March 19, 2012

கோள் அரா மாலைக் குழகன் (திருக்கயிலை)

 

(1 முதல் 9 பாடல்களில் ஒவ்வொரு பாடலிலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்ற கோள்களுள் ஒரு கோளின் பெயர் அமைந்து வரப் பெற்றது)

('மா புளிமா புளிமா புளிமாங்காய்' என்ற வாய்பாடு)

பொழுதாம் விடியல் எழுஞா யிறுபோல
எழிலார் சுடராய் இலகும் தழல்மேனி
குழுவா யடியார் குவிவார்க் கருள்செய்வான்
மழுவாட் படையன் கயிலை மலையானே....1

சங்கம் வளர்செந் தமிழில் திருப்பாடல்
திங்கள் அணியாய்த் திகழும் சடையானின்
பொங்கும் அருளைப் புகழும் இசையேற்பான்
கங்கை அணிவான் கயிலை மலையானே....2

செவ்வாய் சிரிப்பில் திகழும் குழகன் தான்
எவ்வா றுமவன் இரங்கும் இறையாவான்
அவ்வா றுவகை அவல நிலைவந்து
கவ்வா தருள்வான் கயிலை மலையானே....3

காம, குரோத, மோக, லோப, மத, மாச்சர்யம் என்னும் ஆறுவகை எதிரிகள்.

தூக்கும் திருத்தாள் தொழுவார்க் கிடர்செய்துத்
தாக்கும் வினைகள் சரிய விழியன்பில்
பூக்கும் அரனற் புதன் தன் நிகரில்லான்
காக்கும் கடவுள் கைலை மலையானே....4

உயவுற் றரக்கன் விரலால் நசுக்குண்டே
இயமோ டிறைஞ்சும் இசையைச் செவியாழன்
றுயர்வாள் அளித்த ஒருவன் சிவநாதன்
கயமார் சடையன் கயிலை மலையானே....5

செவி+ஆழ்+அன்று
உயவு=வருததம்.
இயம்=வாத்தியம்.

ஆழ்=ஈடுபாட்டுடன் ஆழ்ந்து.

இராவணன் அகம்பாவத்தில், கைலைமலைப் பெயர்க்க முயல்வதை அறிந்த ஈசன், தன் கால் விரலாலழுத்த, இராவணன் நெருக்குண்டு வருந்தி சாமகானம் இசைத்தான். ஈசன் ,அந்த கானத்தில் ஈடுபட்டு, சந்திரஹாசம் எனும் வாளை அளித்தார்.

 

வெள்ளிப் பனியாய் விளங்கும் மலைமன்னன்
துள்ளும் நதியைச் சுமக்கும் சடைகொண்டான்
கொள்ளும் தயையில் கொடுக்கும் அருளின்பக்
கள்ளைச் சொரிவான் கயிலை மலையானே....6

மறைஆர் திருமா மதுரை நகர்தன்னின்
இறையாய்க் கொலுவில் இனிதாய் அருளீந்தப்
பிறைஆர் சடையன் பலவே சனிருத்தன்
கறையார் மிடறன் கயிலை மலையானே....7

நிலையாய் கதியாய் நிழலாய் எளியோர்க்காய்
இலையே துயரம் எனவே அருளீவான்
அலையார் நதியோ(டு)அராகு ரவம்சூடி
கலைமான் கரத்தன் கைலை மலையானே....8

விரைசேர் அலங்கல் மிளிர நடம்செய்யும்
குரைசே வடிக்கே துநிகர் எனப்போற்றின்
மரை,தீ,மழு,கப் பரைதன் கரம்கொண்டான்
கரைசேர்த் திடுவான் கைலை மலையானே....9

விதிசெய் தளையை விலக்கும் இறையோனை
துதிசெய் பவரின் துணையாய் வருமீசன்
நிதியன் அருள்வான் நிகரில் பரிவோடு
கதியைத் தருவான் கைலை மலையானே....10

No comments:

Post a Comment