February 14, 2011

பெற்ற பயன்!

பெற்ற பயன் - (ஒருபா ஒருபஃது)
(
அந்தாதியாக மண்டலித்து வரும் 10 நேரிசை வெண்பாக்கள்
)

சிறப்புறத் தில்லையில் செய்நடம் பேறாம்
பிறப்பிறப் பொன்றிலாப் பெம்மான்!-- மறைப்பாத்
திறக்கும் திருக்கதவம் தெய்வசம் பந்தன்
கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.

கைலைப் பதியவன் காலனைச் செற்றவன்
மெய்யருள் செய்யும் விமலனாம்!-- தையலாள்
மைவிழி தேவி மகிழ்நன் தலந்தொறும்
கைதொழச் செல்லுமென் கால்.

காலெடுத் தாடிடும் கம்பீரன் நீலனாம்
மாலயன் காணா மலையொளியாம்!-- பாலனாம்
வேலவன் தாதைக்கு விண்ணோர் இறைவனுக்குச்
சாலவும் தாழும் தலை.

தலையில் அலைநதி தாங்கிடும் அண்ணல்
கலைமதி ஆர்பரன் காப்பான்! -- குலைவில்
நிலையுறு பக்தியில் நிற்கும் சிவனைக்
கலிதீரக் காணுமென் கண்.

கண்ணுதல் தெய்வக் கருணை நெகிழ்வுற
எண்ணிட ஓடிடும் இன்னலாம்-- பண்ணொடு
சேர்கிற இன்னிசையில் செஞ்சடையன் வான்புகழ்
சீர்தனைக் கேட்கும் செவி.

 

செவியில் மணியொலிக்கத் தேவன் அருள்வேண்டிக்
குவியும் அடியவர்க் கூட்டம்-- கவியுமெய்
அன்பில் அகப்படும் ஆண்டவன் நாமத்தை
நம்பி செபிக்குமென் நா.

நானா விதப்பூவில் நற்றூபப் பூசனையில்
ஆனாத அன்பருளும் ஆண்டவன் -- வானார்ந்தத்
தீச்சுடர்க் கற்பூரச் செம்மணக் காற்றையே
மூச்செனக் கொள்ளுமென் மூக்கு

மூக்கின் உயிர்ப்பினில் மூங்கில் துளைப்பண்ணில்
நாக்கின் மொழியினில் நம்பனுளான் -- பாக்களில்
ஆழ்ந்த பொருளாய் அருள்பவன் தாளிடை
வீழ்ந்து பணியுமென் மெய்.

மெய்யினில் வெண்ணீறு மேவிட அஞ்சலருள்
கையில் கனலேந்தும் கைலாயன் -நைய
அலைந்திடும் ஓடுடை அரனின் தயையே
நிலையாய் நினையுமென் நெஞ்சு.

நெஞ்சில் நினைந்து நெடுஞ்சாண் கிடையாகத்
தஞ்சமவன் என்றே சரணடைவம்--விஞ்சையருள்
புனிதன் தாளினைப் போற்றிப் பணியும்
மனிதப் பிறவி சிறப்பு.

No comments:

Post a Comment