March 03, 2012

திருமழபாடி

 

வண்ணவிருத்தம் - "தனனா தனனா .. தனதான"

வலைமீ தினிலே.. படுமீனாய்
...வதையே செயுமூ..ழதுவீழும்
கலைசேர் மதிசூ.. டிடுநேசன்
...கழலே தருவான்..துணையாக
நிலையா மிறைவோன்..அருளேதம்
...நினைவா யடியார்..தொழுமீசன்
அலையார் புனல்சேர்.. மழபாடி
...அகலா துறைமா..மணிதானே!...1

துளிவான் நிலவோ..டலையாறும்
...சுருளார் சடைமேல்.. அணியாகி
வெளியே சிவனா.. டிடுமேடை
...விரையார் கழலோன்..நடமாகும்
தளியே அடியார்.. மனமாகும்
...தரு ஆல் நிழல்கீழ்.. குருவாவன்
அளிஆர் பொழில்சூழ்.. மழபாடி
...அகலா துறைமா.. மணிதானே....2

 

பணியோ டலையா.. றதனோடு
...பனிவா .னிலவை.. அணிவானே
தணியா நனிகோ..பமதாலே
...தழலாய்..மதவேள்.. பொடியானான்
பணிவே உருவா .. முழவாரப்
.. படையா ளிபரா .. வியநாதன்
அணியார் பொழில்சூழ் .. மழபாடி
...அகலா துறைமா.. மணிதானே....3

பணி = பாம்பு

பொடி = சாம்பல்

மதவேள் = செருக்குள்ள மன்மதன்.

செடியா யடர்தீ .. வினையாலே
...தெளிவே துமிலா .. துழல்வாரும்
நொடியே அரனா.. மமதோதில்
...நுதலார் விழியோன் .. புகலாவான்
துடியா ரிடையா .. ளுமைநாதன்
...துணையா யிணைதாள் .. தருமீசன்
அடியார் திரளூர் .. மழபாடி
...அகலா துறைமா .. மணிதானே....4


தழையோ மலரோ .. அடிதூவின்
....சதமே அடைவா .. ரருளேதான்
பிழையே செயலா .. யலைவோரும்
....விடையோ .னினைவா .. லுயர்வாரே
விழைவா யரனார் .. புகழோதி
....மிகவே அடியார் .. தொழுமீசன்
அழகார் பொழில்சூழ் .. மழபாடி
....அகலா துறை மா மணிதானே....5

இதமா கிடுமே .. சிவநாமம்
....இணையே இலையே .. இனிதேதான்
முதலா .னவனாய் .. முடிவானான்
....முனமா லடிசேர்.. குருவானான்
சதமா யவனே .. கதியாகும்
....சரணா யடைவா .. ருளமேவும்
அதளா டையினான் .. மழபாடி
....அகலா துறைமா மணிதானே....6

 

நலமே விளைவாய் .. அடைநெஞ்சே
...நடுவாய் விதையாய் .. இறைநேசம்
நிலைபே றுடையான் ..நினைவாகின்
....நிறைவாய் இனிதாய் .. வருவானே
தலையோ டதிலே .. பலிதேர்வான்
....தழலாய் மலையாய் .. அருளீசன்
அலைகா விரிபாய் .. மழபாடி
....அகலா துறைமா .. மணிதானே....7

நறைசேர் மணமோ.. டலர்பூவை
...நவமாய் சரமாய் அணிவானே
கறைசேர் மிடறோன் .. பிறைசூடி
...கழலே சரணாய் .. அடைவாரின்
குறையே கிடவே .. வருமீசன்
...குணமா நிதியாம் .. குருநாதன்
அறைஆர் புனல்பாய்.. மழபாடி
...அகலா துறைமா .. மணிதானே....8

நறை=தேன் என்னும் பொருளில்.

 

சகியா இடராய் .. வினைசூழின்
...சரியா மனமே .. தருவானே
துகிலா யதளே .. உடையானின்
...துதிசேர் இசையே..இனிதாகும்
முகிலார் பனிமா .. மலைநாதன்
...முழவார் ஒலிசேர் .. நடராசன்
அகிலார் புகைசூழ் .. மழபாடி
...அகலா துறைமா .. மணிதானே....9

சகியா = தாங்கொணாத,

விழவார் கொலுவாய்.. எழிலாக
...விடைமீ தமர்வான்.. அருள்நாடிப்
பழமோ டலர்மா.. மலராலே
...பதமே தொழுவார்.. பதியாவான்
தழலா டிடுவான்.. எரிகானில்
...தவமே உருவா..கியமோனி
அழகார் தலமாம்.. மழபாடி
...அகலா துறைமா.. மணிதானே....10

No comments:

Post a Comment