January 29, 2011

தேரோடும் திருவிடை மருதூர் !

நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா.

முறைகேட்ட ஆவினுக்கும்,முன்வந்து நீதிதந்துக்
குறைதீர்த்த அரசனுக்கும் கொடுத்தவருள் நினைந்தன்பர்
பிறைச்சடையன் மீதுற்ற பேரன்பில் வடம்தொட்டே
சிறப்பாகத் தேரோடும் திருவிடை மருதூரே ! ..1

ஊணாக உயிராக உற்றிடுமோர் துணையாகக்
காணாத பேரன்புக் கடவுளவன் திகழுமிடம்
பூணாக வெண்ணீற்றைப் புனையடியர் பணிந்தேத்தச்
சேணோங்கு தேரோடும் திருவிடை மருதூரே! ..2

பாந்தமிகு திருநடனம் பரவசமாய் ஆடுமையன்
தீந்தமிழில் தேவாரம் செவிமடுப்போன் விரும்புமிடம்
ஊர்ந்துவரும் ஏறுடையான் உமைநாதன் அடிதொழுதே
சேர்ந்திழுக்கும் தேரோடும் திருவிடை மருதூரே! ..3

குன்றியுளம் படுதுயரைக் குலைத்துபவம் தொலைத்தருள்வோன்
மன்றினிலே நடம்புரியும் மழுப்படையன் மகிழுமிடம்
நன்றினையே நினையுமன்பர் நாதந்தாள் மலர்போற்றிச்
சென்றிழுக்கும் தேரோடும் திருவிடை மருதூரே! ..4

ஏர்மலியும் திருமேனி இலங்குமணி பணியோடு
வேர்,மருவு கொன்றைமலர் மேவுமவன் மகிழுமிடம்
வார்சடையன் பேரன்பர் வாயாரத் துதிசெய்யச்
சீர்மலியும் தேரோடும் திருவிடை மருதூரே! ..5

மருதமர நிழலின்கீழ் மங்கையொரு பங்குடையான்
அருளுருவில் காட்சிதரும் அண்ணலவன் மகிழுமிடம்
பொருவினையைத் தீர்ப்பவன்சீர்ப் புகழடியார்ப் போற்றிசெயத்
திருமலியும் தேரோடும் திருவிடை மருதூரே ! ...6

எவ்விதமும் இணையில்லா எழிலாடல் செய்திடுவான்
திவ்வியனாம் தேசுடைய செஞ்சடையன் மகிழுமிடம்
பவ்வியம்கொள் அடியவர்கள் பரமன்பேர் தொழுதேத்தச்
செவ்விமிகு தேரோடும் திருவிடை மருதூரே! ...7

நிகழ்கின்ற யாவுமவன் நீதியென்று நினையன்பர்
இகழ்வுறினும் அருள்செய்யும் இறைவனவன் மகிழுமிடம்
முகிழ்பக்தி மனமுடையோர் முக்கணனைத் தொழுதேத்தத்
திகழ்கின்ற தேரோடும் திருவிடை மருதூரே! ...8

மருண்டயரச் செய்வினையால் வரும்துன்பம் நீக்குபவன்
சுருண்டமுடி செஞ்சடையன் சொக்கேசன் மகிழுமிடம்
புரண்டுவரும் அலையொலியாய்ப் போற்றுமன்பர் ஒன்றாகத்
திரண்டிழுக்கத் தேரோடும் திருவிடை மருதூரே! ...9

நாவிற்கு மதுரமவன் நாமமது நவின்றிடவே
பாவிற்குள் நின்றருள்வான் பரமனவன் மகிழுமிடம்
கோவிற்கு அடியரெலாம் கொலுவிருப்போன் வீதியுலா
சேவிக்கத் தேரோடும் திருவிடை மருதூரே! ...10

No comments:

Post a Comment