October 09, 2012

அப்பனிடம் ஆலங்காடு

(திருவாலங்காடு)

(எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)

நீலகண் டமொடுசெஞ் சடைசேர் கங்கை
...நிலவுபொன் கொன்றையம் மலரும் சூடி
காலமும் ஆனவன் எமனை எற்றும்
...காலனாய் மாணியைக் காத்த செம்மல்
கோலமுக் கண்ணுதல் எழிலைக் காணக்
...குலைந்திடும் ஊழ்வினை விண்ணோர்க் காக
ஆலமு துண்டருள் செய்த எங்கள்
...அப்பனி டந்திரு ஆலங் காடே....1

மருவறு வெண்பிறைச் சடையன் கையில்
...மான்மழு தீயுடன் சூலம் கொள்வான்
இருவினை தருமிடர் எளிதில் தீர
...இன்னருள் செய்திடும் ஈடில் ஈசன்
கருவுறு பவக்கடல் கடக்கச் செய்வான்
...கண்ணுதல் தருவடி அமர்ந்து தானாய்
அருமறை நால்வருக் குரைக்கும் எங்கள்
...அப்பனி டந்திரு ஆலங் காடே....2

ஊனையும் உயிரையும் உருக்கும் தெய்வம்
...ஒப்பிலா தயையினில் உதிக்கும் அன்பில்
வானையும் மண்ணையும் அண்டம் யாவும்
...மாறிடா கதியினில் வைத்துக் காக்கும்
தானொடு தனதெனும் அகந்தை போக்கும்
...தண்ணருள் தந்தெமைத் தாங்கும் வள்ளல்
ஆனையின் ஈருரி போர்த்த எங்கள்
...அப்பனி டந்திரு வாலங் காடே....3

தழையினை மலரினை சாத்தி,தீரா
...சஞ்சலம் தீர்த்திடும் மலர்த்தாள் போற்றிப்
பிழைமலி வாழ்விதில் பீழை யின்றிப்
...பேற்றினில் உய்வினைப் பெறவும் வேண்டின்
விழைவுடன் இன்னருள் விரைந்து செய்வான்
...வேலையின் விடமுணும் மெய்யன் வெய்ய
அழலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
...அப்பனி டந்திரு வாலங் காடே....4

கனிதனை அம்மையின் கரத்தில் அன்று
...கனிவுடன் ஈந்தமுக் கண்ணன் அன்பர்
நனைமிகு நறுமலர் நற்றாள் தூவி
... நடமிடு கூத்தனை துதிசெய் வாரின்
புனைகிற தீந்தமிழ்ப் பாடல் மாந்தும்
...பூரணன் அருளினை வழங்கும் ஐயன்
அனலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
...அப்பனி டம்திரு வாலங் காடே....5

தங்கமும் வைரமும் சற்றும் ஈடோ
...சங்கரன் தண்ணருள் தானே செல்வம்
செங்கழல் சதங்கையும் செவியில் ஆர்க்க
...சிந்தையில் நிறைந்திடத் தெம்பை வார்க்க
அங்கமும் தேய்ந்திட அரன் தாள் எண்ணி
...அங்கையை ஊன்றியே அம்மை சேரும்
அங்கியைக் கையினில் ஏந்தி ஆடும்
...அப்பனி டம்திரு வாலங் காடே....6

பிணிபவச் சுழலதில் மீள வேண்டிப்
....பெய்கழல் தொழுபவர் பீழை தீர்ப்பான்
தணிவுறு உயர்தவக் கோலம் கொள்வான்
....தனியனாய்க் கானதில் தங்கும் காடன்
துணியெனப் பிறைதனைச் சூடும் தேவைச்
...சூழ்ந்திடும் கணங்களும் சுற்றி ஆர்ப்ப
அணிகுழல் மலைமகள் காண ஆடும்
...அப்பனி டந்திரு வாலங் காடே. ...7

நீர்க்குமி ழியாகுமிந் நிலையில் வாழ்வில்
...நிலைப்பதும் அவனது நேயம்; எங்கும்
பார்க்கும னைத்துமே பரனாய்க் காணும்
...பத்தியில் உருகிடப் பரிந்து வந்து
தீர்க்குமவ் வினைதனை செந்தாள் கூத்தன்
...துடியுடன் தெறித்திடும் பம்பை நாதம்
ஆர்க்கநள் ளிருளினில் நட்டம் ஆடும்
...அப்பனி .னிடந்திரு வாலங் காடே. ...8

கோதிலன் குணநிறை குன்றா னானின்
...குரைகழல் போற்றிக் கூடும் அன்பில்
நாதியும் அவனென நாடும் அன்பர்
...நடுவினில் துணையென நயமாய் நிற்கும்
நீதியின் உருவவன் நேயச் செம்மல்
...நெறிசெலும் தெளிவினை நெஞ்சில் சேர்க்கும்
ஆதியன் அனலினை ஏந்தி ஆடும்
...அப்பனி டந்திரு வாலங் காடே....9

எங்குளன் எம்பிரான் என்று தேடி
...ஏங்கிடும் எளியரின் இதயம் தன்னில்
தங்குவன்; வெவ்வினைத் தாங்கும் உள்ளம்
...தந்திடும் சங்கரன் தாளைப் போற்றும்
குங்கும முகமலர் குளிர்ந்த பார்வை
...கொண்டவள் கூறுடைக் கோல மேவும்
அங்கணன் அனலினை ஏந்தி ஆடும்
....அப்பனி டந்திரு வாலங் காடே....10

1 comment: