May 16, 2012

திருச்சோற்றுத்துறை!


கலிவிருத்தம். 'மா புளிமா புளிமா புளிமா' என்ற வாய்பாடு.
ஒரோவழி தேமா வரும்.

கல்லால் தனுசால் கனிவில் வசவால்
எல்லா இடரும் எளிதாய்ப் பொறுப்பான்
வல்லான் குருவாய் வருவான் அறங்கள்
சொல்வான் பிரியான் சோற்றுத் துறையே....1

எடுதாள் நடம்செய் இறையைத் தொழவே
அடுதீ வினையும் அகன்றோ டிடுமே
நெடுமூ வெயிலை நெருப்பாய் விழியால்
சுடுவான் பிரியான் சோற்றுத் துறையே....2

கணையார் மதனைக் கடுகிப் பொடித்தான்
இணையாம் வினையின் இடரைக் களைவான்
அணைவான் எளியர்க் கருள்வான் அடியார்த்
துணைவன் பிரியான் சோற்றுத் துறையே....3

ஆல மமுதாய் அருந்தும் அருளன்
பாலன் இடரை பரிவாய் தீர்க்கக்
காலன் நடுங்கக் கழலால் உதைசெய்
சூலன் பிரியான் சோற்றுத் துறையே....4

நாடித் தொழுவார் நலிவும் அகல
ஓடி வருவான் உவந்தே அடியார்
ஆடி டுமெழில் அடிபா டலங்கல்
சூடிப் பிரியான் சோற்றுத் துறையே....5

 

வாழ நிலையாம் வழிகாண் பதுவே
தாழ விரிசெஞ் சடையன் தொழுதல்
சூழ வருமூழ்த் தொலைப்பான்;அடியார்த்
தோழன் பிரியான் சோற்றுத் துறையே....6

வேத வடிவில் விளங்கும் பரமன்
நாத வெளியில் நடனம் புரியும
பாதன்;நடையாய் பரவை யிடம்செல்
தூதன் பிரியான் சோற்றுத் துறையே....7

உடுப்பான் புலித்தோல் உடையாய்; கைலையை
எடுத்தான் வலியோ டிசைப்பான் மடுப்பான்
கொடுப்பான் அருளை கொடிய வினையைத்
துடைப்பான் பிரியான் சோற்றுத் துறையே....8

உரியான் அடியார் உளமே தளியாய்ப்
பரிவான் எளியர் படுதுன் பகலப்
புரிவான் தயையைப் பொழிவான் அருளாய்ச்
சொரிவான் பிரியான் சோற்றுத் துறையே....9

உண்டன் புநிறை ஒருவன் கறையார்
கண்டன் அருளும் கழலார் பதத்தான்
அண்டும் வினைகள் அகற்றும் நிலவுத்
துண்டன்
பிரியான் சோற்றுத் துறையே....10

No comments:

Post a Comment