February 25, 2013

திருவதிகை வீரட்டானம்

 

 

(அறுசீர் விருத்தம் - 'காய் காய் காய் காய் மா தேமா' என்ற வாய்பாடு.

1-5 சீர்களில் மோனை.)

 

சிவநெறிசேர்ந் துய்யவெண்ணும் தமக்கைமனம் மகிழவந்த செம்மல் செய்யும்

கவலைதரு வினையகலும் செந்தமிழ்த்தேன் பாவலங்கல் கனிவாய் ஏற்கும்

உவகையினில் அருள்பொழியும் தெய்வமவன் திருநடம்செய் ஒண்தாள் போற்றி

சிவனுறையும் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே....1

 

அல்லெனவும் பகலெனவும் பாராது திலகவதி அரனை வேண்ட

நல்வழியை நாவரசர்க் கருள்செய்து ஆட்கொண்ட நம்பன் மன்றில்

பல்லியமும் முழங்கிடவே ஆடல்செய்வான் கழல்பணியும் பத்தர்க் கன்பன்

செல்வனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீருமன்றே....2

 

அம்மையுடன் ஆடிடுவான் கழல்பற்றித் தமக்கையிறை அருளை வேண்ட

நம்மையனும் இளவலுக்கு சூலைதந்தாட் கொண்டவர்க்கு நன்று செய்ய

மம்மரறு பாவலங்கல் சூட்டிமகிழ் வாகீசர் வணங்கும் தேசார்

செம்மலுறு திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே....3

 

பேரவனுக்(கு) ஆயிரமாய்க் கொண்டிலங்கும் பிறைசூடிப் பெம்மான் செய்யச்

சீரடியை போற்றிமகிழ் நாவரசர் தேவாரப் பண்ணிசையை செவியேற் கின்ற

பூரணன் தன் நுதல்விழியால் முப்புரத்தை எரியாக்கிப் பொடி செய்த

தீரனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே....4

 

சேவமரும் அங்கணன் தன் அடியாரைக் காத்திடவே தேடி வந்து

நோவவரும் வினைதீர்ப்பான் முப்புரத்தை எரிசெய்யும் நுதல்கண் ணன்

பாவடியில் நிறைந்திருக்கும் ஈசனவன் எளியோர்க்கருள் செல்வ னான

தேவனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீருமன்றே....5

 

சஞ்சலங்கள் தருகின்ற வினையிடரைத் தாங்குகின்ற சக்தி வேண்டி

கஞ்சமலர்த் தாள்பற்றிப் பணிந்தேத்தும் அன்பர்க்கே அருள்செய் கின்ற

நஞ்சையணி கண்டமுடன் விண்ணதியும் வான்பிறையும் நயந்த ணிந்த

செஞ்சடையான் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.... 6

 

வெட்டவெளி தன்னில்சுழல் கோளையெல்லாம் இயக்குகின்ற விமலன் மோன

நிட்டையினில் மறைபொருளை கல்லால்கீழ் சீடர்க்கு போதிப் பானின்

நட்டமிடு செங்கழலில் சாற்றுகின்ற பாமாலை நயந்தேற் கின்ற

சிட்டனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.... 7

 

பலவாகும் விளையாடல் விழைவோடு புரிவானை பத்தி யாக

இலையோடு மலர்தூவும் அடியாரின் இடர்யாவும் தீர்த்த ழித்துக்

கலனோடு மழுதீவாட் படையேற்றான் புரமூன்றும் கரியாய் செய்த

சிலையேந்தி திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.... 8

 

புகழ்பொலியும் அருளுரைக்கும் நாவரசர் தமிழ்பாடல் புரிந்து வப்பான்

நிகழ்வதவன் செயலாக நினைவாரின் சித்தமதில் நிற்கு மீசன்

இகழ்வினில்மெய் அன்பர்க்குத் துணையாகக் காக்கின்ற இறைவன் திங்கள்

திகழ்முடியன் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீருமன்றே.... 9

 

புரிந்து = விரும்பி.

 

வெய்யழலாய் ஓங்கியோனை அயன்மாலாம் இருவர்தொழும் விமலன் தானும்

பையரவும் வெண்பிறையும் கங்கையோடு செஞ்சடையில் சூடு கின்ற

தையலுமை பங்குடையான் நாவரசர் பாவலங்கல் தரித்து வந்த

செய்யனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.... 10

 

No comments:

Post a Comment