September 08, 2010

திருஓண காந்தன் தளிசேர் நெஞ்சே!

 

எண்சீர் விருத்தம் - '8 மா' வாய்பாடு.
1
சீர்களில் மோனை
.

தலமும் புகழும் இசைக்கும் அன்பர்
...
சகல உயிரின் உய்வை எண்ணி
மலரும் புகைகொள் தூபம் கொண்டு
...
மனதும் நெகிழப் போற்றி னாரே!
விலகும் வினையும் தூசைப் போல
...
விடையோன் அருள்வான்!ஓமென் றோதும்
ஒலியில் நிறைவாய் நிற்கும் வேதன்
...
ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே! … 1

 

சுற்ற மென்றும் சொந்த மென்றும்
...
சூழும் பந்தம் காடு மட்டும்
நற்ற வன் தாள் பற்றிக் கொண்டால்
...
நன்மை என்றும் வந்து சேரும்
பெற்றம் ஏறும் பெம்மான் போற்றின்
...
பேறாம் உய்வை அருளும் அன்பில்
உற்ற புகல்தந் தாளும் ஈசன்
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே. … 2

 

மண்டை யோட்டில் பலியைத் தேரும்
...
மங்கை பங்கன் வேடம் ஏற்றிக்
கொண்ட அன்பில் கூடும் உணர்வில்
...
கும்பிட் டிறைவன் தாளை எண்ணும்
தொண்ட ரென்றும் தமிழ்த்தேன் பூவாய்த்
...
தொடுத்த பாக்கள் வரமாய்த் தோன்றி
உண்ட ருளென்னும் எம்மான் ஈசன்
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 3

 

விரியும் சடையில் கொன்றை தும்பை
...
விண்நீர் கங்கை மதியும் சூடி
கரியின் தோலை உடையாய் ஏற்கும்
...
கடவுள் தானாய் அடிமை கொண்ட
பரிவின் திறத்தை நாவ லூரர்
...
பதிகத் தாலே போற்றி செய்தே
உரிய அன்பில் கண்டு கொண்ட
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 4

 

படையாய் வருத்தும் ஊழை வெல்லும்
...
பாதை யொன்றைச் சொல்வேன்! அன்பைக்
கொடையாய் அருளும் ஐயன் பாதம்
...
குறித்தே மலர்பூ மாலைச் சாற்றி
விடையா! விமலா! என்றே போற்றின்
...
வினையைத் தீர்க்கும் மங்கை வாமம்
உடையான் நாவ லூரர் அன்பன்
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 5

 

கோதும் பழியும் கூட்டும் வாழ்வில்
...
குறியாய் பொருளென் றொன்றே கொள்வாய்
ஏதுன் இலக்கு? சொல்வேன் கேளாய்
...
ஏதம் செய்யும் துன்ப வெள்ளம்
மோதும் பவமாம் ஆழி வற்றும்
...
முக்கண் பரமன் பாதம் பற்றி,
ஓதும் நாவ லூரர் அன்பன்
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 6

கோது =குற்றம்
ஏதம்=துன்பம்

 

சுமக்கும் பார மல்ல யாக்கை
...
துணைவன் உறையும் அன்புக் கோவில்!
அமைக்கும் மேடை தன்னில் நம்மை
...
ஆட்டு விக்கும் ஆடல் மன்னன்!
இமைக்கும் கண்ணின் ஒளியாய்க் காக்கும்
...
இமயத் தலைவன் ஈடொன் றில்லான்!
உமைக்கன் பிலிடம் தந்தான் மேவும்
...
ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே! … 7

 

விலையில் லாத இறையன் பேதான்

...வினையைப் போக்கும் இன்பம் சேர்க்கும்

வலையில் சிக்கும் மீனைப் போல

...வலிய மாயை தன்னில் வீழா

நிலையைத் தந்துய் விக்கும் வள்ளல்

...நினைந்து நாளும் துதித்துப் போற்றின்

உலைவை தீர்க்கும் உமையாள் பங்கன்

...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 8

 

உலைவு=சஞ்சலம்

 

பதத்தை மனத்தில் பதித்துப் பாடல்
...
படைத்து அருளை நினைக்கும் அன்பர்க்(கு)
இதத்தை அளித்துக் காக்கும் ஐயன்
...
இதயம் தன்னைக் குடிலாய்க் கொள்வான்
விதத்தில் வேட மேற்று ஆளும்
...
விகிர்தன் எமனை பக்த னுக்காய்
உதைத்துக் கருணை செய்த ஈசன்
...
ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! … 9

 

மயலில் மூழ்கி இறையை எண்ணார்
...
மயர்வைப் போக்கும் குருவாய் வந்தே
துயரில் ஆழ்த்தும் ஊழை வெல்லும்
...
துணிவைத் தந்தே அருளும் தெய்வம்
நயனம் நுதலில் உடைய ஈசன்
...
நதியும் மதியும் உமையும் கொண்டான்
உயரும் தழலாய் ஓங்கி நிற்பான்
...
ஓண காந்தன்தளி சேர் நெஞ்சே! … 10

No comments:

Post a Comment