(கலிவிருத்தம் - 'மா மா மா விளம்' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய மாதரார்")
இருள்செய் ஊழின் இன்னல் இரிந்திட
பொருள்கொள் உய்வாய் புகல்கொள் நெஞ்சமே
தெருள்கொள் எண்கால் சிலந்தி ஆளவே
அருள்செய் அண்ணல் ஆனைக் காவையே....1
இரிந்திட= சாய
தெருள்கொள்=(சிவ பக்தியில்)தெளிவுடைய.
ஒளிக்குள் வானாய் ஓங்கு வான்பெயர்
விளித்து நினைந்து வேண்டு நெஞ்சமே
பிளிற்றும் வேழம் பெறவோர் நற்கதி
அளித்த அண்ணல் ஆனை காவையே....2
பொன்பெற் றாலென் புகழே கொண்டிலென்
அன்புற் றிறைஞ்சி அடைக நெஞ்சமே
முன்புற் றவ்வூழ் முற்றும் தீர்த்தருள்
அன்பத் தனுறை ஆனைக் காவையே....3
வெம்மை செய்தீ வினைகள் நீங்கிடச்
செம்மை நிலையுறச் சேர்க நெஞ்சமே
தம்மை எண்ணி சாற்று வோர்க்கருள்
அம்மை அப்பன் ஆனைக் காவையே....4
சுழலார் வினைசெய் துன்பில் சிக்கியே
உழலா தடைய உரையென் நெஞ்சமே
கழலார் பாதன் கனகக் கொன்றையன்
அழலார் விழியன் ஆனைக் காவையே....5
வலையில் மீனாய் வதைசெய் வெவ்வினை
இலையென் றடைய இறைஞ்சு நெஞ்சமே
தலைவன் மலர்பூந் தாளை காவிரி
அலைகொண் டேத்தும் ஆனை காவையே....6
மாறு படுமிவ் வைய வாழ்வினில்
தேறு தலுற சேர்க நெஞ்சமே
வீறு கொண்டு வேக மாய்விழும்
ஆறு சூடி ஆனைக் காவையே....7
இடுக்கண் தீர எய்து நெஞ்சமே
திடுக்கிட் டதிர சிமைய வெற்பினை
எடுக்க முயன்ற இலங்கை மன்னனை
அடர்த்த அண்ணல் ஆனைக் காவையே....8
இரியும் இன்னல்; இடர்செய் வல்வினை
சரிய எண்ணில் சாற்று நெஞ்சமே
உரியன் அன்பர்க்(கு); உன்னா தார்க்கவன்
அரியன் உறையும் ஆனைக் காவையே....9
சாற்று=சொல்லு.
வெந்து யரற விழைக நெஞ்சமே
சிந்தை சிவமாய்த் திகழ்பேய் அம்மையை
அந்த மிலன்பில் அன்னை யேஎனும்
அந்தி வண்ணன் ஆனைக் காவையே....10
No comments:
Post a Comment