வெவ்வினை நீங்கிட

சுந்த ரேசனைத் தோத்தரித் தேயடை நெஞ்சமே

செந்த மிழ்தனில் தேன்சுவைப் பண்ணினை மாந்துவன்

நந்தி ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....6

 

விட்டி டாதிடர் விஞ்சிடும் வெவ்வினை வென்றிட

நிட்டை யன்தயை நேடிடச் சென்றடை நெஞ்சமே

பிட்டை யுண்டிட பெண்ணவள் கூலியாய் ஆடிய

நட்டன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....7

 

நேடி=தேடி என்னும் பொருளில்.

 

விதிய தன்வழி மேவிடு வாழ்வினில் உய்வுறப்

பதிய வன்கழல் பற்றிடச் சென்றடை நெஞ்சமே

கதிய வன்வழி காட்டுவன் செஞ்சடை மீதொரு

நதியன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....8

 

கானல் நீரெனக் காணுமிவ் வாழ்வினில் உய்வுற

மோன மாதவன் தாள்தொழு தேயடை நெஞ்சமே

ஆனைத் தோலுடை அங்கணன் அஞ்செழுத் தானருள்

ஞானன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே. ...9

 

தோணி யாய்பவத் துன்பினைத் தாண்டிடச் செய்குவன்

பூணென் றேஅராப் பூண்பவன் சென்றடை நெஞ்சமே

ஆணிப் பொன்னவன் அன்பினுக் காட்படும் பாம்பரை

நாணன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....10

February 25, 2013

திருவதிகை வீரட்டானம்

 

 

(அறுசீர் விருத்தம் - 'காய் காய் காய் காய் மா தேமா' என்ற வாய்பாடு.

1-5 சீர்களில் மோனை.)

 

சிவநெறிசேர்ந் துய்யவெண்ணும் தமக்கைமனம் மகிழவந்த செம்மல் செய்யும்

கவலைதரு வினையகலும் செந்தமிழ்த்தேன் பாவலங்கல் கனிவாய் ஏற்கும்

உவகையினில் அருள்பொழியும் தெய்வமவன் திருநடம்செய் ஒண்தாள் போற்றி

சிவனுறையும் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே....1

 

அல்லெனவும் பகலெனவும் பாராது திலகவதி அரனை வேண்ட

நல்வழியை நாவரசர்க் கருள்செய்து ஆட்கொண்ட நம்பன் மன்றில்

பல்லியமும் முழங்கிடவே ஆடல்செய்வான் கழல்பணியும் பத்தர்க் கன்பன்

செல்வனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீருமன்றே....2

 

அம்மையுடன் ஆடிடுவான் கழல்பற்றித் தமக்கையிறை அருளை வேண்ட

நம்மையனும் இளவலுக்கு சூலைதந்தாட் கொண்டவர்க்கு நன்று செய்ய

மம்மரறு பாவலங்கல் சூட்டிமகிழ் வாகீசர் வணங்கும் தேசார்

செம்மலுறு திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே....3

 

பேரவனுக்(கு) ஆயிரமாய்க் கொண்டிலங்கும் பிறைசூடிப் பெம்மான் செய்யச்

சீரடியை போற்றிமகிழ் நாவரசர் தேவாரப் பண்ணிசையை செவியேற் கின்ற

பூரணன் தன் நுதல்விழியால் முப்புரத்தை எரியாக்கிப் பொடி செய்த

தீரனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே....4

 

சேவமரும் அங்கணன் தன் அடியாரைக் காத்திடவே தேடி வந்து

நோவவரும் வினைதீர்ப்பான் முப்புரத்தை எரிசெய்யும் நுதல்கண் ணன்

பாவடியில் நிறைந்திருக்கும் ஈசனவன் எளியோர்க்கருள் செல்வ னான

தேவனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீருமன்றே....5

 

சஞ்சலங்கள் தருகின்ற வினையிடரைத் தாங்குகின்ற சக்தி வேண்டி

கஞ்சமலர்த் தாள்பற்றிப் பணிந்தேத்தும் அன்பர்க்கே அருள்செய் கின்ற

நஞ்சையணி கண்டமுடன் விண்ணதியும் வான்பிறையும் நயந்த ணிந்த

செஞ்சடையான் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.... 6

 

