March 06, 2012

திருக்கூடலையாற்றூர் !

 

கலிவிருத்தம் - 'விளம் மாங்காய் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு.

ஆடலில் வல்லான் தன் அன்பனின் பண்ணாரும்
பாடலை உவந்தேற்கும் பரிவினில் முதுகுன்றம்
நாடிடும் அவர்தம்மை நம்பனும் வழிகாட்டிக்
கூடவும் வருவானூர் கூடலை யாற்றூரே....1

மொக்குளின் நிகராக முடிவுறும் வாழ்வீதில்
அக்கரம் அஞ்சோதின் அன்பொடு வினைதீர்ப்பான்
இக்குவில் மதவேளை எரித்தவன் சிரமீது
கொக்கிற கணிவானூர் கூடலை யாற்றூரே....2

நாவினில் இனிக்கின்ற நலம்தரும் பெயரானை
பாவினில் இசைத்தோதும் பத்தரின் துணையாவான்
கூவிடும் குயில்கொஞ்சும் குளிர்நிழல் தருமேவும்
கூவிளம் அணிவானூர் கூடலை யாற்றூரே....3

தேன்சுவை பதிகங்கள் செவிமடுத் திடுமீசன்
மீன்விழி உமைபங்கன் வேண்டிய அருள்செய்வான்
கான் தனில் தழலாடி கற்றைவார் சடைமீது
கூன்பிறை அணிவானூர் கூடலை யாற்றூரே....4

கான்=காடு


பல்வகை நிலைகாணும் பத்திசெய் வழிதன்னில்
வெல்வழி இறைதாளை விட்டிடா நினைவாகும்
வல்வினை அகன்றோடும் வாழ்வினைத் தருமீசன்
கொல்விடை அமர்வானூர் கூடலை யாற்றூரே....5

 

வார்சடை அதன்மீது வான்மதி அணிவான்தன்
சார்கிற நிறையன்பில் தனதடி யரைக்காத்துச்
சேர்கிற நிதியாகத் திகழ்ந்திடும் அருளாவான்
கூர்மழு உடையானூர் கூடலை யாற்றூரே....6

வெஞ்சினம் எழவேளை விழித்தெரி படச்செய்தான்
நஞ்சணி கறைகண்டன் நற்றவ குருவாகி
அஞ்சலென் றருள்செய்து அடைக்கலம் தருமீசன்
குஞ்சரத் துரியானூர் கூடலை யாற்றூரே....7

காளமும் அமுதென்றுண் கறைமிட றுடையானும்
நீளவெந் துயர்செய்யூழ் நீங்கிட அருள்தந்துத்
தூளவை யெனதீர்க்கும் தொண்டரின் துணையாவான்
கோளர வணிவானூர் கூடலை யாற்றூரே....8

எங்குளன் இறைவன் தான் என்றவன் அருள்தேடின்
தங்குவன் உளம்தன்னில் தாங்கிநம் வினைதீரப்
பொங்கிடும் தயைசெய்வான் பொலிவுறும் சடைமீது
கொங்கலர் புனைவானூர் கூடலை யாற்றூரே....9

நோற்றிடும் அடியாரின் நோய்செயும் வினைதீர்ப்பான்
ஆற்றினை பிறைதன்னை அழகுடை சிரம்கொண்டான்
சீற்றமும் மிகவன்று சிறுவனுக் கருள்செய்யக்
கூற்றினை உதைத்தானூர் கூடலை யாற்றூரே....10

No comments:

Post a Comment