September 07, 2011

திருவிற்கோலம்

(இக்கால ஊர்ப்பெயர் - 'கூவம்')

திருவிற்கோலம் (கூவம்) கோயில் விவரங்களுக்கு இங்கே காண்க:
http://temple.dinamalar.com/New.php?id=124

கலிவிருத்தம் - 'விளம் விளம் மா கூவிளம்' என்ற வாய்பாடு.
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று
வாரா);


அம்பல மாடிடும் ஆடல் வல்லஎம்
சம்புவின் தாள்மலர் சாற்று நெஞ்சமே!
கும்பிடும் அன்பரின் குறைகள் தீர்த்திடும்
செம்பெரு மானுறைத் திருவிற் கோலமே....1

ஆர்கலி யாம்பவம் அடையல் நெஞ்சமே!
கார்முகில் என்னவே காக்கும் எம்பிரான்
ஏர்சிலை தோளினில் இலகும் வான்பிறை
சேர்சடை யானுறை திருவிற் கோலமே....2

ஆர்கலி = கடல்
சிலை = வில்.


ஆதியாய்ப் பாதியை ஆக மேற்றவன்
ஓதிடா மோனியை உன்னு நெஞ்சமே!
சோதியாய் ஓங்கியே தோற்றும் அம்பரன்
தீதிலா தானுறை திருவிற் கோலமே....3

அம்பரன் = ஆகாயமாயிருப்பவன்....3

கவலையி லாழ்த்திடு கன்மத் தாலுறும்
அவதியும் அற்றிட அடைஎன் நெஞ்சமே
தவனமும் கொன்றையும் சடையில் சூடுமெம்
சிவபெரு மானுறை திருவிற் கோலமே....4

உரித்தவெம் மாஉரி உடுத்தி வெண்பொடி
தரித்தவன் தண்ணளி தனைஎண் நெஞ்சமே!
எரித்தவன் வேளினை எரியும் சினமிகச்
சிரித்தவன் தானுறை திருவிற் கோலமே....5

 

அகழ்ந்தரி கண்டிடா அடிஎண் நெஞ்சமே

நிகழ்பவை யாவுமே நிமலன் செய்கையே

முகிழ்விரி கொன்றைவெண் முல்லை கண்ணியாய்

திகழ்முடி யானுறை திருவிற் கோலமே....6

 

அஞ்சிட வந்திடர் அளிக்கும் வெவ்வினை

பஞ்செரி தீயெனப் படவும் செய்குவன்

தஞ்சமென் றண்டிடு தாளை நெஞ்சமே!

செஞ்சடை யானுறை திருவிற் கோலமே....7

 

கூர்த்தநன் நடசிவன் குறிஎன் நெஞ்சமே

போர்த்தவெம் புலியதள் பொலியும் எம்பிரான்

ஆர்த்தவெவ் வினையினால் அன்பர் கொள்துயர்

தீர்த்தவன் தானுறை திருவிற் கோலமே....8

 

கூர்த்தநடம் = நடனக்கலையின் நுட்பங்கள் அமைந்த நடனம்.

 

பாவடி வானவன் பற்றுக் கோடவன்

பூவடி தன்னையே பூணென் நெஞ்சமே

தாவடி அரிஅயன் சாற்றும் ஓங்குயர்

தீவடி வானவன் திருவிற் கோலமே....9

 

மெய்திகழ் வெண்பொடி மேவு மெம்பிரான்

மொய்கழல் பற்றிட முன்னு நெஞ்சமே

பெய்கிற மாரியாய்ப் பேர ருள்தனை

செய்பெரு மானுறை திருவிற் கோலமே.....10

No comments:

Post a Comment