கலிவிருத்தம். 'விளம் விளம் விளம் விளம்' என்ற வாய்பாடு.
இதில் பன்னிரண்டு பாடல்கள்.
(சம்பந்தர் தேவாரம் - 3.35.1 - முன்னைநான் மறையவை ..... தென்குடித் திட்டையே.)
துய்யவெண் பொடிதனில் துலங்கிடும் தூயவன்
ஐயமுண் கலனுடன் அலைந்துமே ஏற்பவன்
செய்யவன் மேவுமூர் தென்குடித் திட்டையை
மெய்யுறப் பணிபவர் வினையெலாம் தொலையுமே....1
ஓர்விழி நுதலினில் உடையசெஞ் சடையவன்
சீர்பெறு திருமுறை செவியுறக் கேட்பவன்
தேர்செலும் விழவுடைத் தென்குடித் திட்டையைச்
சார்கிற அடியவர் தம்வினை சாயுமே....2
துஞ்சிட நமனையே நெஞ்சினில் உதைத்துடன்
கெஞ்சிய சிறுவனுக் கஞ்சலைத் தந்தவன்
செஞ்சடையானுறை தென்குடித் திட்டையை
தஞ்சமென் றடைபவர் சஞ்சலம் தீருமே....3
கன்னலின் வில்லினன் கனல்பட விழித்தவன்
இன்னலில் காத்திடும் முன்னவன் மதியணி
சென்னியன் மேவிடும் தென்குடித் திட்டையை
முன்னிடும் அடியவர் முன்வினை நீங்குமே....4
முன்னுதல்=கருதுதல்.
வரியதள் அணிபவன் மழவிடை ஊர்பவன்
விரிசடை சேர்பிறை மிளிர;புன் நகையினால்
திரிபுரம் எரித்தவன் தென்குடித் திட்டையை
பரிவொடு பணிபவர் பழவினை பாறுமே....5
வெண்பனி மலையினன் விண்ணதிச் சடையினன்
பெண்ணுமை பங்கினன் பிஞ்ஞகன் மருமலி
செண்பக மாலையன் தென்குடித் திட்டையை
கண்பனித் தேத்துவார் கடுவினை கழலுமே....6
வேயினில் கீதமாய் வெளிதவழ் காற்றவன்
நோயினில் மருந்தவன் நோற்றிடு நாமமே
தீயினில் ஆடுவான் தென்குடித் திட்டையை
வாயினால் வாழ்த்துவார் வல்வினை மாயுமே....7
ஒருபது சிரம்தனை உடையவன் செருக்கழித்(து)
அருளினை அளித்தவன் அடியிணைப் போற்றியும்
திருமறை விழைபவன் தென்குடித் திட்டையை
மருவிடும் அடியவர் வல்வினை மாயுமே....8
சூடிய மதிநதி துலங்கிடும் முடியுடன்
ஆடிய அடியையும் அயனரி காணவே
தேடிய சோதியன் தென்குடித் திட்டையை
நாடிய பத்தரை நல்லன நாடுமே....9
கரத்திலோர் மான்மறி கனல்மழு ஏந்திமுப்
புரத்தையே தீயெழப் பொடிசெயும் மன்னவன்
திரைத்தலை அரனுறை தென்குடித் திட்டையை
சிரத்தையாய்த் தொழுபவர் தீவினை சிதறுமே....10
அழுதவன் தாள்பணி அன்பரின் துணையவன்
எழுகதிர் ஒளியவன் இளமதி சடையனின்
செழுவயல் சூழ்தரு தென்குடித் திட்டையை
தொழுபவர் தொல்வினை தூசென விலகுமே....11
ஊர்விடை அமர்பவன் வார்சடை மதியினன்
தார்மலி மார்பினன் ஓர்நுதல் விழியினன்
சீர்மலி சோதியன் தென்குடித் திட்டையை
சேர்பவர் தீவினை தீர்வது திண்ணமே....12
August 11, 2013
தென்குடித்திட்டை ('திட்டை')
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment