October 10, 2011

என்பணிஅரன்துதி !

'மா கூவிளம் விளம் விளம் விளம் மாங்காய்' - அறுசீர் விருத்தம்;
மாச்சீர் குறில் / குறில்+ஒற்று என்று முடியும்;
(1-3-5 சீர்களில் மோனை)


கொய்த நாண்மலர் கோத்தெழில் மாலைகள் குலவியே தோள்சேரும்
பைதல் வெண்பிறை பாயலை கங்கையைப் பாந்தமாய் சடையேற்பான்
வெய்தி டர்தரு வினைச்சுழல் மீட்பவன் விண்திரி புரமூன்றை
எய்தெ ரித்திடும் இறைத்துதி என்பணி இனியிலை இன்னாவே....1

பைதல்=இளைய
குலவுதல்=விளங்குதல்.

கரவு நெஞ்சமாய் கணந்தொறும் பொய்யினைக் கழறிடும் என்னாவே
பரவு வெவ்வினை படுவழி அறிகிலை பறைதிநான் என்னாவேன்
உரவு நீர்சடை உற்றவன் ஓங்குதீ ஒளியவன் எரிகானில்
இரவு செய்நடம் ஏற்றுதல் என்பணி இனியிலை இன்னாவே!....2

உரவுநீர்=ஆறு என்னும் பொருளில்.

 

அடமும், பேதுடை அறிவிலாப் புன்மொழி அறைகுவை என்னாவே
தொடரும் வல்வினை தொலைவழி அறிகிலை சொல்லுநான் என்னாவேன்
விடமும் உண்ணுவான் விண்ணவர் துணையவன் வெண்ணிறப் போரேறாம்
இடபம் ஏறிறை ஏற்றுதல் என்பணி இனியிலை இன்னாவே....3

அடம்=பிடிவாதம்
பேது=துன்பம்.

கடுக டுப்பொடு கருணையில் லாவசை கழறிடும் என்னாவே
கொடுவி னைத்துயர் குறையவொன் றுரைத்திலை கூறுநான் என்னாவேன்
சுடுமி ருட்கடம் சூழெரி நடசிவன் தொடர்முடைக் கையேந்தி
இடுப லிக்கலை இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....4

கடம்=காடு.

 

பண்ணி யச்சுவை பலவகை உண்டெனப் பகர்ந்திடும் என்னாவே
எண்ணி டாவினை இடரற அறிகிலை இசைத்திடு என்னாவேன்
வெண்ணி லாத்துளி மின்னொளிர் செஞ்சடை விமலனை அன்போடே
எண்ணில் நாமமும் ஏற்றுதல் என்பணி இனியிலை இன்னாவே....5

பண்ணியம்=பலகாரம்,
இசை=உரை.

ஒன்று நன்றையும் ஓர்கிலை உய்வழி உரைத்திலை என்னாவே
தொன்று செய்வினை தொடரற மொழிகிலை சொல்லுநான் என்னாவேன்
அன்று தில்லையில் ஆடிய பாதமே அடியரின் பற்றாகும்
என்றும் உள்ளமெய் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....6

 

பறப்பில் தேடுவை பணந்தனை பரிவினை பகர்கிலை என்னாவே
திறப்பி தென்னவே சிவனடி நினைந்திலை செப்புநான் என்னாவேன்
பிறப்பில் லாதவன் பிணிபவந் தொலைப்பவன் பெண்ணுமை பங்கேற்றான்
இறப்பில் லாதவெம் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....7

பறப்பு=துரிதம்.
திறப்பு=திறவுகோல்.

வசையும் திட்டுமாய் வார்த்தையில் சுடுமொழி வழங்குவை என்னாவே
பசையென் றூழ்வினை பற்றறும் வழியிலை பகர்வைநான் என்னாவேன்
தசமென் றேசிரம் தாங்குமி லங்கைகோன் அழுதுமே கானம்செய்
இசையைக் கேட்டஎம் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....8

 

கொழுந்து வெற்றிலைக் கூட்டுடன் விருந்துணக் கோருவை என்னாவே
விழுந்து போம்படி வினையற அறிகிலை விளம்புநான் என்னாவேன்
விழுங்கு நஞ்சதும் விண்ணமு தாயயன் விட்டுணு தாம்தேட
எழுந்த சோதிஎம் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....9

வெற்றிலைக்கூட்டு=சுண்ணாம்பு,பாக்கு,இத்யாதி.
விளம்பு=சொல்லு.

கூழை என்னவே குறைமலி மொழியினைக் கூறிடும் என்னாவே
பாழை யாய்மயல் படரற உரைத்திலை பகர்திநான் என்னாவேன்
மாழைப் பொன்னவன் மாசிலா மணியவன் மறையவன் என்றென்றும்
ஏழை பங்கினன் இறைதொழல் என்பணி இனியிலை இன்னாவே....10

படர்=துன்பம்.,கூழை=புத்திக்குறைவு,
பாழை=மாயை,மயல்=மயக்கம்.

No comments:

Post a Comment