வெட்டவெளி தன்னில்சுழல் கோளையெல்லாம் இயக்குகின்ற விமலன் மோன

நிட்டையினில் மறைபொருளை கல்லால்கீழ் சீடர்க்கு போதிப் பானின்

நட்டமிடு செங்கழலில் சாற்றுகின்ற பாமாலை நயந்தேற் கின்ற

சிட்டனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.... 7

 

பலவாகும் விளையாடல் விழைவோடு புரிவானை பத்தி யாக

இலையோடு மலர்தூவும் அடியாரின் இடர்யாவும் தீர்த்த ழித்துக்

கலனோடு மழுதீவாட் படையேற்றான் புரமூன்றும் கரியாய் செய்த

சிலையேந்தி திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.... 8

 

புகழ்பொலியும் அருளுரைக்கும் நாவரசர் தமிழ்பாடல் புரிந்து வப்பான்

நிகழ்வதவன் செயலாக நினைவாரின் சித்தமதில் நிற்கு மீசன்

இகழ்வினில்மெய் அன்பர்க்குத் துணையாகக் காக்கின்ற இறைவன் திங்கள்

திகழ்முடியன் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீருமன்றே.... 9

 

புரிந்து = விரும்பி.

 

வெய்யழலாய் ஓங்கியோனை அயன்மாலாம் இருவர்தொழும் விமலன் தானும்

பையரவும் வெண்பிறையும் கங்கையோடு செஞ்சடையில் சூடு கின்ற

தையலுமை பங்குடையான் நாவரசர் பாவலங்கல் தரித்து வந்த

செய்யனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.... 10

 

February 19, 2013

திருக்கண்டியூர்

 

(அறுசீர்விருத்தம். 'மா கூவிளம் கூவிளம்' என்ற அரையடி வாய்பாடு)

 

நோவி னாலுயிர் வாடிட
...நொந்து சொந்தமும் கூடுமுன்
நாவி னித்திடும் பேரனை
...நம்பி போற்றிடும் பத்தியில்
வாவி சூழ்கமழ் பூம்பொழில்
...மஞ்சு லாவிடும் வானுயர்
கோவி லானுறைக் கண்டியூர்க்
...குறுகி உய்ம்மட நெஞ்சமே....1

குறுகி=அணுகி

நிந்தை பட்டுழல் மூப்பினில்
...நெருங்கும் காலனைக் காணுமுன்
எந்தை ஈசனார் பொற்கழல்
...ஏத்தி போற்றிகள் சொல்லிட
முந்தை ஊழையும் தீர்ப்பவன்
...மொய்க்கும் வண்டுசூழ் பூமலி
கந்த மார்பொழிற் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....2

வேளை வந்திட அந்தகன்
...வீசும் பாசமும் அண்டுமுன்
கோளை வானொளிர் மீனினைக்
...குறித்த பாதையில் ஓட்டுவான்
தாளை பற்றிடும் சிந்தையாய்த்
...தஞ்சம் வேண்டிடக் காப்பவன்
காளை வாகனன் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....3

வேட்டுப் பேணிய யாக்கையை
...விட்டு யிர்செலு முன்னமே
ஆட்டுக் காலெடுத் தாடிடும்
...ஐயன் உண்பலி தேடுவான்
சூட்டும் கொன்றையும் தாழ்சடை
...மேவியொ ளிர்ந்திடும் ஓர்விழி
காட்டும் நெற்றியன் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....4

நோதல் சேர்பிணி மூப்பினில்
...நொந்து பேசொணாப் போதினில்
பாத கன்யமன் வீசிடும்
...பாச மோடுயிர் ஏகுமுன்
நாதன் வெண்டலை யிற்பலி
...நாடி நல்லிசை மாந்திடும்
காதன் மேவிய கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....5

கண்ணி லாதவன் வீசிடும்
...கால பாசமும் அண்டுமுன்
வெண்ணி லாத்துளி விண்ணதி
...வேணி சூடிய செய்யவன்
புண்ணி யக்கழல் பற்றிடின்
...பொங்கும் அன்பினை நெற்றிசேர்
கண்னில் காட்டரன் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....6

கண்ணிலாதவன் = அந்தகன் (இயமன்) இரக்கமில்லாதவன் என்னும் பொருளில்.

