April 25, 2011

திருஒற்றியூர்!

 

கற்றிலா ரெனினுசீர்
ஒற்றியூர் அரன்பதம்
பற்றியே தொழுதிடச்
சுற்றமோ டுயர்வரே....1

உலைவெலாம் அற்றிட
நிலவுசேர் உச்சியன்
மலையனார் ஒற்றியை
வலம்வர பெற்றியே...2


உலைவு = சஞ்சலம்.
உச்சி = உச்சந்தலை.
பெற்றி = பெருமை.

எந்தையாம் ஒற்றியூர்
செந்தழ லன்பதம்
வெந்துயர் தீர்த்தருள்
தந்திடும் மெய்யிதே...3

நற்றவன் ஆதியின்
ஒற்றியை நாடிடச்
சுற்றிடும் ஏதமும்
அற்றிடும் ஓர்கவே...4

ஏதம்=துன்பம்.

அண்ணியன் அன்பினுக்குக்
கண்ணுதல் ஒற்றிநகர்
எண்ணுக என்மனமே
நண்ணிடும் நன்மைகளே...5

இருளென நாளெனவும்
உருளுமிப் பூவுலகில்
குருசிவன் ஒற்றிநினை
வருவினை அற்றிடுமே...6.

பையர வேயணி
மெய்யனி னொற்றியை
நைவினை இற்றிடக்
கைதொழு துய்வரே...7.

இலம்செயும் தீங்கழி
சிலம்பொலி தாளனின்
பலம்தரும் ஒற்றியை
வலம்வர பெற்றியே...8.

இலம்=வறுமை.
பெற்றி=பெருமை.

பயம்கொள எற்றியே
இயமனை செற்றவன்
நயம்தரு ஒற்றிசேர்
பயனதும் வெற்றியே...9.

நியாயமே செய்பவன்
தியாகரா சன்பெயர்
தியானமே செய்திட
கியாதிசேர் ஒற்றியே...10.

கியாதி= புகழ்.

No comments:

Post a Comment