October 09, 2010

கச்சி ஏகம்பனே !



'விளம் விளம் விளம்' என்ற வாய்பாடு.

நீர்த்திரை பனித்திட நெகிழ்வுடன்
நாத்தழும் பேறிட நானுனை
ஏத்திடு மாறறி யேனெனை
காத்தருள் கச்சியே கம்பனே....1

நைவினை துயர்தரும் நாளுமே
எய்திடும் புகலினை எண்ணியே
துய்மலர் மாலைகள் சூட்டினேன்
கைகொடு கச்சியே கம்பனே….2

 

மண்டிடும் வினைதனில் வாடியும்
கொண்டிடும் அன்பினில் கோரியே
தண்டமிழ்ப் பாமலர் சாற்றினேன்
கண்டருள் கச்சியே கம்பனே....3

கோருதல்=வேண்டுதல்.

தண்ணுமை துடிதரும் தண்ணொலிப்
பண்ணுடன் ஆடிடும் பாதனே
பெண்ணுமை பதியருள் பேறளி
கண்ணுதல் கச்சியே கம்பனே....4

தண்ணுமை=மத்தளம்.

 

நிதிதனை நினைந்துழல் நிலையினில்
அதிபதி உனதருள் அறிகிலேன்;
விதிதரும் விளைவினை வெல்கிற
கதியருள் கச்சியே கம்பனே....5

வழித்துயர் மிகுந்தயிவ் வாழ்வினில்
விழித்துழல் வேனுனை வேண்டினேன்
பழித்திட வருகிறப் பாழ்வினை
கழித்தருள் கச்சியே கம்பனே....6

 

இமிழ்த்திடு கழல்களின் எழில்நடம்
தமிழ்த்திரு மறைகளும் சாற்றுமுன்
உமித்துணை நினைவிலேன்; உற்றவா
கமித்தருள் கச்சியே கம்பனே....7

இமிழ்த்தல்=ஒலித்தல்.
உமி=நெல்லின் உமி (சிறிதளவு என்னும் பொருளில்
)

சிரத்துடை பிறையனே! திரியுமுப்
புரத்தையும் எரிசெயும் புண்ணியா!
துரத்திடும் தொல்வினை தொலைத்தருள்
கரத்தினாய் கச்சியே கம்பனே! .... 8

சுழலுறு வாழ்விதில் தொடர்கிற
நிழலென வினையதும் நேர்பட
உழலுதல் இன்றியென் றுய்வனோ?
கழலருள் கச்சியே கம்பனே.... 9

தலமுளான் இளநிலா சடையினான்
குலைவிலா அன்பிலே கொலுவுளான்
வலமுளான் அருளினை வழங்குவான்
கலையினான் கச்சியே கம்பனே.... 10

No comments:

Post a Comment