 

வெய்ய ழல்சுடு காட்டினில்
...வெந்து சாம்பலென் றாகுமுன்
தைய லாளுமை பங்கனின்
...தாளி ணைத்துணைவேண்டியே
மெய்யன் உண்பலித் தேறிட
...வேதன் வெண்டலை ஓடுடைக்
கையன் மேவிய கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....7

கொண்டு வந்ததென்? போகையில்
...கொண்டு செல்வதென்? என்பதைக்
கண்டு மெய்யினைத் தேர்ந்திட
...கங்கை யான்கழல் சூடியும்
மண்டும் பேரருள் போற்றியை
...மகிழ்ந்து ஏற்பவன் நஞ்சையுண்
கண்டன் மேவிய கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....8

உரிய வன்யமன் வந்திட
...உடலை விட்டுயிர் ஏகுமுன்
வரிய தள்தனை ஆடையாய்
...வரித்து மேனியில் ஏற்றவன்
திரியு முப்புரம் தீயெழ
...சிரித்த வன்விடத் தால்களம்
கரிய வன்பதி கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....9

மங்க லாகிடும் பார்வையும்
...மறலி வந்திடு முன்னமே
வெங்க டம்தனில் ஆடுவான்
...விரிந்த தாழ்சடை கொண்டவன்
செங்கழல் மறை போற்றிடும்
...திங்கள் கொன்றை பாம்புடன்
கங்கை சூடரன் கண்டியூர்
...கருதி உய்ம்மட நெஞ்சமே....10

January 29, 2013

திருப்பூந்துருத்தி

(கலிவிருத்தம் ; 'மா மா மா காய்'என்ற வாய்பாடு)

உள்ளம் உருகி உணரும் அன்புக்கே
அள்ளி வழங்கும் அருளன் துதிபாடிப்
புள்ளி வண்டார் பொழில்சூழ் பூந்துருத்தி
வள்ளல் பாதம் வாழ்த்த வருமின்பே....1

கூற்றை உதைசெய் கோவின் அடியார்கள்
நீற்றில் மிளிரும் நிமலன் அருள்திறத்தைப்
போற்றும் அலங்கல் பூணும் பூந்துருத்தி
ஏற்றன் பாதம் ஏத்த எழுமின்பே....2

தலையில் மதியை தரித்த அங்கணனை
இலையும் மலரும் இணைப்பூந் தாள்தூவிப்
பொலியும் நதிசேர் பொழிலார் பூந்துருத்தி
நிலையி னானை நினைய நேருமின்பே....3

இன்னல் தந்தே இடர்செய் வினைதன்னை
பின்னம் செய்யும் பெம்மான் பொற்கழலன்
புன்னை மலர்சூழ் பொழிலார் பூந்துருத்தி
மன்னன் பாதம் வாழ்த்த வருமின்பே....4

சாவா மருந்தாய்த் தாங்கும் திருப்பெயரை
நாவால் துதித்து நம்பன் அருள்சேரப்
பூவார் நந்த வனம்சூழ் பூந்துருத்தி
தேவா என்னத் தீரும் தீவினையே....5

தூதா யன்று தோழற் காய்நடந்த
பாதா உமையோர் பாகா மறைவிரிக்கும்
போதா அளிசூழ் பொழிலார் பூந்துருத்தி
நாதா என்ன நாளும் வருமின்பே....6

மென்னோக் குடைய விழியாள் தன்கேள்வா
தன்னேர் இல்லா தாளா அஞ்சலருட்
பொன்னே கவினார் பொழில்சூழ் பூந்துருத்தி
மன்னே என்ன மங்கும் வல்வினையே....7

கொடையா யருளிக் குறைதீர்த் தாட்கொள்ளும்
விடையா கரத்தில் மிளிர்மான்,தீமழுவாட்
படையா பசிய பொழில்சூழ் பூந்துருத்தி
சடையா என்னச் சாயும் வல்வினையே....8

இயலும் வகையில் இறைவன் நினைவாகப்
பயனைக் கருதாப் பணிசெய் அடியாரை
அயலில் பொன்னி அலைபாய் பூந்துருத்தி
அயனின் அருளால் அடையா அருவினையே....9

காற்று பூமி கனல்நீர் வானாகத்
தோற்று வானைத் துதிக்கும் அடியார்கள்
நீற்றில் ஒளிர்ந்து நிற்கும் பூந்துருத்தி
ஆற்றன் அடியை அடைதல் அழகாமே....10.