அம்மே எனவழுது அன்றுண்டார் ஞானப்பால்
பெம்மான் உமைபங்கர் பேரருளால்-- எம்மான்
புகழினையேத் தேவாரப் புத்தமுதாய்த் தந்த
புகலியர்கோன் பொற்றாள் புகல்...1
பொங்கலை வானதிப் பூண்ட சடையனைத்
தங்கரங் கொட்டியே சாற்றுகையில்--எங்கும்
புகழொலிக்க ஈசனிடம் பொற்றாளம் பெற்ற
புகலியர்கோன் பொற்றாள் புகல்...2
அல்லும் பகலும் அரனின் நினைவினில்
வெல்லும் எமபயம் மெய்யென்ற-- நல்லன்
சகமிதன்சீர் மேவிடு சம்பந்தன் மாணி
புகலியர்கோன் பொற்றாள் புகல்...3
மழவன் மகள்நோய்தீர் வாடாப் பதிகம்
அழகாய் அருளிய அன்பர்-- குழகன்
உகந்தளிசீர் பல்லக்கில் ஊரும் இளையோன்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...4
நாள்களும் கோள்களும் நல்லன எம்மானின்
தாள்தொழும் அன்பர்க்கே சாலுமென்றார்-- வேளை
மிகவிழித்துத் தீப்படச் செய்தான் அடியர்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...5
திருமடம் தீயரால் தீப்பட நற்பா
அருளி அழலை அணைத்தப் --பெருகும்
தகவதனைப் போற்றிச் சழக்கரை வென்ற
புகலியர்கோன் பொற்றாள் புகல்...6.
கலயம் கொளுநீறை கன்னியாய் மீட்டத்
தலமுறு நற்பதிகம் தந்த -- நலத்தர்
நிகரிலியாய் கூத்திடும் நிர்மலன் அன்பர்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...7.
யுகமும் கணமும் உருளச் சுழன்றே
இகத்தை இனிதாய் இயக்கி -- உகப்பான்
சிகையில் மதிசேர் சிவனருட் செல்வன்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...8.
அருட்கவி அப்பருடன் அன்றுதமிழ் பாடி
திருத்தாழ் திறந்தடைத்த செல்வர்-- விருப்பில்
புகையெரிகான் ஆடிடும் புண்ணியன் மைந்தன்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...9.
சைவ நெறிகள் தழைத்தோங்கச் செய்தவர்
மெய்யாம் வழியில் வென்றவர்-- தெய்வ
மகவாய்த் தலங்கள் வழிபடு தொண்டர்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...10.
No comments:
Post a Comment