April 25, 2011

வண்ணப் பாடல்!

'தன தனதந்த தத்தத் தனதன தானன தானதத்தா'


இழை இசைகின்ற முத்துச் சுடரொளி மேவிய தோளசைத்தே
குழை யசைகின்ற நட்டத் தினிலிசை நாதமொ டாடலுற்றாய்
உழை யிசைகின்ற சக்திக் கனலுமை யாளவள் தேவுனக்கே
விழை விசைகின்ற சித்தத் தெளிவினை யேயருள் மாசறுத்தே.

இழை = ஆபரணம்,அணிகலன்.
உழை = பக்கம்.
குழை = காதணி
.
விழைவு = நாட்டம்.

 

------------------------------------------------------------------------------

(தனந் தனதன தந்த தனன தனத்தத் தனதனன)

நிதம் சதிரினில் விஞ்சை எழிலில் நடத்தைத் தருமிறைவன்
பதம் கதியென நெஞ்சில் அவனை நினைக்கத் துயரொழியும்
விதம் சதியினில் மிஞ்சும் வினையை அழித்துக் கருணைசெய
சதம் பதிகிற அன்பின் உருவன் இருக்கப் பயமிலையே!

 

-------------------------------------------------------------------------------

திருநின்றவூர்


தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன .. தந்த தான



கத்துமொலி தத்துதிரை சுற்றிவரும்
....
இத்தரையி லுற்றவுயிர் அத்தனையும்
....
உத்தமநின் சத்தியினில் வைத்திடுவை....மங்கைபாகா

எத்தனைவி தப்பிறவி யுற்றழுது
....
மத்துறுத யிர்க்கடைத லுற்றநிலை
....
அப்பிலெழு மொக்குளென விட்டழிய....நொந்தபோதும்

நித்தியமில் மித்தையறு அத்தனுனை
....
உத்திநிறை சித்தமொடு பற்றிடவும்
....
நித்தமுநி னைத்துரைசெய் அக்கரமொர்....ஐந்துமானாய்!

புத்தமுத நற்கவிதை இக்குநிகர்
....
சொற்றமிழில் நெக்குருக வைத்தமறை
....
பெற்ற தவர் நிற்பணியும் பொற்புடைய....நின்ற ஊரே!

அடைவார் வினை அறுமே!

('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - வாய்பாடு.
1-4
சீர்களில் மோனை)


மடமாகிய அறியாமையின் பிழையாவையும் மறைய
நடமாடிடு இறையோனினை வாலேயுளம் நயந்தும்
இடமேவிய உமையாளரன் துணைநாடிட இனிதே
அடைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....1.

பொழுதாகவும் நொடியாகவும் சுழன்றோடிடும் புவியில்
வழுவேமலி அவமாயையில் தடுமாறிட மலைந்து
விழுவேனெனை தடுத்தேயருள் செய்வாயென வேண்டி
அழுவார்வினை அறுமேஇனி இலையோர் பிறப் பவர்க்கே....2.

மணைமீதமர் இளையோன்மணம் தடுத்தாட்கொள வந்தே
பிணைநீஎன தடியானென அருளேசெயும் பெம்மான்
அணைமீறிடு அன்பாலுன தடியேபிடித் தழுதே
அணைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....3.

(
சுந்தரரைத் தடுத்தாட்கொண்டது.)

மழைக்கேங்கிடும் பயிராகவுன் தயையேஉறு வரமாய்க்
கழைக்கூத்தெனும் புவிவாழ்விலுன் கழல்பாதமே கதியாய்ப்
பிழைக்கேப்பிறப் பெடுத்தேனுன தருளேபெரும் பேறென்
றழைப்பார்வினை அறுமேஇனி இலையோர்ப்பிறப் பவர்க்கே....4.

துளியேபிறை அணிவார்சடை யொளிர்பூஞ்சரம் இலங்கக்
கிளிதோளமர் வடிவாள்கயல் விழியாள்துணை அரனே
களியாய்நட மிடுவாய்சிவ பரனேஎனைக் காவென்(று)
அளிவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....5.

 

மணியேசுடர் ஒளியேஅரு வுருவேசிவ பரமே
தணியாத உன் சினத்தால்நுதல் விழியால்மதன் எரித்தாய்
அணியார்கழல் பதம்நாடிடத் திருநீற்றினைத் துலங்க
அணிவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....6.

நறைபூமலர்ச் சரமீசனின் திருத்தோளினில் இசைய
பிறைசூடிடும் சடையோன்கழல் செயுமாடலைக் கண்டு
நிறைவாகிய மனமோடிறை அரன்பேர்புகழ் வாயால்
அறைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....7.

இகத்தேபெறும் துயர்யாவையும் துகைத்தோட்டிடும் எம்மான்
செகத்தேஉள அடியார்மனக் குடிலேஉறை தெய்வம்
மிகத்தானெனக் கருளேசெயும் இறைவாஎன வேண்டும்
அகத்தார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....8.

தமர்தானென எமர்தானென உய்ர்ந்தாரெனச் சாடும்
சமர்மேவிய புவிமீதமை உறுசாந்தியைத் தருவோன்
நமர்தான்சிவ பஞ்சாக்கரன் திருப்பாதமே நம்பி
அமர்வார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....9

சுமையாகிடும் வயதாகிட வருவானரன் துணையாய்
நமையாளுமெய் இறையோனவன் திருத்தாளினை நாடி
இமையோரவர் அருளேயென நறும்பூமலர் இட்டே
அமைவோர்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....10.

திருஒற்றியூர்!

 

கற்றிலா ரெனினுசீர்
ஒற்றியூர் அரன்பதம்
பற்றியே தொழுதிடச்
சுற்றமோ டுயர்வரே....1

உலைவெலாம் அற்றிட
நிலவுசேர் உச்சியன்
மலையனார் ஒற்றியை
வலம்வர பெற்றியே...2


உலைவு = சஞ்சலம்.
உச்சி = உச்சந்தலை.
பெற்றி = பெருமை.

எந்தையாம் ஒற்றியூர்
செந்தழ லன்பதம்
வெந்துயர் தீர்த்தருள்
தந்திடும் மெய்யிதே...3

நற்றவன் ஆதியின்
ஒற்றியை நாடிடச்
சுற்றிடும் ஏதமும்
அற்றிடும் ஓர்கவே...4

ஏதம்=துன்பம்.

அண்ணியன் அன்பினுக்குக்
கண்ணுதல் ஒற்றிநகர்
எண்ணுக என்மனமே
நண்ணிடும் நன்மைகளே...5

இருளென நாளெனவும்
உருளுமிப் பூவுலகில்
குருசிவன் ஒற்றிநினை
வருவினை அற்றிடுமே...6.

பையர வேயணி
மெய்யனி னொற்றியை
நைவினை இற்றிடக்
கைதொழு துய்வரே...7.

இலம்செயும் தீங்கழி
சிலம்பொலி தாளனின்
பலம்தரும் ஒற்றியை
வலம்வர பெற்றியே...8.

இலம்=வறுமை.
பெற்றி=பெருமை.

பயம்கொள எற்றியே
இயமனை செற்றவன்
நயம்தரு ஒற்றிசேர்
பயனதும் வெற்றியே...9.

நியாயமே செய்பவன்
தியாகரா சன்பெயர்
தியானமே செய்திட
கியாதிசேர் ஒற்றியே...10.

கியாதி= புகழ்.