August 11, 2013

திருவாஞ்சியம்

(தானன தானதனா தன தானன தானதனா)

ஆலமர் செல்வனவன் அரு மாமறை ஓதியவன்
காலனைக் காய்ந்துதைத்த கழ லன்மத யானையதன்
தோலுடைப் போர்த்தியவன் அருள் செய்பதி ஆவதுதான்
சேலுகள் வாவிகள்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....1

தாணுவென் றேதிகழ்வான் தழ லாடிடும் ஈசனவன்
காணுதற் கேயரிதாம் கழல் நாடிடு வோர்த்துணைவன்
பூணுவன் பாம்பணியாய் புரி வார்சடை யோனுறையூர்
சேணுயர் சோலைகள்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....2

 திங்களை ஏந்துசடை திகழ் செம்மையி லேஒளிர்வான்
சங்கடம் தீர்த்திடுவான் சகம் காத்திடும் உமைபங்கன்
அங்கணன் நீலகண்டன் அடி யாருளம் மேயவனூர்
செங்கயல் பாய்புனல்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....3

ஆரணி செஞ்சடையான் அடல் ஏற்றினில் ஊர்ந்திடுவான்
வாரணி நன்மலர்சேர் வழி பாட்டினி லேமகிழ்வான்
பூரணி பங்குடையான் பொடி பூசிய மெய்யனினூர்
சீரடி யார்திரளும் திரு வாஞ்சிய நன்னகரே....4

ஐய னருள்விரும்பும் அடி யார்மனக் கோவிலுளான்
நைய வரும்வினையை நலிந் தோடிடச் செய்திடுவான்
வைய மெலாம்புரக்கும் மதி சூடிடு வானிடமாம்
செய்யில் கொக்கிரைதேர் திரு வாஞ்சிய நன்னகரே....5

மன்னிய மாமணியாய் மறை ஓதிடும் தெய்வமவன்
கன்னலின் வில்லுடையான் தனை தீயெழச் செற்றவனை
உன்னிட அன்பூறும் உயர் பேருடை வித்தகனூர்
தென்னைகள் ஆர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....6

 ஓங்கழ லாயுயர்ந்தே  ஒளிர் மாமலை ஆனவனின்
பூங்கழல்
  நாடியவன் புகழ் பாடிடு வார்க்கருள்வான்
தேங்கிடு மன்பினிலே திகழ் முக்கணன் மேவிடுமூர்
தீங்கனி ஆர்பொழில்சூழ்
  திரு வாஞ்சிய நன்னகரே....7

என்றுனை கண்டிடுவேன் எனும் நந்தனின் ஏக்கமற
அன்றருள் செய்தபரன் அடி போற்றிடும் அன்பரையே
நன்றுசெய் தாட்கொளும்பாய் நதி சூடிய ஈசனினூர்
தென்றிசைக் கோன்பணியும் திரு வாஞ்சிய நன்னகரே....8

கூன்பிறை சூடியவன் குழை ஆடிட ஆடிடுவான்
தான் தனி
  யானவனாம் தவ மேசெயும் 
செஞ்சடையன்
மான்கர மேந்தியவன் மறை ஓதிடும் சங்கரனூர்
தேன்மலர் ஆர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....9

ஒவ்வுதல் தானிலையென் றுயர் சோதியாய் நின்றவனை
பவ்விய மாயடியார் பர விப்பணி பூரணணாம்
நவ்விகை ஏந்துவானூர் நறை மாமலர்ச் சோலைகளில்
செவ்வழி தேன்முரலும் திரு வாஞ்சிய நன்னகரே....10

ஓவ்வுதல்=ஒப்புதல்
நறை=நறுமணம்.


No comments:

Post a Comment