September 09, 2013

திருக்கருகாவூர்

 

(கலிவிருத்தம் - 'தேமா தேமா புளிமா புளிமாங்காய்' - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைக ளவைபோகச்")

மண்ணாய் விண்ணீர் வளிதீ எனவானான்
கண்ணால் அன்பைக் கனிவாய் அருளீசன்
தண்ணார் கங்கை சடையன் கருகாவூர்
எண்ணாய் நெஞ்சே இலையோர் இடர்தானே....1

தார்கொள் தோளில் தவழும் அரவேற்பான்
பேர்சொல் பத்தர் பிணிசெய் துயரோட்டும்
சீர்கொள் தாளன் திகழும் கருகாவூர்
சேர்க நெஞ்சமே சிதையும் வினைதானே....2

கோதே விஞ்சும் குணங்கொள் அடியேனுக்(கு)
ஆதா ரம்பூங் கழலே எனவேண்டி
மாதோர் பங்கன் வதியும் கருகாவூர்
நீ தீ தோட நினையாய் மடநெஞ்சே....3

கோது=குற்றம்.

நித்தன் ஆலின் நிழலில் அமர்போதன்
பத்தர் தம்மின் பரமன் கருகாவூர்
முத்தன் பூந்தாள் முடியில் தரிப்பார்க்கே
எய்த்தல் இல்லா இனிய நிலைதானே....4

அங்கம் நீற்றில் அழகாய்த் துதைந்தானின்
துங்க செந்தாள் தொழுவார்க் கருளீசன்
திங்கள்  சூடித் திகழும் கருகாவூர்
அங்கை கூப்பிப் பணிவார் அடியாரே....5

பிட்டு விற்கும் பெரியள் துணையானான்
சுட்ட நீற்றில் துலங்க அருள்செய்வான்
மொட்ட விழ்பூம் பொழில்சூழ் கருகாவூர்
சிட்டன் தாள்சேர் மனமே திருவாமே....6

பெரியள்=வயதில் பெரியவள்(வந்தி)

காட்டில் தீயில் கதித்தே நடம்செய்வான்
வாட்டும் துன்பில் வருவான் துணையாக
மாட்டின் மீதூர் மலையன் கருகாவூர்
நாட்ட மாகித் தொழுதால் நலமாமே....7

கோல கங்கை குளிர்வெண் மதிசூடி
பாலன் கொண்ட பசிக்காய் அமுதீந்த
நீல கண்டன் நிதியார் கருகாவூர்
சூலன் பாதம் தொழுவார் துயர்போமே....8

மானேய் கண்ணி மடவாள் உமைகேள்வன்
ஊனார் ஓடோ(டு) உணவுக் கலைவானின்
தேனார் பூங்கா திகழும் கருகாவூர்
போனாற் பொல்லா வினைகள் பொடியாமே....9

பாய்தண் கங்கை படர்செஞ் சடையேற்றான்
தூய்நற் றாளைத் தொழுவார்க் கருள்செய்வான்
காய்நெல் காணும் வயல்சூழ் கருகாவூர்
போய்முன் வீழிற் பொல்லா வினைபோமே....10

தூய்=தூய.