விளம் புளிமாங்காய் விளம் புளிமாங்காய் - என்ற வாய்பாடு.
மிடிசெயு பவமென்னும் வினைதரும் தளைநீங்கி
விடுபடு நிலைவேண்டில் விழைவொடு அடைநெஞ்சே
கொடிமண மலரோடு குவிமுகை அவிழ்கொன்றை
கடிமலர் பொழில்சூழும் கழுமல நகர்தானே...1.
உயவினை அளிஊழில் உழல்கிற நிலைதீர
நயமுறு நெறிவேண்டி நலம்பெற அடைநெஞ்சே
இயமனை உதைசெய்தே இணையடி தருவானின்
கயலுகள் வயல்சூழும் கழுமல நகர்தானே...2.
உயவு = வருத்தம்.
செவியணி குழையாடச் சிவநட மிடுகோலம்
குவிகரம் சிரம்கொண்டு குரைகழல் நினையன்பர்
புவிபுகழ் தமிழ்பாடப் புகல்தரும் பதியான
கவினுறு பொழில்சூழும் கழுமல நகர்தானே...3.
கிலிதரும் மரணம்தான் கெடுவென வரும்போது
நலிவினை அடையாமல் நலம்பெற அடைநெஞ்சே
புலியதள் உடையானின் புகலடி நினைவாரின்
கலிமலி விழவாரும் கழுமல நகர்தானே...4.
கெடு = தவணை.
சிறையெனு இகவாழ்வில் தெளிவினைப் பெறவேண்டில்
நிறைவினை அளிநாமம் நிலைபெற அடைநெஞ்சே
நறையுறு மலர்சூடும் நவமெனு மணிநீலக்
கறைமிட றுடையானூர் கழுமல நகர்தானே...5.
தினமரன் புகழ்பாடி திருவருள் தனைநாடி
மனமொழி செயல்மேவி வழிபட அடைநெஞ்சே
சினமுறு நகையாலே திரிபுரம் எரிசெய்தான்
கனவிடை உடையானூர் கழுமல நகர்தானே....6
எனதென உளவென்றும் இறையவன் அருளொன்றே
தினமொரு முறையாகில் சிவனைஎண் வினைதீரும்
மனதவன் வசமாகும் வழிபெற அடைநெஞ்சே
கனலுமிழ் விழியானூர் கழுமல நகர்தானே....7
புதிர்தனில் விடைதேடும் புரிதலில் புவிவாழ்வில்
எதிர்வரு வினைசெய்யும் இடர்கெட அடைநெஞ்சே
சதிர்தனில் உலகுய்யத் தனிநடம் புரிகின்ற
கதிர்மதி அணிவானூர் கழுமல நகர்தானே...8
தொலைதரு வினைமாய்ந்துத் துகளென அருள்வானின்
சொலமிக சுவைநாமம் துணையென அடைநெஞ்சே
பலவகை மலர்சூடும் பணியினை இடைமீதில்
கலைதரி பெருமானூர் கழுமல நர்தானே....9
தொல்லை = தொலை இடைக்குறை.
இணர்மலர் மதிசூடும் எழில்சுடர் சடையோனை
தணலுறு எரிகானில் தனிநடம் புரிவானை
துணையென இமையோரின் துயர்கெட மதில்மூன்றை
கணைகொடு சுடுவானூர் கழுமல நகர்தானே....10
No comments:
Post a Comment